தமிழ் சினிமா சாசனப்படி… நல்லவர் என்றால் அது சசிகுமார். நேர்மையானவர் என்றால் தி ஒன் அன்டு ஒன்லி சமுத்திரக் கனிதான்..!
இது சசிகுமார் நாயகனாக இருக்கும் படம். எனவே, அவர் ஒரு நல்லவர்… அதிலும் இதில் ரெம்…..ப நல்லவர்..!
இலங்கையில் வாழ்க்கை நடத்த வசதி இல்லாமல் மனைவி சிம்ரன், மகன்கள் மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ் ஜெகனுடன் கள்ளத்தோணி மூலம் ராமேஸ்வரம் வருகிறார் தமிழரான சசிகுமார். தமிழ்நாட்டில் வசித்து வரும் சிம்ரனின் தம்பி யோகி பாபு அவர்களுக்கு உதவுவதாக வாக்களித்திருக்க, வந்து இறங்கியவுடன் போலீசில் சிக்கி விடுகிறார்கள்.
ஆனால் காவல் நிலையம் செல்லும் வழியிலேயே இந்தக் குடும்பத்தின் நல்ல குணம் புரிந்து அவர்களை விடுவித்து விடுகிறார் தலைமைக் காவலரான ரமேஷ் திலக்.
சென்னையில் அவர்களுக்கு வீடு பிடித்துத் தரும் யோகி பாபு, வாழ்க்கை நடத்தவும் கள்ளத்தனமாக ஆதார் கார்டு, ஓட்டர் ஐடி எல்லாம் பெற்றுத் தருகிறார்.
அவர்கள் தங்கும் ஏரியாவில் இருக்கும் அத்தனை வீடுகளும் ஒருவருக்கொருவர் தொடர்பில்லாமல் தனிமைப்பட்டுக் கிடக்கிறார்கள். அவர்களுடன் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று யோகி பாபு எச்சரித்தும், அவர்களுக்குள் ஒரு இணக்கத்தை சசிகுமார் குடும்பம் ஏற்படுத்தி அந்த ஏரியாவாசிகளின் அன்பைப் பெறுகிறார்கள்.
இன்னொரு பக்கம் ராமேஸ்வரத்தில் யாரோ வைத்த குண்டு ஒன்று வெடிக்க, அங்கு தினந்தோறும் வரும் இலங்கைத் தமிழர்கள் மீது உதவி கமிஷனருடைய பார்வை படுகிறது. அதே நேரத்தில் ரமேஷ் திலக்குக்கும், சந்தர்ப்ப சாட்சியங்கள் சசிகுமார் குடும்பத்தின் மீது சந்தேகத்தை வரவழைக்க, அவர்களைத் தேடி போலீஸ் வலை விரிக்க… என்ன ஆகிறது என்பது மீதிக் கதை.
பிறவியிலேயே சசிகுமார் நல்லவர் என்பதால் அவரது நடிப்பைப் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை. ‘கெக்கே பிக்கே…’ என்று சிரிப்பதிலும், ஊருக்கெல்லாம் உபகாரம் செய்வதிலும் அவரை மிஞ்ச ஆளில்லை என்று ஆகிறது.
சிம்ரனை இவ்வளவு அடக்க ஒடுக்கமாகவும், பாந்தமாகவும் பார்த்ததாக நினைவு இல்லை. முழுக்க குடும்பக் குத்து விளக்காக புடவை அணிந்து வருபவர் அண்டருக்கும் அண்டர்பிளே செய்து ரசிக்க வைத்திருக்கிறார். சிம்ரன், தன் நடிப்பில் குவித்து இருப்பது அதிகபட்ச ரன்(கள்)..!
சசிகுமாரின் மகன்கள் இருவரும் நடிப்பில் அற்புதப்படுத்தி இருக்கிறார்கள். பெரியவன் மிதுனின் சீரியஸ் நடிப்பு தனி ரகம். தந்தையுடன் வாதம் செய்து அவரைப் புரிந்து கொள்ளும் இடம் மிதுனின் நடிப்புக்குச் சான்று.
சின்னவன் கமலேஷ் ஜெகன் வரும் இடங்களெல்லாம் தியேட்டர் அதிரி புதிரி ஆகிறது. மாட்டிக் கொள்ள வேண்டிய இடங்களில் எல்லாம் சட்டென்று புத்திசாலித்தனமான முடிவு எடுத்து, பார்க்கும் அத்தனை பேரையும் கொள்ளை கொள்கிறான். தன் பள்ளி ஆசிரியரைக் கூட விடாமல் ஓட்டுவதில் கமலேஷ் பெற்றிருப்பது அதிக மைலேஜ்.
நீண்ட காலம் கழித்து யோகி பாபு நகைச்சுவையில் நாம் சிரிக்க முடிகிறது. ஆனால் அவரும் ஒரு சில காட்சிகளிலேயே காணாமல் (ராமேஸ்வரம்) போய்விடுகிறார்.
படத்தின் மிகப்பெரிய பலம் நடிகர்களின் தேர்வும் அவர்களிடம் நடிப்பை வாங்கி இருப்பதும்தான்.
நடிப்பு அரக்கன் எம்.எஸ். பாஸ்கர் ஒரு பக்கம் கலக்குகிறார் என்றால் இன்னொரு பக்கம் இளங்கோ குமரவேல் அமைதியாகப் பேசியே திரையை ஆக்கிரமிக்கிறார்.
இளங்கோ குமரவேல் – ஸ்ரீஜா ரவி ஜோடியின் காதலும் நேசமும் வெகு காலத்துக்கு நம் மனதில் நிலைக்கும்.
சீருடையைத் தவிர பகவதி பெருமாளுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டராக இருக்க வேறு எந்தத் தகுதியும் இல்லை என்பதே காமெடிதான். அவரது மகளாக வரும் யோகலட்சுமியும், அவரது காதல்களும் (!) செம க்யூட்.
இதுவரை தமிழ்த் திரை உலகில் எல்லா இயக்குனர்கள் பாணியிலும் புதிய இயக்குனர்கள் படம் எடுத்திருக்கிறார்கள். ஆனால் இயக்குனர் ராதா மோகனின் பாணியை இதுவரை யாரும் பின்பற்றியதாகத் தெரியவில்லை.
அந்தக் குறையை இந்தப் படத்தின் மூலம் தீர்த்து வைக்கிறார் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த்.
ட்ரீட்மெண்டிலும், உரையாடல்களிலும் அத்தனை கலகலப்பு. அதில் முன்பாதி கடந்ததே தெரியவில்லை பின்பாதியில் சென்டிமென்ட் தூக்கலாக இருப்பதால் கொஞ்சம் திரைக்கதை இழுக்கிறது.
ஷான் ரோல்டனின் இசை பக்கா. இயல்பு மீறாத அரவிந்த் விஸ்வநாதனின் ஒளிப்பதிவும் சிறப்பு.
படத்தொகுப்பாளர் பரத் விக்ரமன் பின்பாதியில் கொஞ்சம் கத்திரி போட்டிருக்கலாம்.
படத்தின் ஓட்டத்தில் நிறைகள் நிறைய இருந்தாலும், கதையின் அடிப்படையில் நிறைய கேள்விகள்.
இந்தக் கதை எந்த காலகட்டத்தில் நடக்கிறது என்று தெரியவில்லை. இலங்கைத் தமிழர்கள் இன்னுமா தமிழ் நாட்டுக்கு வந்து குண்டு வைப்பதாக இங்கே நம்பிக் கொண்டிருக்கிறார்கள்..?
அதேபோல் காலம் காலமாக பழகியவர்களிலேயே நல்லவர் கெட்டவர்களை அடையாளம் தெரியாத இந்த சமுதாயத்தில் ஒரு குடும்பத்தை ஒட்டுமொத்த ஏரியாவும் நல்லர்கள்தான் என்று நற்சான்றிதழ் கொடுப்பதும், அவர்களுக்காகக் ‘கதைப்பதும் ‘ சினிமாவில் மட்டுமே சாத்தியம்.
அவ்வளவு நல்லவர்கள்… தமிழ்நாட்டுக்குள் கள்ளத்தனமான ஆவணங்களுடன்தான் இனி வாழ்க்கை நடந்தப் போகிறார்கள் என்பதும் எவ்வளவு தவறான முன்னுதாரணம்..?
டூரிஸ்ட் ஃபேமிலி – கபடமற்ற கள்ளர்கள்..!
– வேணுஜி