August 7, 2026
  • August 7, 2026
Breaking News
August 8, 2026

வதந்தி சீசன் 2 – வெப் தொடர் விமர்சனம்

By 0 3 Views

வழக்கமாக தமிழ் சினிமாவில் மதுரையை கதைக்களமாக கொண்டு வரும் கதை என்றாலே முதலில் நமது நினைவுக்கு வருவது சசிகுமாரை தான். அதிலும் பல்லாண்டு பிடித்த ஒரு அடாவடி கேரக்டரில் தான் அவர் நினைவுக்கு வருவார். 

அதை மாற்றி அவரை மதுரை மாவட்டத்தில் இருக்கும் ஒரு உதவி ஆய்வாளராக காண்பிக்க நினைத்ததற்கு இந்த தொடரின் இயக்குனர் ஆண்ட்ரூ லூயிசை பாராட்டியாக வேண்டும்.

அப்படி மதுரையில் நிகழ்ச்சி ஒன்றுக்காக பள்ளம் தோண்டும் போது எலும்புக்கூடு ஒன்று கிடைக்க, அது அரசு நிகழ்ச்சிக்கான முன்னெடுப்பு என்பதால் ஒட்டுமொத்த ஊடகமும் அந்த சம்பவத்தை முன்னிலைப்படுத்துகின்றன. 

அதன் விளைவாக அதை கண்டுபிடிக்கும் பொறுப்பு உதவி ஆய்வாளராக இருக்கும் சசிகுமாரிடம் வழங்கப்படுகிறது.

சிதைந்த நிலையில் இருக்கும் அந்த எலும்புக்கூட்டை வைத்துக்கொண்டு விசாரணையை தொடங்கும் சசிகுமார், மேலும் ஒரு எலும்புக்கூடு புதைக்கப்பட்டிருப்பதை கண்டு பிடிக்கிறார். அத்துடன் இரண்டு எலும்புக்கூடுகளும் பெண்களாக இருப்பதுடன் அவர்கள் கொலை செய்யப்பட்டதையும் கண்டுபிடிக்க, அது தொடர்பாக மணி என்பவருக்கு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்.

வழக்கு முடிந்து விட்டதாக ஊர் நம்பினாலும் சசிகுமாரின் போலீஸ் மூளை அதை ஏற்க மறுக்கிறது. இதன் பின்னணியில் உண்மை குற்றவாளி வேறு யாரோ என்று அவரது உள்ளுணர்வு சொல்ல அது தொடர்பாக மேலும் அந்த வழக்குகள பயணிக்கும் அவர் நினைத்தது சரிதானா அப்படியெனில் கைது செய்யப்பட்ட யுவராஜ் யார் அவர் என் மௌனம் சாதிக்க வேண்டும் என்பது போன்ற பல கேள்விகளுக்கும் இந்த தொடர் விளக்கம் அளிக்கிறது.

வழக்கமான இது போன்ற கிரைம் திரில்லர்கள் ட்ரீட்மென்ட் அமைக்கப்படும் பது  பார்வையாளர்களாகிய நாம் எந்த கோணத்தில் சிந்திப்போமா அதற்கு நேர் எதிர் கோணத்தில் நின்று சிந்தித்து நமது யூகங்களை உடைத்து நொறுக்குவது தான் சிறந்த திரைக்கதையாக இருக்கும்.

அந்த வகையிலேயே பரபரப்பான திருப்பங்களுடன் ஆண்ட்ரூ லூயிஸ் இதன் திரைக்கதையை எழுதியிருக்கிறார்.

அத்துடன் கொலை அதற்கான பின்னணி விசாரணை என்று கதை நகர்ந்து கொண்டிருக்காமல் அவற்றைக் கடந்த இளசுகளின் காதல், இல்லற உறவு, தமிழ் இளைஞர்களின் பாரம்பரிய பண்பாட்டு உணர்வுடன் ஒரு சர்வதேச விஷயத்தையும் தொட்டு இதன் திரைக்கதையை திறம்பட எழுதி இருக்கிறார் ஆண்ட்ரூ லூயிஸ்.

இப்போது கதையின் நாயகனாக நடித்திருக்கும் சசிகுமாருக்கு வருவோம். மூசா ராசா என்ற உதவி ஆய்வாளர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சசிகுமார், வீணான மிடுக்கையெல்லாம் தனது உடல் மொழியில் காட்டாமல் இயல்பான ஒரு காவல் அதிகாரியாக நடித்திருப்பதை பாராட்டலாம்.

அவரது ட்ரேட் மார்க் ஆனா திரைப்படங்களின் நடிப்பு போலவே இந்த தொடருக்காக பயன்படுத்தி இருக்கும் இயல்பான உடல் மொழியை ரசிக்க முடிகிறது.

அவரை அடுத்து எஸ்.பி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அனகாவுக்கு அவரது காக்கி நேர சீருடை எத்தனை அழகாக பொருந்தி இருக்கிறதோ அதேபோன்று அந்த கதாபாத்திரமும் சிறப்பாக பொருந்தி இருக்கிறது.

முடக்கத்தான் மணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அறிமுக நடிகர் யஷ்வந்த், மதுரை மாவட்ட இளைஞராக மிரட்டியிருக்கிறார். மாடு பிடிப்பதில் காட்டும் ஆர்வம், அதில் வெற்றி பெற்றதை நண்பர்களிடம் விளக்குவது, காதல் காட்சிகள் என்று மதுரை இளைஞராகவே வலம் வருபவர், தனது ஒவ்வொரு அசைவுகள் மூலமாகவும் கனவம் ஈர்க்கிறார்.

’டாடா’ என்ற வெற்றி படத்தில் நடித்தும் நீண்ட வருடங்களாகவே தமிழ் சினிமாவில் ஆளே காணாமல் போன அபர்ணா தாஸ், இந்த தொடர் மூலம் தலைக்காட்டியிருந்தாலும், மிக மிக சாதாரண கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சசிகுமாரின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அவரது கதாபாத்திரத்திற்கு திரைக்கதையில் எந்தவிதமான முக்கியத்துவமும் இல்லை.

முடக்கத்தான் மணியின் காதலியாக நடித்திருக்கும் ரேவதி, ‘வதந்தி’ முதல் சீசனில் நடித்த அதே ராமர் கதாபாத்திரமாக பயணிக்கும் விவேக் பிரசன்னா ஆகியோரும் தங்களது பணியை குறையின்றி செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் சரவணன் ராமசாமி, கிரைம் திரில்லர் என்பதால் அதிகமான இருளை பயன்படுத்தாமல், இயற்கையின் வெளிச்சத்தில் ரம்மியமான வண்ணத்தில் காட்சிகளை படமாக்கி ரசிக்க வைத்திருக்கிறார். கதைக்களம் மற்றும் கதாபாத்திரங்களையும் இயல்பு தன்மை மாறாமல் காண்பித்து கவனம் ஈர்க்கிறார்.

இசையமைப்பாளர் சைமன் கே.கிங் இசையில் பின்னணி இசை தொடருக்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. ஒரு குறிப்பிட்ட இசையை எத்தனை முறை கேட்டாலும் சலிப்படைய செய்யாது. அப்படி ஒரு பீஜியமை கொடுத்து மர்ம முடிச்சுகள் அவிழும் காட்சிகளுக்கு மட்டும் இன்றி அதன் மூலம் அடுத்து என்ன நடக்கும், என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் காட்சிகளின் மீதும் தனது பின்னணி இசை மூலம் பார்வையாளர்களின் முழு கவனத்தையும் ஈர்த்து விடுகிறார்.

இணையத் தொடர்களில் படத்தொகுப்பாளர்களின் பணி மிக முக்கியமானது, அதிலும் கிரைம் திரில்லர் என்றால் ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு சஸ்பென்ஸையாவது நிச்சயம் சொல்ல வேண்டும், என்ற சவாலை மிக சாமர்த்தியமாக எதிர்கொண்டிருக்கும் படத்தொகுப்பாளர் ரிச்சர்ட் கெவின்.ஏ, சஸ்பென்ஸ் காட்சிகளுடன் மதுரை மாவட்ட மக்களின் வாழ்வியலையும் ரசிக்கும்படி தொகுத்திருக்கிறார்.

கலை இயக்குநர் மீவின்னின் பணியும் கவனம் ஈர்க்கிறது. ஜல்லிக்கட்டு போட்டியை காட்சிப்படுத்திய விதம் மற்றும் பழைய காவல்துறை ஆகியவற்றை உண்மைக்கு நெருக்கமாக வடிவமைத்திருக்கிறார்.

வழக்கமாக இது போன்ற இணைய தொடர்களின் சுவாரசியமே அடுத்த அத்தியாயத்தில் என்ன நடக்கப் போகிறது என்பதை முதல் அத்தியாயத்தின் முடிவில் சஸ்பெண்ட் சாக வைப்பதுதான்.

அதை உத்தி இதில் பயன்பட்டிருந்தாலும் சீசன் ஒன்றில் கொலையாளி யார் என்று கண்டுபிடிப்பதாக திரைக்கதை நகர்ந்தது போல் அல்லாமல் இதில் கொலையாளி யார் என்பதை சொல்லிவிட்டு, அந்தக் கொலையாளியை நிரபராதியாக முயற்சிக்கும் ட்ரீட்மென்ட் வித்தியாசப்படுகிறது.

இணைய தொடர்களுக்கு சினிமாவைப் போன்ற கட்டுப்பாடுகள் ஏதும் இல்லாததால் அவர்கள் இஷ்டத்துக்கு வசனங்களையும் சென்சருக்கு பயப்படாத காட்சிகளையும் வைப்பது வழக்கமாகிவிட்ட இந்த காலகட்டத்தில் ஒரு கொலை கதையாக இருந்தாலும் அதையும் குடும்பத்தோடு பார்க்கும் விதமாக நயம் பட சொல்லியிருக்கும் ஆண்ட்ரூ லூயிஸை பாராட்டியாக வேண்டும்.

தொடரை தயாரித்திருக்கும் வால்வாச்சர் பிலிம்ஸ் புஷ்கர் காயத்ரியையும் பாராட்டிதான் ஆக வேண்டும்.

வதந்தி 2 – மூன்றாவது சீசனும் தாராளமாக தயாரிக்கலாம்..!