March 29, 2024
  • March 29, 2024
Breaking News
April 3, 2020

கொரோனாவும் கொரில்லாவும் – கவிப்பேரரசு வைரமுத்து

By 0 512 Views

கொரோனா விடுமுறை
​​​​கொண்டாட்டமல்ல;
​​​​கிருமி ஞானம்.

​​​​கன்னத்திலறைந்து
​​​​காலம் சொல்லும் பாடம்!

​​​​ஊற்றிவைத்த கலத்தில்
​​​​உருவம்கொள்ளும் தண்ணீரைப்போல்
​​​​அடங்கிக் கிடப்போம்
​​​​அரசாங்க கர்ப்பத்தில்
​​​​இது கட்டாய சுகம்
​​​​மற்றும் விடுதலைச் சிறை
​​​​மரணம் வாசலுக்கு வந்து
​​​​அழைப்புமணி அடிக்கும் வரைக்கும்
​​​​காதுகேட்பதில்லை மனிதர் யார்க்கும்
​​​​ஓசைகளின் நுண்மம் புரிவதே
​​​​இந்த ஊரடங்கில்தான்
​​​​இந்தியப் பறவைகள்
​​​​தத்தம் தாய்மொழியில் பேசுவது
​​​​எத்துணை அழகு!
​​​​நீர்க்குழாயின் வடிசொட்டோசை
​​​​நிசப்தத்தில் கல்லெறிவது
​​​​என்னவொரு சங்கீதம்!
​​​​தரையில் விழுந்துடையும்
​​​​குழந்தையின் சிரிப்பொலிதானே
​​​​மாயமாளவ கெளளையின் மாதா பிதா!
​​​​மழையிற் சிறந்த மழை
​​​​குளித்துவந்த மனைவின் கூந்தற் சாரல்!
​​​​இன்றுதான் நம்வீட்டில்
​​​​ஒலியும் ஒலிசார் உடலும் ஒரே இடத்தில்
​​​​வாங்குவாரற்று
​​​​நமக்கே சொந்தமாகிப் போயின
​​​​விற்பனைக்குத் தயாரிக்கப்படும் அதிகாலைகள்

​​​​இதுவரை உறவுகளைத்தானே…
​​​​இப்போதுதான்
​​​​கைகளை மட்டுமே கழுவுகிறோம்
​​​​பாம்பு கடித்துச் செத்தவனைவிட
​​​​செருப்புக் கடித்துச் செத்தவன் அதிகம்
​​​​புலியடித்து இறந்தவனைவிட
​​​​கிலியடித்து இறந்தவனதிகம்
​​​​அச்சத்திலிருந்து
​​​​அறிவு தயாரிப்போம்
​​​​குப்பையிலிருந்து மின்சாரம்போல்.
​​​​கொரில்லா யுத்தம் செய்கிறது கொரோனா
​​​​நாமும் சற்றே மறைந்து சமர்செய்வோம்
​​​​மரண பயத்திலிருந்து
​​​​மருந்து தயாரிப்போம்
​​​​உலகப் போரின் உயிர்களை விடவும்
​​​​உழவர்குடியின் தற்கொலை விடவும்
​​​​காதல் தோல்வியின் சாவினை விடவும்
​​​​கொரோனா சாவு குறைவுதான்
​​​​நம்புங்கள்!
​​​​விஞ்ஞானத்தின் சுட்டுவிரலுக்கும்
​​​​கட்டை விரலுக்கும் மத்தியில்
​​​​இந்த நச்சுயிரியும் நசுக்கப்படும்
​​​​பூமியின் உயரங்களில்
​​​​ஏறிநின்று கூவுவோம்
​​​​சூரியனில் இரையுண்டு
​​​​பூமிவந்து முட்டையிடும்
​​​​புதுயுகப் பறவைகள் நாமென்று
​​​​எரிமலையில் உலைகூட்டி
​​​​நட்சத்திரங்கள் பொங்கி உண்ணும்
​​​​பூதங்கள் நாமென்று
​​​​
​​​​ஊழி முடிவிலும்
​​​​காற்று உறைந்துறு காலத்திலும்
​​​​சுவாசிக்க மிச்சமிருக்கப் போவது
​​​​கரப்பான் பூச்சியும்
​​​​மனிதப் பூச்சியுமென்று.

​​​​மனிதர் மரிக்கலாம்
​​​​மனிதகுலம் மரிக்காது
​​​​பாதிக்கப்பட்டோர் யாரும்
​​​​பாவிகள் அல்லர்
​​​​எல்லா நோய்க்கும் முதல் மருந்து
​​​​பாசாங்கில்லாத
​​​​பாசம்தான்.

​​​​மாண்டவரை விடுங்கள்
​​​​பசித்தோர் முகம் பாருங்கள்
​​​​வயிற்றுக்குச் சோறிட வேண்டும்
​​​​வாழும் மனிதருக்கெல்லாம்
​​​​பசித்த செவிகளுக்கு –
​​​​சொற்கள் புரியாது
​​​​சோறு புரியும்
*