April 27, 2024
  • April 27, 2024
Breaking News
April 9, 2020

தமிழகத்தில் கொரோனா மூன்றாம் நிலைக்கு செல்ல வாய்ப்பு – முதல்வர்

By 0 605 Views

சென்னை தலைமை செயலகத்தில் இன்று கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அமைக்கப்பட்டுள்ள 12 பணி குழுக்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

தமிழகத்தில் 738 பேருக்கு கொரானா பாதிப்பு உறுதியான நிலையில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

விமான நிலையங்களில் 2.10 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றுள்ளது. 19 ஆய்வகங்கள் மூலம் கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது. 6,095 பேருக்கு இதுவரை சோதனை நடைபெற்றுள்ளது. 344 பேரின் முடிவுகள் வரவேண்டியுள்ளது.

கொரோனா தடுப்புக்கான மருத்துவ உபகரணங்கள் அனைத்தும் கையிருப்பில் உள்ளன. முக கவசம், மாத்திரைகள் போதிய அளவுக்கு உள்ளன. 32,371 தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள் தயாராக உள்ளன. 3371 வெண்டிலேட்டர்கள் தயாராக உள்ளன. 2500 வெண்டிலேட்டர்கள் வாங்க உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளுக்காக 14,525 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.

திருமண மண்டபங்களில் 73,863 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சுமார் 3 லட்சம் வெளிமாநில தொழிலாளர்களின் தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரிசோதனைக்காக 4 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்ஸ் வாங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்றிரவு 50 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கிட்ஸ் வர உள்ளது.

144 தடை உத்தரவை மீறியவர்களிடம் இருந்து ரூ.40 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருள்கள் தங்குதடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களில் இருந்து மளிகைப் பொருள்கள் கூட்டுறவுத்துறை மூலம் வாங்கப்படும்.

கொரோனா வைரஸ் தாக்கத்தை பொறுத்து ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். தமிழகத்தில் 2-ம் நிலையில் உள்ள கொரோனா 3-ம் நிலைக்கு செல்ல வாய்ப்பு உள்ளது.