March 19, 2024
  • March 19, 2024
Breaking News
November 3, 2019

வாரிசு உள்ளவர்கள்தான் வாரிசுதாரர் ஆக முடியும் – முக ஸ்டாலின்

By 0 746 Views

புதுக்கோட்டை, விராச்சிலையில் இன்று நடைபெற்ற தி.மு.க. நிர்வாகியின் இல்ல திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதிலிருந்து…

1967-ல் அண்ணா தலைமையில் தமிழகத்தில் ஆட்சி பொறுப்பு ஏற்றபோது முதன் முதலாக அண்ணா சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அதுதான் சீர் திருத்த திருமணத்திற்கு சட்டப்படியான அங்கீகாரமாக அமைந்தது. அந்த சட்ட முறைப்படி இந்த திருமணம் இங்கு நடந்தேறியிருக்கிறது.

சுயமரியாதையை காப்பதற்காக தந்தை பெரியார் பாடுபட்டார், உழைத்தார். பல தியாகங்கள் செய்தார். கல்லடியும், சொல்லடியும் பட்டார்.

தான் சொல்லக்கூடிய கருத்தால் பிறர் மனம் புண்படுமா என்று யோசிக்காமல் அதை ஆணித்தரமாக சொல்லக்கூடிய ஆற்றல் படைத்தவர் பெரியார். ஆனால் அவருடைய கருத்து மற்றும் கொள்கையில் இருந்து பின்வாங்காமல் வாழைப்பழத்தில் ஊசியை நுழைப்பது போன்று அந்த கருத்தினை மக்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் எடுத்து சொன்னவர் அண்ணா.

இன்றைக்கும் பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் நம்மிடம்தான் இருக்கிறார்கள். அண்ணா, பெரியாரின் மொத்த உருவம்தான் கலைஞர். இப்போதும் நமது ஊன், உதிரம், உயிர் ஆகியவற்றில் இந்த மூன்று தலைவர்களும் கலந்திருக்கிறார்கள். ஆகவே எந்த ஆதிக்க சக்தியும் தமிழகத்தில் வரமுடியாது.

என்னைப்பற்றி விமர்சிக்காதது உண்டா? என்னென்னமோ குறைகள் எல்லாம் சொன்னார்கள். வாரிசுகள் இருப்பவர்கள்தான் வாரிசுதாரர்களாக வரமுடியும். வாரிசு இல்லாதவர்கள் வர முடியாது.

தி.மு.க.வில் எப்படியாவது கலகத்தை, குழப்பத்தை ஏற்படுத்தி இந்த இயக்கத்தை அழித்து விடலாம் என்று நினைத்தார்கள். ஆனால் அழிக்க நினைத்தவர்கள்தான் அழிந்து போனார்கள் என்பது தான் வரலாறு.

கேன்சரை வரவழைக்கும் குட்காவிற்கு மத்திய, மாநில அரசுகள் தடை விதித்துள்ளன. ஆனால் இன்று பெட்டிக்கடை, டீக் கடை, நடைபாதை, பள்ளி, கல்லூரிகள் முன்பு மாமூல் வாங்கிக்கொண்டு குட்கா விற்கப்படுகிறது.

ஏற்கனவே சென்னையில் குட்கா குடோனில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய போது அதில் ஒரு ஆவணம் சிக்கியது. அதில் மாதந்தோறும் யார், யாருக்கெல்லாம் மாமூல் கொடுக்கப்பட்டு வந்தது என்ற பட்டியல் இருந்தது. அதில் முதல் பெயராக அமைச்சர் விஜயபாஸ்கர் பெயரும், அப்போதைய டி.ஜி.பி. ராஜேந்திரன், சென்னை போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் ஆகியோரது பெயர்கள் வரிசையாக இடம் பெற்றிருந்தன.

ஈரோட்டில் பிரபலமான காண்டிராக்டர் அசோக்குமாருக்கு சொந்தமான அன்னை இன்பரா நிறுவனம் ரூ.450 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறையினர் கண்டு பிடித்துள்ளனர். அவருக்கு ரூ.2 ஆயிரம் கோடி ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இதிலும் ஒரு அமைச்சருக்கு தொடர்பு உள்ளது.

ஆனால் அதை நான் இப்போது சொன்னால் பாதகமாக போய்விடலாம். விரைவில் அந்த உண்மை வெளிவரும். தமிழகத்தில் நடைபெற்று வரும் அக்கிரம, அநியாயமான, மக்களை வாட்டி வதைக்கும் ஆட்சி மிக விரைவில் முடியப்போகிறது.

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் 40-க்கு 39 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. அதேபோன்று வருகிற பொதுத் தேர்தலிலும் தி.மு.க. மகத்தான வெற்றி பெறும். நாட்டு மக்களுக்கு நல்ல திட்டங்களை செயல் படுத்துவோம்..!”