துருவங்கள் 16 புகழ் இயக்குநர் கார்த்திக் நரேன் எழுதி இயக்கியிருக்கும் ‘மாஃபியா – பாகம் 1’ படம்தான் இந்த வருடத்தின் எதிர்பார்ப்பு மிக்க படங்களுள் ஒன்றாக அமைந்துள்ளது.
லைக்கா புரடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ள படத்தில் அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவானி சங்கர் படத்தின் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். டீஸர், டிரெய்லர் படு பயங்கர வரவேற்பை பெற்ற நிலையில் பிப்ரவரி 21ந்தேதி படம் வெளியாகவிருக்கிறது.
அருண் விஜய்யின் 25 வருட வெற்றிகரமான சினிமா பயணத்தை பாராட்டி வகையில் ரசிகர்கள் அவருக்கு மாலையிட்டு கேக் வெட்ட வைத்து பத்திரிகையாளர்கள் முன்னிலையில் கொண்டாடினர்.
அப்போது மனம் நெகிழ்ந்த நடிகர் அருண் விஜய் பேசியது…
25 வருடம் சினிமாவில் இருந்ததில் பத்திரிகையாளர்களின் எழுத்து தான் என்னை வடிவமைத்தது. அதற்கு நன்றி..! 25 வது வருடத்தில் எனது முதல் படம் “மாஃபியா”. இயக்குநர் கார்த்திக் பார்வையில் என்னை எப்படி காட்டப்போகிறார் என ஆர்வமாக இருந்தேன். கார்த்திக்கைப் பற்றி எல்லோரும் சொல்லிவிட்டார்கள். ஒரு படத்தை எப்படி வழங்க வேண்டும் எனபதில் படு தெளிவாக இருக்கிறார். அவர் இன்னும் பெரிய அளவில் வர வேண்டும்.
லைகா மிகப்பெரிய ஆதரவாக இருந்தார்கள். கோகுலின் ஒளிப்பதிவு அற்புதம். விவேக்கின் வரிகள் அற்புதமாக இருந்தது. பிரசன்னாவுடன் வேலை பார்த்தது மிகப்பெரிய சந்தோஷம். மிக அர்ப்பணிப்பு மிக்க நடிகர். இந்தப்படத்தில் நிறைய புது விஷயங்கள் முயற்சி செய்துள்ளேன்.
ப்ரியா தமிழ் பேசும் அழகான ஹீரோயின். என்னிடம் ஒருநாள் வந்து “ஷங்கர் சார் படத்தில் ‘இந்தியன் 2’ செய்கிறேன். உங்களுடன் நடித்த பிறகுதான் இந்த வாய்ப்பு கிடைத்தது. ‘நீங்க என் லக்கி சார்ம்’ என்றார். அதுக்கு நான் காரணம் இல்லை. உங்களோட திறமைதான்… என்றேன். இந்தப்படம் எனக்கு மிக முக்கியமான படம். எங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. ஒரு புது அனுபவத்தை இந்தப்படம் தரும்..!”
Arun Vijay Cuts Cake for 25 Years Completed