February 15, 2025
  • February 15, 2025
Breaking News
  • Home
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தமிழகத்துக்கு கூடுதலாக ஆக்சிஜன் ஒதுக்க முதல்வர் ஸ்டாலின் மோடிக்குக் கடிதம்
May 7, 2021

தமிழகத்துக்கு கூடுதலாக ஆக்சிஜன் ஒதுக்க முதல்வர் ஸ்டாலின் மோடிக்குக் கடிதம்

By 0 657 Views

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் அறிக்கையில் தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்று அறிவித்து இருந்தார். அதில் அரிசி ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் திட்டம் முக்கியமானதாகும்.

தொடர்ந்து தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக இன்று பதவியேற்றார். 
 

பதவி ஏற்றதும் அவரது தந்தை கருணாநிதி, அண்ணா, பெரியார் நினைவிடங்களுக்கு சென்று மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அதன் பிறகு கோட்டைக்கு சென்று முதல்-அமைச்சர் இருக்கையில் அமர்ந்து தனது பணிகளைத் தொடங்கி முதல் பணியாக, 5 முக்கிய கோப்புகளில் அவர் கையெழுத்திட்டார்.

தேர்தல் அறிக்கையில் கூறியபடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டத்துக்கு முதல் கையெழுத்திட்டார். இரண்டு தவணைகளாக வழங்கப்படவிருக்கும் இதில் முதல்கட்டமாக 2 ஆயிரம் ரூபாயை மே மாதத்திலேயே வழங்கும் உத்தரவில் இன்று கையெழுத்திட்டார்.

ஆவின் பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் வீதம் 16ம் தேதி முதல் குறைத்து விற்பனை செய்வதற்கான அரசாணையிலும், 
சாதாரண கட்டண, நகர பேருந்துகளில் பெண்கள் நாளை முதல் இலவசமாக பயணம் மேற்கொள்வதற்கான அரசாணையிலு, கையெழுத்திட்டார்.

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணம் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் வழங்குவதற்கான அரசாணையில் கையெழுத்திட்ட அவர், இதேபோல் புகார் மனுக்களுக்கு 100 நாட்களில் தீர்வு காண புதிய துறை தொடர்பான கோப்பிலும் கையெழுத்திட்டார்.

 
இன்று மாலை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
 
அதன்பின் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் ‘‘தமிழகத்திற்கு கூடுதலாக ஆக்சிஜன் ஒதுக்க வேண்டும். கேரளா, காஞ்சிக்கோடு பகுதியில் இருந்து 40 மெட்ரிக் டன் ஆக்சிஜனை அடுத்த 4 நாட்களுக்கு வழங்க வேண்டும். 20 ஆக்சிஜன் கண்டெய்னர்களை வழங்க வேண்டும்.
 
ஸ்ரீபெரும்புதூரில் இருந்து வழங்குவதை விட 20 மெட்ரிக் டன் அதிகமாக வழங்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.