பிரபு, கனகா நடிப்பில் வெளியான தாலாட்டு கேக்குதம்மா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ராஜ் கபூர். நடிகர் அஜித்தை வைத்து அவள் வருவாளா மற்றும் ஆனந்த பூங்காற்றே ஆகிய படங்களையும் இயக்கி இருக்கிறார்.
அத்துடன் உத்தமராசா, சுதந்திரம், என்ன விலை அழகே, சமஸ்தானம், குஸ்தி உள்ளிட்ட பல படங்களை இயக்கியிருக்கிறார் ராஜ் கபூர். இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் வம்பு சண்டை.
இயக்குநர் மட்டுமில்லாமல் நடிகராகவும் இருப்பவர் ராஜ் கபூர். ஆனந்த பூங்காற்றே, தாஜ்மகால், ஏழையின் சிரிப்பில், மாயி, வாஞ்சினாதன், தென்னவன், விசில், அய்யா, ஆறு, அரண்மனை 2, வாகா, கொடி, மாயாண்டி குடும்பத்தார், முத்தக்கு முத்தாக உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் வந்தா ராஜாவாதான் வருவேன் படம் வெளியானது.
அதுமட்டுமின்றி சீரியல்களிலும் நடித்துள்ளார் ராஜ்கபூர். சன்டிவியில் ஒளிபரப்பான நந்தினி ,ராசாத்தி தற்போது ஒளிபரப்பாகும் ரன் சீரியலிலும் நடித்து வருகிரார்.
இவருக்கு ஷைலஜா கபூர் என்ற மனைவியும் ஷாரூக் கபூர் என்ற ஒரு மகனும் மற்றும் ஷமிமா கபூர் மற்றும் ஷானியா கபூர் என்ற இரண்டு மகள்களும் இருக்கிறார்கள்.
இந்நிலையில் ராஜ்கபூரின் மனைவியும் அவரது மகன் ஷாரூக் கபூரும் மெக்காவுக்கு புனித பயணம் போனாரகள். அங்கு கடுமையான சளி மற்றும் மூச்சு திணறலால் பாதிக்கப்பட்ட ஷாரூக் கபூர் அங்கேயே உயிரிழந்திருக்கிறார்.
23 வயதே ஆன ஷாரூக் கபூர் திடீரென மரணமடைந்த தகவல் ராஜ்கபூர் மற்றும் அவரது குடும்பத்தினரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி விட்டது.
அவரது உடலை சென்னைக்கு கொண்டு வரும் முயற்சியில் நடிகர் ராஜ் கபூர் ஈடுபட்டுள்ளார். இதனிடையே மெக்காவில் இருந்து உடலை சொந்த ஊருக்கு கொண்டு வருவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை எனத் தெரிகிறது.
தனது ஒரே மகனான ஷாரூக் கபூரை ஹீரோவாக்க வேண்டும் என்ற ஆசையில் இருந்தார் ராஜ் கபூர். இந்நிலையில் அவரது திடீர் மரணம் அவரை உலுக்கியிருக்கிறது.