April 29, 2024
  • April 29, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • நிகழ்வுகள்
  • ஒரு சமூக நிகழ்வை சட்டமும் மீடியாக்களும் படுத்தும் பாடுதான் ஆர் யூ ஓகே பேபி? – லஷ்மி ராமகிருஷ்ணன்
July 2, 2023

ஒரு சமூக நிகழ்வை சட்டமும் மீடியாக்களும் படுத்தும் பாடுதான் ஆர் யூ ஓகே பேபி? – லஷ்மி ராமகிருஷ்ணன்

By 0 130 Views

தமிழில் இருக்கும் பெண் இயக்குனர்களில் முக்கியமானவர் லஷ்மி ராமகிருஷ்ணன். ‘ஆரோகனத்’தில் தொடங்கிய அவரது இயக்கப் பயணம் இப்போது வெளிவரவருக்கும் ‘ஆர் யூ ஓகே பேபி?’ வரை தொடர்கிறது.

மங்கி கிரியேட்டிவ் லேப் பிரைவேட் லிமிடெட் சார்பில் ராம கிருஷ்ணன் தயாரிக்க,  இயக்குனர் ஏ.எல்.விஜய் இணை தயாரிப்பாளராக இணையும் படம் இது.

படத்தைத் தயாரிக்கும் ராமகிருஷ்ணன் வேறு யாருமில்லை, லஷ்மியின் கணவர்தான். லஷ்மியும் அவரது கணவரும் ஏ.எல். விஜய்யுடன் பத்திரிகையாளர்களை சந்தித்தார்கள்.

“அதென்ன ஆங்கிலத்தில் டைட்டில் வைத்து விட்டீர்கள்..?” என்று லஷ்மி ராமகிருஷ்ணனைக் கேட்டால், “இது ரொம்பவும் பொதுவான வாக்கியம். எல்லோருக்கும் தெரிந்த வாக்கியமும் கூட இதை விஜய் சேதுபதி சொல்லக் கேட்கும் போது எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால்தான் இந்த படத்தின் டைட்டில் லுக்கை அவரை வைத்து வெளியிட்டேன். 

அத்துடன் இந்தப் படத்தின் கதையே ஒரு குழந்தையைச் சுற்றிதான் நகர்கிறது. எனவே எப்படிப் பார்த்தாலும் இந்த டைட்டில் சரியானதாகவே இருக்கிறது…” என்றார்.

சமுத்திரக்கனி, அபிராமி நடிப்பில் உருவாகி இருக்கும் ஆர் யூ ஓகே பேபி ? படத்தில் முல்லை அரசி என்பவர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். “யார் இந்த முல்லை அரசி..?

“இந்தப் பாத்திரத்துக்கு சிறிய வயதில் தாயாகும் ஒரு பெண் தேவைப்பட்டாள். அதற்கான தேடலில் இருந்தபோது என்னுடைய எடிட்டர் இந்தப் பெண்ணைப் பற்றிச் சொன்னார். பேப்பர் ராக்கெட் இணையத் தொடரில் நடித்திருந்த இந்தப் பெண்ணை நேரில் வரவழைத்துப் பார்த்தபோது அந்தப் பாத்திரத்திற்கு மிகப் பொருத்தமானவராக இருந்தார். நடிப்பில் பிய்த்து உதறி இருக்கிறார் முல்லை அரசி.

எதிர்பாராத விதத்தில் குழந்தைக்கு தாயாகும் ஒரு பெண்ணின் பாத்திரம் அது. சமூகம் எப்படி எதிர்பார்க்கிறதோ அப்படி இல்லாத ஒரு விஷயத்தை இந்தச் சமூகமும் சட்டமும் முக்கியமாக மீடியாக்களும் எப்படிக் கையாளுகின்றன என்பதுதான் படத்தின் அடி நாதம்..!”

“அப்படியானால் கதையைத் தாங்கிச் செல்லும் முக்கியமான பாத்திரம் ஏற்கும் இந்தப் பெண்ணுக்கு பதிலாக முன்னணி நடிகை ஒருவரைப் போட்டிருக்கலாமே..?”

“வழக்கமான சினிமாவை எதிர்பார்ப்பவர்கள் இதே கேள்வியைத்தான் கேட்டார்கள். ஆனால் என்னைப் பொருத்தவரை ஒரு நடிகருக்கோ நடிகைக்கோ கதை என்பதை விட அந்தப் பாத்திரத்திற்குப் பொருத்தமான நடிகரோ நடிகையோதான் என் எதிர்பார்ப்பாக இருக்கும். அந்த அளவில்தான் கடைசியாக நான் இயக்கிய ஹவுஸ் ஓனர் படத்திலும் விஜியின் மகள் லவ்லினை அறிமுகப்படுத்தினேன். அப்போதும் இதே கேள்வி வந்தது.

இந்தப் படத்திலும் அப்படித்தான். ஆனால் முல்லை அரசியின் நடிப்பைப் பார்த்தால் இந்தக் கேள்வியை நீங்கள் கேட்க மாட்டீர்கள்..”

“பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் சமுத்திரக் கனியை இந்தப் படத்தில் நீங்கள் நடிக்க சம்மதிக்க வைத்தது எப்படி..?”

“எனக்கு அது பெரிய ஆச்சரியம்தான். அவரிடம் இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட்டைக் கொடுத்தேன்.  கொடுத்த அன்று இரவே அந்த ஸ்கிரிப்ட்டை முழுமையாகப் படித்துவிட்டு அடுத்த நாள் காலை “இதில் நான் நடிக்கிறேன்…” என்று சொல்லிவிட்டார். அவரது பங்கும், ஒத்துழைப்பும் இந்தப் படத்தில் முக்கியமானது.

அவருக்கு ஜோடியாக அபிராமி ஒரு இடைவெளிக்கு பின் இதில் நடிக்கிறார். இடையில் அவர் நடிக்காமல் இருந்தாலும் கூட என்னுடன் தொடர்பில் இருந்தார். “எப்போது நாம் இணைந்து வேலை செய்யப் போகிறோம்..?” என்று கேட்டுக் கொண்டே இருந்தார். இந்தப் படத்தில் அதற்கான சரியான வாய்ப்பு கிடைக்க அவரை நடிக்க வைத்தேன்..!”

படத்தில் இன்னொரு சர்ப்ரைஸ், இந்தப் படத்துக்கு இசை ஞானி இசையமைக்கிறார் என்பது.

“எவ்வளவு அனுபவமும் ஞானமும் மிக்கவர் இளையராஜா சார். அதனால் அவரிடம் ஸ்கிரிப்ட்டைத் கொடுத்ததை தவிர வேறு எதுவும் நான் சொல்லவே இல்லை. அவர் அருகில் அமர்ந்து கொண்டு அவர் இசைப்பதை ரசித்தபடி பார்த்துக் கொண்டிருந்தேன். மற்றதெல்லாம் அவரே செய்துவிட்டார்.!” என்ற லஷ்மியைத் தொடர்ந்து தயாரிப்பாளர் ராமகிருஷ்ணன், “நாங்கள் கொடுத்த ஸ்கிரிப்ட்டைப் படித்துவிட்டு அவரைச் சென்று பார்த்த போது படத்துக்கான பாடலையே எழுதித் தயாராக வைத்திருந்தார். அது எங்களுக்கு பெரிய ஆச்சரியம்..!” என்றார்.

“சரி இதில் இணை தயாரிப்பாளராக நீங்கள் எப்படி உள்ளே வந்தீர்கள்..?” என்று ஏ.எல்.விஜய் கேட்டபோது…”என்னுடைய பொய் சொல்ல போறோம் படத்தில்தான் நடிகையாக அறிமுகமானார் லஷ்மி ராமகிருஷ்ணன். அப்போதிலிருந்து அவரைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் செட்டில் நடித்தோம், சென்றோம் என்று இல்லாமல் ஒவ்வொரு விஷயத்தையும் என்னிடம் ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருப்பார்.

அதுவே எனக்கு ஆச்சரியமாக இருக்க திடீரென்று இயக்குனராகவும் ஆகிவிட்டார். இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட்டை எழுதி முடித்தவுடன் என்னிடம் காண்பித்தார். அதில் இம்ப்ரஸ் ஆகித்தான் இந்தப் படத்தின் என்னுடைய பங்கும் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன்..!” என்றார் விஜய்.

இந்தப் படத்தில் இயக்குனர் மிஷ்கினும் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். அது பற்றி லஷ்மியிடம் கேட்டபோது…

“நான் கேட்டவுடன் உடனே ஓகே சொல்லிவிட்டார் மிஷ்கின். என் மீதான நம்பிக்கை அது…” என்றவர், “இந்தப் படத்தில் கிளைமாக்ஸ்சில் 20 நிமிடங்களுக்கு ஒரு கோர்ட் சீன் வருகிறது. மிகவும் ஹைலைட்டான அந்த காட்சியில் நீதிபதியாக நடித்திருக்கிறார் நரேன்.

அந்த ஒரு காட்சியில் மட்டுமே அவர் நடித்திருந்தாலும் டப்பிங் பேசும்போது அவரே அறியாமல் கண்கலங்கி விட்டார். அதுவே இந்தப் படம் சரியாக வந்திருக்கிறது என்பதற்கான சாட்சி..!” என்றார்.

அவரே தொடர்ந்து, “நான் தொலைக்காட்சியில் பிரபலமான ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியைப் போன்ற ஒரு நிகழ்வும் படத்தில் வருகிறது. ஆனால் அதை ஒரு கருவியாக தான் வைத்திருக்கிறேனே தவிர அதுவே முழுப்படமும் ஆகிவிடாது..!” என்றார்.

படம் பார்க்கும் வரை அவர் சொல்வது எல்லாம் உண்மை என்று நாம் நம்பித்தான் ஆக வேண்டும்.