June 23, 2026
  • June 23, 2026
Breaking News
September 27, 2018

சொன்னதைச் செய்து விவசாயிகளை மகிழ்வித்த விஷால்

By 0 1124 Views

தன் நடிப்புலக பயணத்தில் 25 வது படத்தை விஷால் தொட்டுள்ள திரைப்படம் ‘சண்டக்கோழி 2’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவுடன் ‘விஷால் 25’ என்ற பிரமாண்ட விழா சென்ற திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் மோகன்லால் , இயக்குனர் ஷங்கர் உள்ளிட்ட ஜாம்பவான்கள் கலந்து கொண்டு பேசினார்கள்.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பதவியேற்பு விழாவில் தன் படங்களின் ஒவ்வொரு டிக்கெட்டின் லாபத்திலிருந்து ஒரு ரூபாய் நலிந்த ஏழை விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று விஷால் கூறியிருந்தார். அதன்படி ‘விஷால் 25’ நிகழ்ச்சியில் தேர்தெடுக்கப்பட்ட 30 க்கும் மேற்பட்ட நலிந்த விவசாயிகளுக்கு 11 லட்சத்தை விஷால் வழங்கினார்.

‘துப்பறிவாளன்’ மற்றும் ‘இரும்புத்திரை’ படத்தின் டிக்கெட் விற்றுக் கிடைத்த லாபத்தில் விஷால் இதை வழங்கியுள்ளார். அந்தப் பணத்தை விவசாயிகளிடம் ‘கடைக்குட்டி சிங்கம்’ பட இயக்குநர் பாண்டிராஜை விட்டுக் கொடுக்க வைத்தார் விஷால்.

அதன் பின்னர் பேசிய விஷால், “இது எனக்கு மகிழ்ச்சியான தருணம். விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும். விவசாயிகளுக்கு நம்மால் உதவ முடிகிறது என்பது மிகப்பெரிய விஷயம்.

நாம் 30 விவசாயிகளுக்கு உதவுவதை பார்த்து மேலும் 2 பேர் நாம் உதவியதை விட அதிகமான விவசாயிகளுக்கு உதவுவார்கள். நாம் பலருக்கு முன்னுதாரணமாக உள்ளது மகிழ்ச்சி. இதை போல் எல்லோரும் விவசாயிகளுக்கு உதவி அவர்களின் முன்னேற்றத்துக்கு உதவ வேண்டும்..!” என்றார்.

இயக்குனர் பாண்டிராஜ் பேசும்போது, “விஷால் எதற்கு என்னை விவசாயிகளுக்கான உதவி தொகையை வழங்க சொன்னார் என்று தெரியவில்லை. ஆனால் ஒரு விவசாய குடும்பத்திலிருந்து வந்த எனக்கு அது மிகவும் மகிழ்ச்சியை தந்தது..!” என்றார்.