April 19, 2024
  • April 19, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • கைதி படத்தை விஜய் இன்னும் பார்க்கவில்லை – லோகேஷ் கனகராஜ்
October 24, 2019

கைதி படத்தை விஜய் இன்னும் பார்க்கவில்லை – லோகேஷ் கனகராஜ்

By 0 678 Views

நாளை தீபாவளி வெளியீடாக ‘கைதி’ வெளியாவதாலும், அடுத்து விஜய்64 படத்தை இயக்கி வருவதாலும் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இயக்குநராக மாறியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

கார்த்தி நடிப்பில் இவர் இயக்கிய கைதி தீபாவளிக்கு ரிலீஸாகிறது. படவெளியீட்டை முன்னிட்டு அவர் பத்திரைகையாளர்களை சந்தித்தார். 

“என் முதல் படமான ‘மாநகரம்’ படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்தது நீங்கள்தான். ‘கைதி’ முடியும் போதே எனது அடுத்த பட வேலைகள் ஆரம்பித்து விட்டன. அதனால் உங்களை சந்திக்க முடியவில்லை. இந்த தீபாவளி தின வாழ்த்துக்களோடு உங்களை இன்று சந்திக்கிறேன்..!” என்றவர் கைதி பற்றிப் பேசினார்.

“இந்தப் படம் ஆரம்பிக்கும்போதே ஹீரோயின் தேவைப்படவில்லை. அதற்கான இடம் படத்தில் இல்லை. படம் பார்த்தால் உங்களுக்கும் படம் முடிஞ்சதும் “ஆமா… ஹீரோயின் இல்லை இல்ல…”ன்னு தோணும்.

இரண்டு படங்களும் இரவிலேயே படமாக்கப்பட்டது குறித்துக் கேட்கிறார்கள். இரவுகளிலேயே படம் எடுப்பதை திட்டமிட்டு  செய்யவில்லை. ‘மாநகரம்’ எடுத்தபின் வேறொரு படம் செய்வதாக இருந்தேன். அதை செய்திருந்தால் இந்தக் கேள்வி வந்திருக்காது. மற்றபடி அடுத்த படம் இந்தக்கேள்வியை மாற்றும் என நம்புகிறேன்.

‘கைதி’ படத்தில் கார்த்தியை மையப்படுத்தி தான் கதை. ஹீரோயின் இல்லை எனும் போது கார்த்தியைச் சுற்றி தான் எல்லாமும் நடக்கும். இந்தப்படத்துக்கான ‘லுக்’ ரெடியாகும்போதே அது பருத்தி வீரன் போல இருப்பதாகச் சொன்னார்கள். ஆனால் அந்த எண்ணம் எங்கேயும் படத்தில் வந்துவிடக்கூடாது என உழைத்திருக்கிறோம். அவர் ஒத்துக்கொண்டதால் தான்
இந்தப்படமே உருவானது. இந்தக்கதையை சொன்னவுடனே கார்த்தி ஒத்துக்கொண்டார். அவர் ஒத்துழைப்பு அபாரமானது. அவரே படத்தைத் தோளில் தாங்கியிருக்கிறார்…”

தமிழில் வந்த ‘விருமாண்டி’ மற்றும் ஹாலிவுட்டில் வந்த ‘டை ஹார்ட்’ படத்தின் இன்ஸ்பிரேஷன் என்று கைதியைச் சொல்லலாம்.

படத்தில் ஹீரோயின் இல்லையே தவிர பெண் கதாபாத்திரங்களே இல்லை என்பது நிஜம் அல்ல. இதில் மூன்று முக்கியமான பெண் பாத்திரங்கள் இருக்கிறார்கள். மொத்தப்படமும் இரவில் நாலு மணி நேரத்தில் நடப்பதால் அதற்கான இடம் படத்தில் இல்லை.

இரவில் எடுப்பது சவாலாகத்தான் இருந்தது. இரவு 8 மணிக்குத்தான் முதல் ஷாட்டே வைப்போம் இரவு முழுக்க ஷூட்டிங் என்பதே கஷ்டம் தான். நல்ல டீம் அமைந்தது.

அடுத்து இயக்கும் விஜய்64 படம் பற்றி மற்றொரு தருணத்தில் பேசுகிறேன் அது இப்போது தான் ஆரம்ப கட்ட பணிகளில் இருக்கிறது. அதைப்பற்றி இப்போது எதுவும் சொல்ல முடியாது.

‘கைதி’ படத்தை இன்னும் விஜய் சார் பார்க்கவில்லை. இப்பொழுது தான் வேலைகளே முடிந்தது. என் தயாரிப்பாளரே இன்னும் பார்க்கவில்லை. இனிமேல் தான் எல்லோருக்கும் பார்ப்பார்கள்..!” என்ற லொகேஷ் கனகராஜ் கடைசியாக, “தீபாவளிக்கு ‘பிகில்’, ‘கைதி’ என்று இரண்டு படங்கள் வருகின்றன. இரண்டுமே ஜெயிக்க வேண்டும்.  இரண்டையும் பாருங்கள். நன்றி..!” என்றார்.

  •