April 26, 2024
  • April 26, 2024
Breaking News
April 21, 2019

கொழும்பு குண்டுவெடிப்பில் 3 இந்தியர் உள்பட 215 பேர் பலி

By 0 583 Views
இலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று எட்டு இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை 215 ஆக உயர்ந்துள்ளது. குண்டுவெடிப்பு இடங்களில் மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நான்கு ஓட்டல்கள் மற்றும் ஒரு குடியிருப்பு வளாகம் அடங்கும்.
 
மேலும் அசம்பாவிதங்கள் நிகழாவண்ணம் தடுக்க இலங்கை முழுவதும் ஊடரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்பில் சில சம்பவங்கள் தற்கொலைப்படை தாக்குதலாக இருக்கலாம் என்ற ஐயம் எழுந்துள்ளது.
மேற்படி குண்டுவெடிப்புகளில் இந்தியா உள்பட அமெரிக்கா, சீனா, வங்காளதேசம், பாகிஸ்தான், டென்மார்க், மொராக்கோ ஆகிய வெளிநாடுகளை சேர்ந்த 35 பேர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
 
லட்சுமி, நாராயண் சந்திரசேகர், ரமேஷ் ஆகிய 3 இந்தியர்கள் உயிரிழந்ததாக இலங்கையில் உள்ள நேஷனல் மருத்துவமனை தெரிவித்துள்ளது என தனது டுவிட்டர் பக்கத்தில் மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜும் குறிப்பிட்டுள்ளார்.
 
இலங்கையிலுள்ள இந்தியர்கள் கொழும்புவில் உள்ள இந்திய தூதரகத்தைத் தொடர்பு கொள்வதற்காக +94777903082, +94112422788, +94112422789 என்ற உதவி மையங்களின் கைபேசி எண்களையும் அவர் அதில் வெளியிட்டுள்ளார்.
 
அத்துடன் இலங்கைக்கு தேவையான மருத்துவ உதவிகள், மனிதாபிமான அடிப்படையிலான அனைத்து உதவிகளுடன், தேவைப்பட்டால் இந்தியாவில் இருந்து மருத்துவர் குழுவை அனுப்பி வைக்கவும் இந்தியா தயாராக உள்ளதாக சுஷ்மா உறுதியளித்துள்ளார்.