May 1, 2024
  • May 1, 2024
Breaking News
November 3, 2022

நித்தம் ஒரு வானம் திரைப்பட விமர்சனம்

By 0 619 Views

மனித வாழ்வில் இன்பங்களும் துன்பங்களும் நிறைந்தே இருக்கின்றன என்ற நிலையில் துன்பம் வரும்போது துவண்டு விடாமலும் குறைகளையே பெரிதாக நினைத்து, வாழும் வாழ்க்கையே ரணமாக்கிக் கொள்ளாமல் இருக்கவும் வழி சொல்லும் படம் இது.

அதைக் காரண காரியங்களோடு கச்சிதமாக காட்சிப்படுத்தி இருக்கிறார் புதுமுக இயக்குனர் ரா.கார்த்திக்.

நாயகனாக அசோக் செல்வன். அவருக்கு என்ன மச்சமோ தெரியவில்லை, அவர் நாயகனாகவும் படங்களில் எல்லாம் ஒன்றுக்கு மேற்பட்ட நாயகியரே வருகிறார்கள். இதில் அதிகபட்சமாக அவருக்கு மூன்று நாயகியர்.

அம்மா அப்பாவுடன் கூட நட்புறவுடன் இல்லாமல், அலுவலக நண்பர்களுடனும்  இயல்பாகப் பேசிப் பழக்கமில்லாமல் இருக்கும் அசோக் செல்வன் வாழ்க்கையில் எதேச்சையாக ரிது வர்மா வருகிறார்.

சில உண்மைகளை அறிந்து கொள்ள அசோக் செல்வன் மேற்கொள்ளும் ஒரு பயணத்தில் வழித்துணையாக வரும் ரிது வர்மாவுடனான உறவு என்ன ஆகிறது, அசோக் பயணப்பட்டு சென்ற காரியங்களில் அவரால் எதிர்பார்த்து சென்ற உண்மைகளை அறிய முடிந்ததா..? இவற்றுக்கெல்லாம் விடை சொல்லும் கதை.

அசோக் செல்வனின் நடிப்புத் திறமையை வெளிக்கொணர இதில் அவருக்கு நான்கு விதமான பாத்திரங்கள் படைக்கப்பட்டிருக்கின்றன. அவரும் அந்தப் பாத்திரங்களுக்கு உயிர் கொடுக்க முயற்சித்து இருக்கிறார்.

அவற்றுள் கொங்குத் தமிழ் பேசிக்கொண்டு வரும் கேரக்டரை ரொம்பவே ரசிக்க முடிகிறது. முசுடு போல் இருக்கும் மெயின் கேரக்டரில் அங்கங்கே மிஸ்டர் பீன்சை நினைவுபடுத்துகிறார் அசோக்செல்வன்.

படத்துக்குள் ஐந்து நாயகிகள் வந்தாலும் படம் முழுவதும் அசோக்செல்வனுடன் பயணப்படும் கேரக்டர் ரிது வர்மாவுக்கு. அவரும் அதைப் புரிந்து கொண்டு மிக அழகாக அந்த கேரக்டரில் பொருந்தி இருக்கிறார்.

அவர் மட்டுமல்லாது ஷிவாத்மிகா ராஜசேகர் ஏற்றிருக்கும் பாத்திரமும், அதே பாத்திரத்தை இன்னொரு பகுதியில் ஷிவானி ஏற்று நடித்திருப்பதும் நம்மை நெகிழ வைக்கிறது.

இவர்கள் அற்புதமாக நடித்திருந்தாலும் எல்லாரையும் தன் நடிப்பில் தூக்கி சாப்பிடுகிறார் அபர்ணா பாலமுரளி. ஒரு குட்டி ஊர்வசி என்று சொல்லும் அளவுக்கு அப்பாவித்தனமான அந்தப் பாத்திரத்தில் அப்படியே பொருந்திப் போகிறார் அபர்ணா.

மற்ற துணைப் பாத்திரங்களில் வரும் அழகம்பெருமாள், காளி வெங்கட், மாத்யூ போன்றோரும் தங்கள் பாத்திரங்களுக்கு நியாயம் செய்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் சிறப்பம்சமே வித்தியாசமான திரைக்கதைதான். கற்பனைக் கதைகளை நிஜக் கதைகளாக்கி அந்த கதைகளையும் இரண்டு முறை வேறு வேறு நடிகர்களை நடிக்கச் செய்து திரைக்கதை அமைப்பில் புதிதாக ஒரு விஷயத்தை முயற்சி செய்திருக்கும் இயக்குனர் ரா. கார்த்திகை பாராட்டியே ஆக வேண்டும்.

அதேபோல் ஒரு பயண அனுபவமாக சென்னை தொடங்கி இமயமலை வரை பயணப்படும் கதையில் மனித வாழ்க்கையை புரிந்து கொள்ளும் பல நிலைகளை அமைத்து படம் முடியும்போது ஒரு புதிய அனுபவத்தையும், வாழ்க்கையை நேர்மறை சிந்தனையுடன் எதிர்கொள்ளும் நம்பிக்கையையும் கொடுத்திருக்கும் அவருக்கு ஸ்டேண்டிங் ஓவேஷன் கொடுக்கலாம். 

இந்த வித்தியாச திரைக்கதைக்கு இவருக்கு விருதுகள் காத்திருக்கின்றன.

“எல்லோரும் ஒருநாள் சாகப் போறோம்… அதுவரை வழியில் பார்த்து “ஹாய்…” சொல்லும் ஒரு நபருக்கு பதிலுக்கு “ஹாய்…” என்று சொல்லிவிட்டு போவதில் என்ன தடை இருக்கிறது..?” என்று அவர் எழுதியிருக்கும் வசனம் மனித வாழ்வின் மேன்மையை ஒரு வரியில் சொல்லிவிட்டு போகிறது.

கதையின் உண்மைத்தன்மையை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ற செலவுகளை சிக்கனம் இல்லாமல் செய்திருக்கும் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் பாராட்டுக்கள்.

ஒளிப்பதிவாளர் விது ஐயன்னாவுக்கு தனியாக ஒரு பாராட்டு பொக்கே கொடுக்க வேண்டும். அதுவும் இமயத்தில் பறந்து பறந்து அவர் எடுத்திருக்கும் காட்சிகள் அத்தனை ரம்மியம்.

கோபி சுந்தரின் இசையில் அமைந்த பாடல்களும் தரனின் பின்னணி இசையும் படத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறது.

பட ஆரம்பத்தில் மெதுவே நகரும் திரைக்கதை சற்று பொறுமையை சோதிக்கிறது. அதேபோல் குழந்தையிலிருந்து இருக்கும் ஒருவரின் குணம், வாழ்க்கை புரிதலால் சட்டென்று (உடல் மொழி உட்பட) மாறிவிடும் என்பது நம்புவதற்கு இல்லை.

இருந்தாலும் வாழ்க்கை அழகானது என்று நம்பிக்கையை ஏற்படுத்தி இருப்பதால் இந்தப் படம் காலத்தின் தேவை என்பதுடன் கட்டாயம் பார்த்து ரசிக்க வேண்டிய படமாகவும் ஆகிறது.

நித்தம் ஒரு வானம் – புத்தம் புது கானம்..!