April 24, 2024
  • April 24, 2024
Breaking News
October 2, 2019

சிவகார்த்திகேயன் பட தலைப்பு வெடித்த பிரச்சினை

By 0 616 Views

கேஜேஆர் ஸ்டூடியோஸ் தயாரிக்க மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘ஹீரோ’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது. இந்நிலையில் அப்படத்தலைப்புக்கு உரிமை கோரி அந்த தலைப்பைப் பயன்படுத்த தடை கேட்டிருக்கிறார் டிரைபல் ஆர்ட்ஸ் என்ற நிறுவனத் தயாரிப்பாளர் எம்.மணிகண்டன். அவர் மீடியாக்களுக்கு அனுப்பிய கடிதத்தில்…

“நான் “Tribal Arts” நிறுவனம் சார்பாக தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறேன் (Mem No: 3812). எனது நிறுவனத்தின் பெயரில் கடந்த 04.07.2017- அன்று “ஹீரோ” என்ற படத்தலைப்பினை தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பதிவு செய்து, முறையாக புதுப்பித்து 03.06.2020-ம் ஆண்டு வரை உரிமம் பெற்றுள்ளேன் (Title Ref No : 7123) .

“ஹீரோ” என்ற எங்களது தலைப்பில் ஆனந்த் அண்ணாமலையின் எழுத்து – இயக்கத்தில் , விஜய் தேவரகொண்டா மற்றும் மாளவிகா மோகனன் நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது தொடர்பான செய்திகள் பத்திரிக்கை, தொலைக்காட்சி, மற்றும் அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்துள்ளன.

இந்த சூழ்நிலையில் சில மாதங்களாக தமிழ் மொழியில் KJR studios என்கிற தயாரிப்பு நிறுவனம் “ஹீரோ” என்ற தலைப்பில் வேறொரு கதாநாயகனை வைத்து படம் தயாரிப்பதாக பத்திரிக்கை, தொலைக்காட்சி, சமூக வலைதளங்கள், மற்றும் அனைத்து ஊடகங்களிலும் செய்திகளை வெளியிட்டு வந்தனர்.

இதனை கண்டு தயாரிப்பாளர் சங்கத்தை நாங்கள் அணுகிய போது, அவர்கள் கடந்த 16 ஏப்ரல் 2019 அன்று எங்களது தலைப்பினை பயன்படுத்திவரும் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளருக்கு இப்படத்தின் தலைப்பினை பயன்படுத்தக் கூடாது என்று கெளரவ செயலாளர் திரு. எஸ். எஸ். துரைராஜ் கையொப்பமிட்ட கடிதத்தை அனுப்பி வைத்து, கடிதத்தின் நகலையும் எங்களுக்கு கொடுத்து உறுதி அளித்தார்கள்.

ஆனால் KJR studios தயாரிப்பு நிறுவனம், தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கொள்கை மற்றும் கோட்பாடுகளை மீறி (02.09.2019) அன்று பத்திரிக்கை, தொலைக்காட்சி, சமூக வலைதளங்கள், மற்றும் அனைத்து ஊடகங்களிலும் “ஹீரோ” என்ற தலைப்பில் போஸ்டர்களை வெளியிட்டனர்.
 
ஆகவே இந்த  கடிதத்தின் வாயிலாக KJR studios  தயாரிப்பு நிறுவனத்திற்க்கு ADVOCATE NOTICE அனுப்பபட்டுள்ளது என்பதனை பத்திரிக்கை, தொலைக்காட்சி, மற்றும் அனைத்து ஊடகங்களுக்கும்   தெரிவித்துக்கொள்கிறோம்..!”

என்று குறிப்பிட்டுள்ளார். என்ன செய்யப்போகிறது சிவகார்த்திகேயன் பட டீம்..?