July 27, 2024
  • July 27, 2024
Breaking News
  • Home
  • Uncategorized
  • சித்த மருத்துவரின் மனத்தில் ஏற்படும் ரசவாதம்தான் ரசவாதி – இயக்குனர் சாந்தகுமார்
May 3, 2024

சித்த மருத்துவரின் மனத்தில் ஏற்படும் ரசவாதம்தான் ரசவாதி – இயக்குனர் சாந்தகுமார்

By 0 87 Views

மௌன குரு, மகா முனி படங்களைத் தொடர்ந்து தன் இயக்கத்தில் அமைந்த மூன்றாவது படமான ரசவாதியை மே – 10 ஆம் தேதி வெளியிடுகிறார் இயக்குனர் சாந்தகுமார். தயாரிப்பாளராகவும் இந்தப்படத்தின் மூலம் இவர் உயர்வு பெற்றிருக்கிறார்.

திரையரங்குகளில் ‘ரசவாதி’ ( தி அல்கெமிஸ்ட்) படம் வெளியாக உள்ள நிலையில், இயக்குநர் சாந்தகுமார் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

அவரிடம், “உங்கள் ஒவ்வொரு படத்துக்கும் ஏன் இவ்வளவு பெரிய இடைவெளி?” என்றால், “படம் தொடர்பான நடிகர்கள் தேர்வு உள்ளிட்ட விஷயங்களால்தான் இடைவெளி ஏற்படுகிறது. இனி அந்த இடைவெளி அதிகம் இருக்காது. ‘ரசவாதி’ படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு எனது அடுத்த படத்தை உடனடியாகத் தொடங்கிவிடுவேன். அதற்கான கதையும் ரெடியாக இருக்கிறது. என்னால் அந்த இடைவெளி ஏற்படுவதில்லை.

மெளனகுரு படம் முடித்துவிட்டு மகாமுனி படத்தின் திரைக்கதை எழுதுவதற்காக கொடைக்கானலில் ஒருவாரம் தங்கலாம் என்று சென்றேன். ஆனால், அங்கு ஐந்து மாதம் தங்கியிருந்தேன். அங்கு நான் தங்கியிருந்த நாட்கள், எனது கொடைக்கானல் அனுபவம் மூலம் எழுதப்பட்ட கதை தான் இது.

படத்தில் ஐந்து முக்கியமான கதாபாத்திரங்கள் இருக்கிறார்கள், அந்தக் கதாபாத்திரங்களின் பயணத்தை உணர்வுப்பூர்வமாகச் சொல்லியிருக்கிறேன்..!” என்றவர் தொடர்ந்து,

“ரசவாதி படத்தில் ஆக்‌ஷன், திரில்லர், காதல் என அனைத்தும் இருக்கிறது. அதிலும் இந்தக் கதையில் அதிகமான ரொமான்ஸ் காட்சிகள் இருக்கிறது. கதைக்கு அது தேவைப்படுகிறது..!” என்றார்.

“இந்தக் கதைக்கு அர்ஜுன் தாஸ் ஏன்..?” என்ற கேள்விக்கு, “இரண்டு விதமான தோற்றத்தில் நாயகனைக் காட்ட வேண்டும், அதற்கு அர்ஜுன் தாஸ் சரியாக இருப்பார் என்று தோன்றியதால்தான் அவரை நாயகனாகத் தேர்ந்தெடுத்தேன். அவர் இதற்கு முன்பு இதுபோன்ற அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், அதன் சாயல் இந்த படத்தில் இருக்காது. அவர் இதில் சித்த மருத்துவராக நடித்திருக்கிறார்.

ஆனாலும் இது சித்த மருத்துவம் தொடர்பான படம் அல்ல, இது ஒரு ஆக்‌ஷன் திரில்லர் காதல் கதைதான்.

அவரைப் போல் மலையாள நடிகர் சுஜித் சங்கர் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். அவர் இதுவரை இவ்வளவு பெரிய வேடத்தில் நடித்ததில்லை. அவருடைய நடிப்பு நிச்சயம் வியப்பைத் தரும், அந்த அளவுக்கு நேரிலேயே அவரது நடிப்பை பார்த்துக் கை தட்டினார்கள். திரையிலும் அது பிரதிபலிக்கும்..!

“தலைப்பின் பொருள் என்ன..?”

‘அல்கெமிஸ்ட்’ என்ற பெயரில் நாவல் இருக்கிறது. ஆனால், இந்தப் படத்தின் கதைக்கும் அந்த நாவலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அதேபோல் ரசவாத வித்தையும் இதில் இல்லை. ஒரு மனித மனத்தின் ரசவாதம்தான் படம். சினிமாவில் இதுவரை இந்தத் தலைப்பு பயன்படுத்தவில்லை, அதனால் அதை பயன்படுத்தியிருக்கிறேன்.

“தயாரிப்பாளராக உருவெடுத்ததற்கு காரணம் என்ன..?” என்றால், “சுதந்திரமாக இயங்கலாம் என்று முடிவு செய்துதான் தயாரிப்பில் இறங்கினேன். நான் எழுத்துப் பணியை முடித்துவிட்டு, படப்பிடிப்புக்குச் செல்வதால், எவ்வளவு நாட்களில் படத்தை முடிப்பேன், என்பது எனக்கு முன்பே தெரிந்துவிடும், அதனால் தயாரிப்பாளராகி விட்டேன்.

குறைந்த நாட்களில் ரசவாதி படத்தை முடித்தும் விட்டேன். ஆனால் நான் எழுதுவதையும், இயக்குவதையும் தான் விரும்புகிறேன், அதை தொடர்ந்து செய்துக்கொண்டிருப்பேன்.” என்றார்.

“உங்கள் ஹீரோக்கள் எப்போதும் இயற்கையிலிருந்து முரண்பட்டு நிற்கிறார்களே..?”

“நான்தானே கதைகளை உருவாக்குகிறேன். அதனால் என்னுடைய குணமும் அப்படி அதில் வெளிப்பட்டு விடுகிறது..!” என்று சிரித்தார் சாந்தகுமார்.

மே 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் ரசவாதி படத்தை சக்தி பிலிம் பேக்டரி சார்பில் பி.சக்திவேலன் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.