கொரோனாவும் கொரில்லாவும் – கவிப்பேரரசு வைரமுத்து
கொரோனா விடுமுறை
கொண்டாட்டமல்ல;
கிருமி ஞானம்.
கன்னத்திலறைந்து
காலம் சொல்லும் பாடம்!
ஊற்றிவைத்த கலத்தில்
உருவம்கொள்ளும் தண்ணீரைப்போல்
அடங்கிக் கிடப்போம்
அரசாங்க கர்ப்பத்தில்
இது கட்டாய சுகம்
மற்றும் விடுதலைச் சிறை
மரணம் வாசலுக்கு வந்து
அழைப்புமணி அடிக்கும் வரைக்கும்
காதுகேட்பதில்லை மனிதர் யார்க்கும்
ஓசைகளின் நுண்மம் புரிவதே
இந்த ஊரடங்கில்தான்
இந்தியப் பறவைகள்
தத்தம் தாய்மொழியில் பேசுவது
எத்துணை அழகு!
நீர்க்குழாயின் வடிசொட்டோசை
நிசப்தத்தில் கல்லெறிவது
என்னவொரு சங்கீதம்!
தரையில் விழுந்துடையும்
குழந்தையின் சிரிப்பொலிதானே
மாயமாளவ கெளளையின் மாதா பிதா!
மழையிற் சிறந்த மழை
குளித்துவந்த மனைவின் கூந்தற் சாரல்!
இன்றுதான் நம்வீட்டில்
ஒலியும் ஒலிசார் உடலும் ஒரே இடத்தில்
வாங்குவாரற்று
நமக்கே சொந்தமாகிப் போயின
விற்பனைக்குத் தயாரிக்கப்படும் அதிகாலைகள்
இதுவரை உறவுகளைத்தானே…
இப்போதுதான்
கைகளை மட்டுமே கழுவுகிறோம்
பாம்பு கடித்துச் செத்தவனைவிட
செருப்புக் கடித்துச்…