January 24, 2026
  • January 24, 2026
Breaking News
September 29, 2018

1000 வழக்குகள் போட்டாலும் எதிர்கொள்வேன் – ஜாமீனில் வெளிவந்த கருணாஸ்

By 0 1174 Views

நடிகரும், சட்ட மன்ற உறுப்பினருமான கருணாஸ் நுங்கம்பாக்கத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முதல் அமைச்சர், துணை கமி‌ஷனர் அரவிந்தன் ஆகியோரை மிரட்டும் வகையிலும் அவதூறு பரப்பும் வகையிலும் பேசிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு கருணாஸ் மனு தாக்கல் செய்ய மனுவை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம் நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்து போட வேண்டும் என்ற நிபந்தனையுடன் கருணாசுக்கு ஜாமீன் வழங்கியது.

இதற்கிடையே கடந்த ஏப்ரல் 10ம் தேதி ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின்போது கருணாஸ் மீது திருவல்லிக்கேணி போலீசார் ஏற்கனவே பதிவு செய்திருந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

எனவே அந்த வழக்கிலும் ஜாமீன் கேட்டு கருணாஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நேற்று மனுவை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம் கருணாசுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் 30 நாட்கள் தவறாமல் தொடர்ந்து கையெழுத்திட வேண்டும்.

இதையடுத்து, கருணாஸ் இன்று காலை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். வெளியே வந்த அவர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தன் மீதான வழக்குகளில் “உண்மை நின்றது, நீதி வென்றது..!” என்றவர், “இதுபோன்று ஆயிரம் வழக்குகள் போட்டாலும் அதை எதிர்கொள்வேன்..!” என்றார்.