March 19, 2024
  • March 19, 2024
Breaking News
April 12, 2021

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்த முதல்வர் ஆலோசனை

By 0 416 Views

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

பகல் 12 மணிக்கு கூட்டம் தொடங்கியது. இதில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, உதயகுமார், விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக அரசு அமைத்துள்ள கொரோனா தடுப்பு நிபுணர் குழுவினர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

அதில் பல்வேறு வி‌ஷயங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக 5 அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினார்கள்.

புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது, இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துவது, தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்துவது, பிளஸ்-2 தேர்வை தள்ளி வைப்பது, மேலும் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது ஆகிய 5 திட்டங்கள் குறித்து முக்கியமாக ஆலோசனை நடத்தினார்கள்.

ஏற்கனவே கோவில் திருவிழாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருமண விழாக்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மக்கள் கூடும் தியேட்டர்கள், ஓட்டல்கள், பொழுதுபோக்கு இடங்கள் போன்றவற்றில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதிப்பது என்றும் அறிவிக்கப்பட்டது.

இப்போது மேலும் கட்டுப்பாடுகளை கொண்டு வருவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

கடந்த முறை கொரோனா தாக்கம் மோசமாக இருந்தபோது, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதேபோன்று மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் அது பொருளாதார ரீதியாக கடும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுவிடும்.

எனவே இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாமா என்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் தடுப்பூசி திட்டத்தை இன்னும் வேகப்படுத்தவும் கூட்டத்தில் ஆலோசனை நடத்தினார்கள்.

ஜனவரி 16-ந் தேதி முதல் நாடு முழுவதும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் 1 கோடியே 30 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயித்திருந்தனர். ஆனால் நேற்று வரை 37 லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதற்காக 4,328 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆனாலும் தடுப்பூசி போட வருபவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. இதனால் மக்களிடம் மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்தி அதிகளவில் தடுப்பூசி போடுவது குறித்து இன்று விவாதிக்கப்பட்டது.

மேலும் தடுப்பூசி மையங்களை அதிகப்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தினார்கள். போதிய தடுப்பூசி மருந்து உள்ளதா? கூடுதல் மருந்து வரவழைக்க அடுத்தகட்டமாக செய்ய வேண்டிய பணிகள் தொடர்பாகவும் விவாதித்தனர்.

மேலும் தடுப்பு நடவடிக்கைகளை இன்னும் விரிவுபடுத்துவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்துவது, ஆஸ்பத்திரிகளில் படுக்கைகளை அதிகப்படுத்துவது, கொரோனா சிகிச்சை மையங்களை தயாராக வைத்து இருப் பது, உரிய மருத்துவ ஊழியர்களை தயார் படுத்துவது போன்றவை பற்றியும் விவாதிக்கப்பட்டது.

தற்போது 46 ஆயிரத்து 955 பேர் தமிழ்நாட்டில் சிகிச்சையில் இருக்கிறார்கள். இனியும் நோயாளிகள் அதிகமாக வரும் போது அவர்களுக்கு சிகிச்சை அளிக்க படுக்கைகள் போதாது. எனவே எத்தனை படுக்கைகளை அதிகப்படுத்த வேண்டும் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

தற்போது தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் தினசரி தொற்று 100-க்கும் அதிகமாக உள்ளது. அந்த மாவட்டத்தில் அதிக கவனம் செலுத்த முடிவு செய்யப்பட்டது.

சென்னை நகரை போல பாதிப்பு அதிகமுள்ள மற்ற மாவட்டங்களிலும் தேவையான சிகிச்சை வசதிகளை செய்வது, படுக்கைகளை அதிகப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி அடுத்தகட்ட கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், அரசு தன்னிச்சையாக அறிவித்திட முடியாது. தேர்தல் கமி‌ஷனிடம் அனுமதிபெற்று பின்னர் அறிவிக்கப்படும்.