April 23, 2024
  • April 23, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • தமிழில் தலைப்பு வைக்கும் சட்டத்தை முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கொண்டுவர வேண்டும் – பேரரசு
January 29, 2023

தமிழில் தலைப்பு வைக்கும் சட்டத்தை முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கொண்டுவர வேண்டும் – பேரரசு

By 0 268 Views

ASW கிரியேஷன்ஸ் மற்றும் JSJ சினிமாஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் ஹென்றி டேவிட் மற்றும் ஜஸ்டின் விஜய் ஆகியோர் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஸ்ட்ரைக்கர்’.

ஜஸ்டின் விஜய் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக வித்யா பிரதீப் நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் ராபர்ட் மாஸ்டர், கஸ்தூரி, அபிநயாஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் படக் குழுவினருடன் இயக்குநர்கள் சுசீந்திரன், பேரரசு, சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன், நடிகர் இமான் அண்ணாச்சி, பாரதமாதா மணிமாறன், நடிகர் ஆர்.எஸ் கார்த்திக், விஜய் டிவி புகழ் நவீன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் இயக்குநர் எஸ்.ஏ பிரபு பேசும்போது, “இந்த படம் பாரா சைக்காலஜி ஹாரர் ஜானரில் உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் கதை பிடித்து போனதால் படத்தின் கதாநாயகனான ஜஸ்டின்தான் இந்த படத்திற்கான தயாரிப்பாளர்களை ஆர்வமுடன் தேடினார்.

யூ டியூப்பில் பார்த்த ‘அஸ்வின்’ என்கிற குறும் படத்திற்கு இசையமைத்திருந்த விஜய் சித்தார்த்தின் இசையால் ஈர்க்கப்பட்டு அவரை இந்த படத்திற்கு இசையமைப்பாளராக தேர்வு செய்தோம். என்னுடைய கல்லூரி காலத்திலிருந்து நண்பராக தொடர்ந்து வரும் ஹரிசங்கர் ரவீந்திரன் இந்த படத்தின் மூன்று பாடல்களையும் எழுதியுள்ளார். பெரிய பாடலாசிரியராக ஒப்பந்தம் செய்யலாமே என முதலில் தயாரிப்பாளர் தயங்கினாலும் ஹரிசங்கர் எழுதிய முதல் பாடலை பார்த்துவிட்டு அனைத்து பாடல்களையும் அவரே எழுதும்படி கூறிவிட்டார்.

‘சக்தி பிலிம் பேக்டரி’ சக்திவேலன் எனக்கு நீண்ட நாட்களாக நெருங்கிய பழக்கம் உள்ளவர் என்பதால் இந்த கதை குறித்து அவ்வப்போது அவரிடம் விவாதித்து அவரது ஆலோசனைகளையும் கேட்டுக் கொண்டேன்.

இந்தப் படத்திற்கு பொருத்தமான டைட்டில் என்பதால், ‘டோரா’ பட இயக்குநர் தாஸ், அவரிடம் இருந்த இந்த ஸ்ட்ரைக்கர் டைட்டிலை எனக்காக கொடுத்தார்…” என்றார்.

பாடலாசிரியர் ஹரிசங்கர் ரவீந்திரன் பேசும்போது, “கவிஞர் கண்ணதாசன் எழுதிய ‘வசந்த கால நதியினிலே’ பாடல் போல, இந்தப் படத்தில் ஒரு பாடலை அந்தாதியில் எழுதியுள்ளேன். இதற்கு முன்னதாக ‘பாசமலர்’, ‘பொன்னூஞ்சல்’, ‘வாணி ராணி’ உள்ளிட்ட பல சீரியல்களில் பாடல் எழுதியுள்ளேன். ‘நீ வருவாய் என’ தொடரின் டைட்டில் பாடலை எழுதியது நான்தான். ஆனால் எதிலுமே என்னுடைய பெயர் இடம் பெறவில்லை. இந்த படத்தில்தான் முதல்முறையாக எனக்கு பாடலாசிரியர் என்கிற அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதை எனது வாய்ப்புக்கான மேடையாக நான் பயன்படுத்திக் கொள்கிறேன்…” என்றார்.

படத்தின் நாயகன் ஜஸ்டின் விஜய் பேசும்போது, “என்னுடைய பயணத்தை ஒரு விஜே ஆகத்தான் ஆரம்பித்தேன். ‘காஞ்சனா’, ‘மெட்ராஸ்’ திரைப்படங்களில் சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் நடித்தேன். எனது நடிப்பிற்கு லாரன்ஸ் மாஸ்டர்தான் பிள்ளையார் சுழி போட்டு துவங்கி வைத்தார். இசையமைப்பாளர் விஜய் சித்தார்த்திடம் அவரது தவறுகளை சுட்டிக் காட்டினாலும், அவரை பாராட்டினாலும் இரண்டையும் ஒரே மாதிரி எடுத்துக் கொள்ளக் கூடிய நல்ல மனிதர். இந்த படத்தை அனைவரும் குடும்பத்துடன் பார்க்கும் விதமாக எடுத்துள்ளோம். இந்த படத்திற்கு பின்னணி இசை அமைத்தவர்களில் விடி மோனிஷ் இந்த நேரத்தில் எங்களுடன் இல்லை என்பது வருத்தமாக இருக்கிறது..” என்றார்.

இயக்குநர் பேரரசு பேசும்போது, “பிரபலமான கதாநாயகர்கள் எல்லாம் பத்து படங்கள் நடித்து ஒரு இடத்தை பிடித்த பிறகுதான் தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குநர்களை, தயாரிப்பாளர்களிடம் கதை சொல்ல அனுப்பி வைப்பார்கள். ஆனால் தனது முதல் படத்திலேயே ஒரு இயக்குநரை தயாரிப்பாளரிடம் கதை சொல்ல அனுப்பிய நடிகர் ஜஸ்டின் நிச்சயமாக ஒரு முன்னணி ஹீரோவாக வருவார்.

ஆங்கிலம் கலக்காமல் பாடல் எழுதிய ஹரிசங்கருக்கு வாழ்த்துக்கள். நானும் பாடல் எழுதிய புதிதில் இவருக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என்று பல பேர் கேட்டார்கள். ஆனால் அடிப்படையில் நான் கவிஞன். அப்புறம்தான் கதாசிரியர்.

அதேபோல எம்.எஸ்.வி., இளையராஜா இவர்களுடைய காலகட்டங்களில் குறிப்பிட்ட அளவிலான பாடலாசிரியர்கள், பாடகர்கள் மட்டுமே இருந்து வந்தார்கள். ஏ.ஆர்.ரகுமான் வந்த பிறகு அந்த நிலை மாறி இன்று பல படங்களில் புதுவிதமான பாடலாசிரியர்களும் பாடகர்களும் இடம் பெற்று வருகிறார்கள். இதுதான் ஆரோக்கியமான விஷயம்.

இந்தப் படத்தில் ஒரு பாடலில் ராபர்ட் மாஸ்டரின் நடிப்பை பார்த்தபோது இவருடன் இணைந்து நடிக்கும் ஹீரோக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்று சொல்ல தோன்றுகிறது.

கலைஞர் கருணாநிதி காலத்தில் தமிழில் டைட்டில் வைத்தால் வரி விலக்கு உண்டு என்கிற ஒரு சட்டத்தை கொண்டு வந்தார். அப்போது வெளியான அனைத்து படங்களுமே தமிழில் டைட்டில் வைத்து வெளியாகின. அஜித்தின் ‘காட்பாதர்’ படம்கூட ‘வரலாறு’ என்று பெயர் மாற்றி வெளியானது. ஆனால் இப்போது பல படங்களுக்கு ஆங்கிலத்தில்தான் டைட்டில் வைக்கிறார்கள். நான்கூட இந்தப் படத்தின் ‘ஸ்ட்ரைக்கர்’ என்கிற டைட்டிலை பார்த்ததுமே போராளி என்கிற படமாக இருக்குமோ என்று நினைத்து விட்டேன். அதனால் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தமிழ்ப் படங்களுக்கு தமிழில் டைட்டில் வைக்க வேண்டும் என்கிற சட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும்.

தமிழகம், தமிழ்நாடு என்று சொன்னால் மட்டும் தமிழ் வாழ்ந்து விடாது.. அதை வாழ வைக்க வேண்டும். அதேபோல இன்று பலரும் இளைஞர்களுக்கு பிடிக்கும் படம் என்று சொல்லி படம் எடுக்க வருகிறார்கள்.. அந்த படங்கள் எல்லாம் ஒரு உயரத்திற்கு மேலே போகாது. குடும்பத்தினர், குழந்தைகள் அனைவருக்கும் பிடித்தமான ஒரு படத்தை எடுக்க முயற்சிக்க வேண்டும். பிரபு என்கிற பெயர் கொண்ட நபர்கள் தமிழ் சினிமாவில் எப்போதுமே வெற்றியாளர்களாகவே வலம் வருகிறார்கள். இந்தப் படத்தின் இயக்குநர் எஸ்.ஏ.பிரபுவும் அப்படி ஒரு வெற்றி இயக்குநராக உருவெடுப்பார்” என்று வாழ்த்தினார்.

‘சக்தி பிலிம் பேக்டரி’ சக்திவேலன் பேசும்போது, “அங்கீகாரத்திற்கு ஏங்கும் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து முயற்சி செய்துள்ளது நல்ல விஷயம். இந்தப் படத்தின் இயக்குநர் எஸ்.ஏ.பிரபு, ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த சமயத்தில் அவரிடம் ஒரு படத்தின் மேக்கிங் வீடியோவை எடுக்கும் பொறுப்பையே நம்பி ஒப்படைத்தார்கள். அந்த அளவுக்கு திறமையான நபர்.

பொதுவாக ஹீரோவுக்கு கதை பிடித்து போனபின் அதன் பிறகு அதில் மாற்றம் செய்தால் அது சரியாக இருக்காது. ஆனாலும் இந்தப் படத்தின் இயக்குநரான பிரபு என்னிடம் இந்த கதை பற்றி இறுதி நேரத்தில் சொன்னபோது அதில் முக்கியமான ஒரு சில ஆலோசனைகளை கூறினேன். ஆனாலும் தயங்காமல் அதை ஏற்றுக் கொண்டு சில மாற்றங்களை செய்து படமாக்கி உள்ளார்.

இசையமைப்பாளர் விஜய் சித்தார்த் மூன்று வித ஜானர்களில் வித்தியாசமான பாடல்களை கொடுத்துள்ளார். நிச்சயம் மிகப் பெரிய இசையமைப்பாளராக அவர் வருவார்..” என்று கூறினார்.

இயக்குநர் சுசீந்திரன் பேசும்போது, “என்னுடைய சித்தப்பா இதுவரைக்கும் என்னை எந்த விழாவிற்கும் அழைத்ததில்லை.. அப்படி அவர் அழைத்துதான் நான் இந்த விழாவுக்கு வந்தேன். ஆனால், இந்த நிகழ்வை பார்க்கும்போது எனக்கு ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தின் விழா போல தோன்றுகிறது. அந்த அளவிற்கு புதியவர்கள் பலரும் ஒன்று சேர்ந்து இந்த படத்தை உருவாக்கியுள்ளார்கள். நிச்சயம் இந்த படம் மிகப் பெரிய வெற்றியைப் பெறும்” என்று வாழ்த்தினார்.

படத்தின் தயாரிப்பாளர் ஹென்றி டேவிட் பேசும்போது, “இது எனக்கு முதல் படம். இந்த படத்தின் கதையை கேட்டதுமே பிடித்தது. நிச்சயமாக அனைவருக்கும் இந்தப் படம் பிடிக்கும். குடும்பத்துடன் பார்க்கக் கூடிய படமாக இது உருவாகியுள்ளது. புதியவரான ஹரிசங்கர் பாடல்கள் எழுதுகிறார் என இயக்குநர் கூறியபோது நம்பிக்கை இல்லாமல் முதலில் தயங்கினேன். ஆனால் முதல் பாடலை பார்த்ததுமே அவர் மீது நம்பிக்கை வந்தது. அந்த அளவிற்கு நல்ல பாடல்களாக கொடுத்துள்ளார்” என்று கூறினார்.

இந்த நிகழ்வில் நேரில் கலந்து கொள்ள முடியாத சூழலில் படத்தின் நாயகி வித்யா பிரதீப், சிறப்பு அழைப்பாளர் திண்டுக்கல் ஐ.லியோனி ஆகியோர் வீடியோ மூலமாக படக் குழுவினருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

பல குரலில் பேசக் கூடிய விஜய் டிவி புகழ் நவீன் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் சேதுபதி ஆகியோரின் குரலில் படக் குழுவினரை வாழ்த்தியதை விழாவிற்கு வந்தவர்கள் அனைவரும் ரசித்து வரவேற்றனர்.