March 28, 2024
  • March 28, 2024
Breaking News
December 14, 2018

அடங்க மறு நாயகன் ஜெயம்ரவியின் அடக்கம்

By 0 890 Views

“வழக்கமான படங்களிலிருந்து விதிவிலக்காகவும், அதே நேரத்தில் சிறப்பான ஒரு படத்தைக் கொடுக்க நான் விரும்பினேன். தற்போது முடிவடைந்த எங்கள் படத்தைப் பார்க்கும்போது என் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதாக இருக்கிறது.

ஒட்டுமொத்த குழுவும் என் கனவை நனவாக்கி இருக்கிறார்கள். தனிப்பட்ட முறையில் ஒரு பார்வையாளராக இந்தப் படம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இந்த பாராட்டுக்கள் ஒட்டுமொத்த குழுவுக்கும்தான் போய் சேரும். படம் முடிந்து தியேட்டரை விட்டு வெளியே வரும் ஒவ்வொருவரும் இதை உணர்வார்கள்..!” என்றார் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகவிருக்கும் ‘அடங்க மறு’ தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார்.

தனது ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் ‘அடங்க மறு’ படத்தை தயாரித்திருக்கும் சுஜாதா விஜயகுமார் சின்னத்திரையில் எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்தி தற்போது இந்தப்படம் மூலம் பெரிய திரையில் காலடி எடுத்து வைக்கிறார்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வரும் 21ஆம் தேதி இந்தத் திரைப்படத்தை வெளியிட இருக்கிறார்கள். சாம் சி.எஸ் இசையில், சத்யன் சூரியன் ஒளிப்பதிவில், ரூபம் எடிட்டிங்கில் மிகச்சிறப்பாக உருவாகியிருக்கிறது அடங்க மறு.

Adanga Maru

Adanga Maru

மேலும் படத்தின் சிறப்புகள் பற்றிக் கூறிய அவர், “ஜெயம் ரவியின் திறமையான நடிப்பு மற்றும் கதைதேர்வு தாண்டி அவர் அடக்கமும், தன் தயாரிப்பாளர்களுக்கு கொடுக்கும் மரியாதையும் முக்கியமான விஷயம்.

ஒரு தயாரிப்பாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவர் எப்போதும் தயாரிப்பாளர்களை முதல் இடத்திலும், இயக்குனர்களை அடுத்த இடத்திலும் வைத்து மதிக்கிறார். அடங்க மறு அவரது கேரியரில் மிகவும் தனித்துவமான திரைப்படங்களில் ஒன்றாக இருக்கும்.

நாயகி ராஷி கண்ணாவுடன் பணிபுரிந்த பிறகு, அவர் வெறும் அழகு பொம்மையாக மட்டுமல்லாமல், சவாலான கதாபாத்திரங்களிலும் நடிக்கும் அளவுக்கு திறமையானவர் என்பது புரிந்தது.

இயக்குனர் கார்த்திக் தங்கவேல் ஒரு கேப்டனாக படத்தையும், ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் மிகச்சிறப்பாக வடிவமைத்துள்ளார். கதாநாயகன், வில்லன் மட்டுமல்லாமல் ஒரு சின்ன கதாபாத்திரம் கூட படம் முடிந்து போகும்போது நம் மனதில் நிற்கும்..!” என்கிறார் நெகிழ்ந்தபடி.

தயாரிப்பாளர் மகிழ்ச்சிதான் படத்தின் முதல் வெற்றி..!