April 4, 2026
  • April 4, 2026
Breaking News
April 4, 2026

ரஜினி சார் சொன்னதுதான் மனிதன் தெய்வமாகலாம் படத்தில் நடந்தது..! – நடிகர் தயாரிப்பாளர் சதீஷ்

By 0 16 Views

வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’. இயக்குநர் செல்வராகவன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் குஷி ரவி நாயகியாக நடித்திருக்கிறார். தயரிப்பாளர் சதீஷ் மற்றும் நடிகை கெளசல்யா மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க, மைம் கோபி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். 

ஏ.கே.பிரியன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு கே.ரவி வர்மா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். தீபக் எஸ்.துவாரக்நாத் படத்தொகுப்பு செய்ய, பாக்யராஜ் வெள்ளையன் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார்.

உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. பல தரமான மற்றும் வெற்றி திரைப்படங்களை வெளியிட்டு வரும் சக்தி பிலிம் பேக்டரி சார்பில் பி.சக்திவேலன் இப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.

இந்த நிலையில், ’மனிதன் தெய்வமாகலாம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை, சென்னை, பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்கள்.

நிகழ்ச்சியில் பேசிய செல்வராகவன், “முதலில் சக்தி பிலிம் ஃபேக்டரி பற்றி சொல்லணும். நான் அவர்களின் படங்களை எப்போதுமே கவனித்து பார்த்திருக்கிறேன். அவர்கள் மிகவும் தேர்ந்தெடுத்து படங்களை தயாரிப்பார்கள், ஆனால் எதை எடுத்தாலும் அதைக் பெரிய அளவில், தரமாக மக்கள் முன் கொண்டு சேர்ப்பார்கள். அந்த பேனரில் ஒரு படத்தில் நான் இருக்க வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. அதற்காக மிக்க நன்றி, சார்.

இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு, ஷூட்டிங்கிற்குப் போனபோது ஒரு விஷயம் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. எல்லோரும் ஓய்வில்லாமல் தொடர்ந்து வேலை செய்து கொண்டே இருந்தார்கள். ஒருவித அதிரடியான உழைப்பு அந்த செட்டில் இருந்தது. சில நேரங்களில் பார்த்து, இவர்கள் எப்போது சாப்பிடுறாங்க, எப்போது ஓய்வு எடுக்குறாங்க, என்று கூட யோசித்திருக்கேன். அந்த அளவுக்கு முழு அர்ப்பணிப்புடன் இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் டென்னிஸ். அந்த அசாதாரண உழைப்புக்கு கண்டிப்பாக நல்ல பலன் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்.

தயாரிப்பாளர் சார் பற்றி சொல்லணும்னா, ஆரம்பத்தில் அவரை நான் தனிப்பட்ட முறையில் அறிந்திருக்கவில்லை. ஆனால் பின்னர் பார்த்த போது, இந்த படத்திற்கு அவர் கொடுத்த ஆதரவு மிகப் பெரியது. எங்களுக்கு முழுமையான சப்போர்ட் கொடுத்து, இந்த திட்டத்தை சிறப்பாக நிறைவேற்ற உதவியிருக்கிறார். அதற்காக என் நன்றி.

இசை பற்றி சொல்லணும்னா, நான் சில வரிகள் மட்டும் கேட்டவுடனே “யார் இந்த இசையமைப்பாளர்?” என்று கேட்க வைத்தது. அந்த அளவுக்கு இசை மிகவும் இனிமையாகவும், தரமாகவும் இருந்தது. இந்த படத்திற்கு அருமையான இசையை கொடுத்திருக்கிறார். அவருக்கு என் பாராட்டுகள். அதேபோல், இந்த படத்தில் உழைத்த அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் தங்கள் பங்களிப்பை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்கள். அனைவருக்கும் என் நன்றி.

கௌசல்யா மேம் பற்றி சொல்லணும்னா, திரையில் பார்த்த அளவுக்கு கூட, நேரில் இன்னும் அமைதியான, மென்மையான மனிதர். அவருடன் பணியாற்றியது ஒரு நல்ல அனுபவம். அதற்கு முழுக்க எதிர்மாறாக குஷி, அவங்க எங்க இருந்தாலும் அந்த இடமே சந்தோஷமா இருக்கும் மாதிரி ஒரு positive energy. எப்போதும் சிரிப்புடன் இருப்பது ஒரு பெரிய வரம். அந்த எனர்ஜி எல்லாருக்கும் பரவுவது இந்த படத்திலும் தெரியும். மொத்தத்தில், இது ஒரு அருமையான டீம். இந்த குழு இன்னும் பெரிய உயரத்தை அடைய வேண்டும் என்று நான் மனதார வாழ்த்துகிறேன், நன்றி.” என்றார்.

நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சதீஷ் பேசுகையில், “வந்திருக்கும் அனைத்து பத்திரிக்கை, ஊடகத்துறை மற்றும் சமூக வலைதள நண்பர்களுக்கும் என் மனமார்ந்த வணக்கம். நிறைய விஷயங்கள் பேசலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால், பிரியன் சொன்ன அந்த பாடல் என்னை கொஞ்சம் உணர்ச்சிவசப்படுத்திவிட்டது. அந்த பாடலை நான் கேட்கும் போது எப்போதும் என் அம்மா நினைவுக்கு வருவார். இன்று என் அம்மா என்னுடன் இல்லை. சிறுவயதிலிருந்தே என்னை திரையில் பார்க்க வேண்டும் என்பது அவருடைய ஆசை. அது பல ஆண்டுகளாக இருந்த ஒரு கனவு. எனக்கும் சினிமாவில் ஒரு நல்ல இடம் பிடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் பொறுப்புகள் காரணமாக நான் கார்ப்பரேட் வாழ்க்கையில் இருந்தேன். இருந்தாலும் அந்த ஆசை உள்ளுக்குள் எப்போதும் இருந்துகொண்டே இருந்தது. பலரும் சொல்லுவது போல, நாம் மனதில் நினைக்கும் விஷயம் ஒருநாள் நிச்சயம் நடக்கும். அதுபோல தான் எனக்கும் இந்த வாய்ப்பு வந்தது. ஒரு கட்டத்தில், இதை முழுநேரமாக செய்ய வேண்டும் என்று முடிவு செய்து இந்தப் பயணத்தில் இறங்கினேன்.

ஒரு நேர்காணலில் சூப்பர் ஸ்டார் ரஜினி சார் சொன்ன ஒரு விஷயம் எனக்கு நினைவுக்கு வருகிறது, நாம் எதையாவது உண்மையிலேயே விரும்பினால், சரியான நேரமும், சரியான மனிதர்களும் சேரும் போது முழு உழைப்புடன் முயற்சி செய்தால் அதை நிச்சயம் அடையலாம். அந்த வார்த்தைகள் இந்தப் பயணத்தில் உண்மையாகியிருக்கின்றன. இந்தப் படத்தை பற்றி பேசும்போது முதலில் டென்னிஸ் மஞ்சுநாத் பற்றி சொல்ல வேண்டும். அவர் எனக்கு சகோதரன் போன்றவர். கடந்த 15 ஆண்டுகளாக நாங்கள் ஒன்றாக பயணித்து வருகிறோம். அவரின் மூலம் தீபக், ரவி, சித்து ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் குறும்படங்களில் இணைந்து பணியாற்றிய அனுபவம் இந்த நாளை உருவாக்கியது.

எனக்கு சினிமாவில் முதல் வாய்ப்பை கொடுத்தவர் சசிகுமார் சார். ‘கிடாரி’ படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தேன். அந்த வாய்ப்பை நான் எப்போதும் நன்றியுடன் நினைவில் வைத்திருக்கிறேன். இந்தப் படம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே உருவான கதை. இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. அதைப் பற்றி ஆராய்ந்த போது, இதுபோன்ற சம்பவங்கள் பல இடங்களில் நடந்திருக்கின்றன என்பதைக் கண்டறிந்தோம். அது எங்களை ஆச்சரியப்படுத்தியது. அதனால் இந்தக் கதையை மிகவும் பொறுப்புடன் எடுத்துக் கொண்டு, சரியான முறையில் சொல்ல வேண்டும் என்று தீர்மானித்தோம்.

அப்போது இந்தக் கதையை செல்வா சாரிடம் கொண்டு போவோம் என்று முடிவு செய்தோம். அவர் ஒப்புக்கொண்டால் மட்டுமே இந்தப் படத்தை எடுக்க வேண்டும் என்று நாங்கள் தீர்மானித்திருந்தோம். அவர் ‘ஆம்’ என்ற ஒரே வார்த்தை இந்தப் படத்திற்கு உயிர் கொடுத்தது. அதற்காக அவருக்கு எங்களின் மனமார்ந்த நன்றி. அவர் இணைந்த பிறகு, இந்தப் படத்தின் தரம் இன்னும் உயர வேண்டும் என்ற பொறுப்பு எங்களுக்குள் உருவானது. எந்த விஷயத்தையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல், மிகுந்த கவனத்துடன் இந்தப் படத்தை உருவாக்கினோம். சேலம் உள்ளிட்ட இடங்களில் உண்மையான லொகேஷன்களில் படமாக்கி, தொழில்நுட்ப ரீதியாகவும் சிறந்த முயற்சிகளை செய்தோம்.

இந்தப் படத்தில் நடித்த குஷி ரவி அவர்களின் நடிப்பு மிகவும் பாராட்டத்தக்கது. மொழி மாற்றத்தையும் கடந்து, மிகுந்த உணர்வுடன் நடித்திருக்கிறார். அவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல எதிர்காலம் இருப்பது உறுதி. கௌசல்யா மேடம் இந்தக் கதாபாத்திரத்திற்காக முழுமையாக தன்னை மாற்றிக்கொண்டார். டி-கிளாமர் லுக்கில், அந்தக் கதாபாத்திரத்திற்கு தேவையான உண்மைத் தன்மையை மிக அழகாக வெளிப்படுத்தியுள்ளார். மைம் கோபி சார் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. அவருடைய நடிப்பு இந்தக் கதாபாத்திரத்திற்கு மிகச் சிறப்பாக பொருந்தியுள்ளது. அவர் இல்லாமல் இந்தக் கதாபாத்திரத்தை நினைத்துப் பார்க்க முடியாது. Y.G.மகேந்திரன் சார் போன்ற மூத்த கலைஞர்கள் இந்த யங் டீமுடன் இணைந்து மிக எளிமையாக பணியாற்றியது எங்களுக்கு பெருமை. செல்வா சார் உடன் பணியாற்றிய ஒவ்வொரு நாளும் எனக்கு ஒரு பாடமாக இருந்தது. அவருடைய அனுபவம் இந்தப் படத்தின் தரத்தை இன்னும் உயர்த்தியது.

இந்தப் படம் ஏன் தியேட்டரில் பார்க்க வேண்டும் என்றால், இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. ஒரு கிராமத்தின் வாழ்க்கை, மனித உறவுகள், உணர்வுகள் அனைத்தையும் எதார்த்தமாக சொல்லும் ஒரு படம். ஒளிப்பதிவு, எடிட்டிங், பின்னணி இசை ஆகிய அனைத்தும் இந்தக் கதையை இன்னும் உயர்த்தியுள்ளது. இந்தப் படம் குடும்பத்தோடு பார்க்கக்கூடியது. அனைவரும் குடும்பத்துடன் தியேட்டருக்கு வந்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் இந்தப் பயணத்தில் எங்களுடன் இருந்த அனைத்து தயாரிப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றி. யாராவது பெயரை தவறவிட்டிருந்தால் மன்னிக்கவும். இந்தப் படத்தில் உழைத்த ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். மீண்டும் ஒரு முறை, உங்கள் அனைவரும் இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.” என்றார்.

நடிகை கௌசல்யா பேசுகையில், “இங்கு வந்திருக்கும் அனைத்து மதிப்பிற்குரிய விருந்தினர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் என் மனமார்ந்த வணக்கங்கள். இன்று இந்த மேடையில் பேசுவதற்கு மிகவும் மகிழ்ச்சியாகவும், ஒருவித பெருமையாகவும் இருக்கிறது. இங்கு இருக்கும் ஒவ்வொருவரும் மிக முக்கியமானவர்கள், உங்கள் அனைவரின் வருகையும் என்னை உண்மையிலேயே நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

முதலில் இயக்குநர் டென்னிஸ் சார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன். இந்த படத்தில் எனக்கு மிகவும் அழகான மற்றும் வலுவான கதாபாத்திரத்தை உருவாக்கி அளித்ததற்கு மிக்க நன்றி. இந்த படத்தின் தீவிரத்தையும், அதன் உணர்ச்சிப் பூர்வமான களத்தையும் நம்பி தான் நான் இந்த திட்டத்தில் இணைந்தேன். அடுத்து தயாரிப்பாளர்கள் சதீஷ் சார் மற்றும் விஜயா மேம் அவர்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றி. உங்கள் திட்டமிடல், ஒழுங்கு மற்றும் அர்ப்பணிப்பு காரணமாக இந்த படத்தை சிறப்பாக முடிக்க முடிந்தது. உங்களைப் போன்ற தயாரிப்பாளர்கள் அதிகமாக இருந்தால், தமிழ்சினிமா இன்னும் உயர்ந்த நிலையை அடையும் என்பது என் நம்பிக்கை.

செல்வா சார், உங்களுடன் இணைந்து நடிப்பது எளிதான விஷயம் அல்ல. ஆனால் நீங்கள் கொடுத்த அந்த கம்பர்ட் மற்றும் ஆதரவு காரணமாக பல விஷயங்கள் மிகவும் இயல்பாக அமைந்தது. அதற்காக மிக்க நன்றி. குஷி, பெங்களூரிலிருந்து வந்து முழு அர்ப்பணிப்புடன் இந்த படத்திற்கு நீங்கள் அளித்த ஆதரவு மிகவும் பாராட்டத்தக்கது. உங்கள் கடின உழைப்புக்கு மனமார்ந்த நன்றி. ஒரு பெரிய விஷயத்தை அழகாக காட்சிப்படுத்துவது சுலபம். ஆனால் ஒரு எளிய விஷயத்தை அழகாக காட்சிப்படுத்துவது தான் உண்மையான சவால். அந்த சவாலை நம்முடைய ஒளிப்பதிவாளர் ரவி வர்மா அவர்கள் மிகச் சிறப்பாக செய்து காட்டியுள்ளார். அவருக்கு என் நன்றி.

இசையமைப்பாளர் ஏ.கே. பிரியன் அவர்களை இன்று தான் நேரில் சந்தித்தேன். இது அவர்களின் முதல் படம் என்று சொன்னார்கள்; ஆனால் அதை உணர முடியாத அளவுக்கு பாடல்கள் அனைத்தும் அருமையாக இருந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் நடனமாடியது அவர்களின் இசைக்காக தான். அந்த அளவுக்கு இனிமையான இசையை வழங்கியதற்கு நன்றி.

இங்கு வந்திருக்கும் அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. இறுதியாக, எங்கள் முழு குழுவிற்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். வரும் ஏப்ரல் 10ஆம் தேதி இந்த படம் வெளியாகிறது. இது முழு குடும்பமும் சேர்ந்து ரசிக்கக்கூடிய ஒரு சிறந்த திரைப்படம். கண்டிப்பாக அனைவரும் பார்த்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

நடிகை குஷி ரவி பேசுகையில், “இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த வணக்கங்கள். சில விஷயங்களை தவறவிடாமல் சொல்ல வேண்டும் என்பதால், நான் சிறிய குறிப்புகளை எடுத்துக் கொண்டு வந்திருக்கிறேன். ஏதேனும் தவறு இருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள். ‘மனிதன் தெய்வமாகலாம்’ என் முதல் தமிழ் திரைப்படம் என்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இந்த படத்தை அனைவரும் விரும்பி பாராட்டுவீர்கள் என்று நம்புகிறேன். இது முழு குடும்பமும் சேர்ந்து ரசிக்கக்கூடிய ஒரு அழகான திரைப்படம்.

முதலில் செல்வராகவன் சார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். இந்த படத்தில் என் நடிப்பை சிறப்பாக வெளிக்கொண்டு வந்த இயக்குநர் டென்னிஸ் அவர்களுக்கு என் நன்றி. என் தயாரிப்பாளர்கள் விஜயா மேடம் மற்றும் சதீஷ் சார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. என்னுடன் நடித்த அனைத்து நடிகர், நடிகைகளுக்கும் என் நன்றி.

இந்த படத்திற்காக உழைத்த ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞருக்கும் மற்றும் குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இசையமைப்பாளர் பிரியன் அவர்களுக்கு எனது சிறப்பு வாழ்த்துக்கள். இசை மிகவும் அருமையாக வந்துள்ளது. இறுதியாக, அனைவரும் கண்டிப்பாக திரையரங்குகளில் இந்த படத்தை பார்த்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

தயாரிப்பாளர் கதிரேசன் பேசுகையில், “இந்த அளவுக்கு சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட மேடையும், திரையுலகப் பிரபலங்கள் ஒன்றுகூடியதற்கும் முக்கிய காரணம் தயாரிப்பாளர் விஜயா சதீஷ் மற்றும் அவரது கணவர் சதீஷ் என்பதைக் குறிப்பிட்டு, தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்தார்.

தனது முதல் படத்திலேயே இயக்குநரை மேடையில் பாராட்டிய விஜயா சதீஷின் அணுகுமுறை குறிப்பிடத்தக்கது என்றும், ஒரு தயாரிப்பாளர்–இயக்குநர் உறவு வெற்றிகரமாக அமைந்தால், அது படத்தின் தரத்திலும் வெற்றியிலும் பிரதிபலிக்கும் என்றும் அவர் கூறினார். தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் உறவை “கணவன்–மனைவி” உறவுக்கு ஒப்பிட்டு, இருவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் நல்ல படைப்பு உருவாகும் எனவும் தெரிவித்தார்.

இன்றைய காலகட்டத்தில் திரைப்பட தயாரிப்பாளர்கள் குறைந்து வரும் நிலையில், குறைந்த செலவில் தயாராகும் சிறிய படங்களே அதிக வெற்றி பெற்று வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். சமீப காலத்தில் 5 முதல் 15 கோடி ரூபாய் செலவில் உருவான படங்களே வெற்றியைப் பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது என்றார்.

இந்த நிலையில், இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து படத்தை சிறப்பாக உருவாக்கிய விதம் பாராட்டத்தக்கது என்றும், அவர் தொடர்ந்து இதே நேர்மையுடன் செயல்பட்டால், திரையுலகில் மேலும் பல வெற்றிகளை பெறுவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

படத்தின் இசை குறித்து பேசுகையில், இசையமைப்பாளர் ஏ.கே. பிரியன் அமைத்த பாடல்கள் சிறப்பாக அமைந்துள்ளதாகவும், குறிப்பாக “தங்க ரத்தினமே” மற்றும் “கலங்காதே ராசா” போன்ற பாடல்கள் குடும்ப உணர்வுகளை அழகாக வெளிப்படுத்துவதாகவும் பாராட்டினார். மேலும், பாடலாசிரியர் விக்னேஷ் எழுதிய வரிகள் உணர்ச்சி மற்றும் குடும்ப பாசத்தை நன்கு பிரதிபலிப்பதாகவும் கூறினார்.

படத்தின் கதை மற்றும் காட்சியமைப்பு குறித்து பேசுகையில், இது ஒரு முழுமையான குடும்பக் கதையாக உருவாகியுள்ளது என்றும், குடும்ப உறவுகளை மையமாகக் கொண்டு பயணிக்கும் இந்த படம் பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார். குறிப்பாக, செல்வராகவன் நடித்துள்ள கதாபாத்திரம் குடும்ப பின்னணியில் வலுவாக அமைந்துள்ளதாகவும், நடிகை கௌரி கிஷனின் நடிப்பு இயல்பாக இருப்பதாகவும் பாராட்டினார்.

இறுதியாக, நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு முழுமையான குடும்ப உணர்வு கொண்ட படம் வெளியாகி இருப்பதாகவும், இந்த படம் பெரிய வெற்றியை பெறும் எனவும் அவர் வாழ்த்துகளை தெரிவித்தார்.

தயாரிப்பாளர் கமலக்கண்ணன் பேசுகையில், “மனிதன் தெய்வமாகலாம், கண்டிப்பாக ஆகலாம், அது எப்படி என்றால்? ஒரு தயாரிப்பாளருக்கு உண்மையான கடவுள் பார்வையாளர்கள் தான். தியேட்டருக்குப் போய் படம் பார்த்து அதை வெற்றி பெறச் செய்தால், “என்னை காப்பாற்றியது நீங்கள் தான்” என்று தயாரிப்பாளர் பார்வையாளர்களை கடவுளாகக் கருதுவார். அதனால், அனைவரும் கண்டிப்பாக திரையரங்குகளுக்குச் சென்று படம் பார்க்க வேண்டும்.

படங்களை மொபைல் போன்றவற்றில் பார்க்காமல், தியேட்டரில் பார்த்தால் தான் அதன் முழு அனுபவம் கிடைக்கும். நாம் நேரில் சென்று படம் பார்த்தால், அந்த படம் வெற்றி பெறும். அப்போது தயாரிப்பாளர், “என்னை காப்பாற்றியது இந்த ஆடியன்ஸ் தான்” என்று பெருமையுடன் கூறுவார். அடுத்ததாக, பத்திரிகையாளர்களும் ஒரு படத்தின் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். அவர்கள் செய்தி மற்றும் விளம்பரத்தின் மூலம் படத்தை மக்களிடம் கொண்டு செல்கிறார்கள். அதனால், பார்வையாளர்களுக்கு அடுத்தபடியாக பத்திரிகையாளர்களையும் “கடவுள்” என்று சொல்லலாம்.

இங்கு கலந்து கொண்ட நடிகர்கள் மற்றும் இளம் கலைஞர்களின் திறமை மிகவும் பாராட்டத்தக்கது. குறிப்பாக பாடல்கள் மிக அழகாக அமைந்துள்ளன. இசையும் சிறப்பாக உள்ளது. இயக்குநர் மிக நன்றாக தனது பணியை செய்திருக்கிறார். மொத்தத்தில், இந்த குழு ஒரு நல்ல முயற்சியை வழங்கியுள்ளது. இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. கடவுளை நினைத்து இதற்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கிறேன். மேடையில் கலந்து கொண்ட மூத்த கலைஞர்களையும் நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது பெருமையாக உள்ளது. மேலும், செல்வராகவன் அவர்கள் இந்த படத்தில் இருப்பது, அதன் வெற்றிக்கு கூடுதல் பலமாக இருக்கும்.

இறுதியாக, இந்த தயாரிப்பாளர் பார்வையாளர்களை கடவுளாகக் கருதுவார். அவரை நீங்கள் காப்பாற்ற வேண்டும் என்றால், தயவுசெய்து திரையரங்குகளில் சென்று படம் பாருங்கள். மொபைலில் பார்க்காமல், தியேட்டரில் பார்த்து இந்த படத்தை வெற்றி பெறச் செய்யுங்கள். நன்றி.” என்றார்.

தயாரிப்பாளர் மற்றும் விநியோகிஸ்தர் தனஞ்செயன் பேசுகையில், “முதலில், தயாரிப்பாளரும் நடிகருமான சதீஷ் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த படத்தின் தயாரிப்பாளர் ஒரு கார்ப்பரேட் ப்ரொஃபஷனல் என்பது குறிப்பிடத்தக்கது. 25–30 ஆண்டுகள் கார்ப்பரேட் துறையில் பணியாற்றி, அதன் பின்பு சினிமாவுக்கு வந்திருப்பது அவருடைய ஆர்வத்தையும் உறுதியையும் காட்டுகிறது. நான் பணியாற்றிய அதே ஏர்டெல் நிறுவனத்திலேயே பின்னர் இணைந்தவர் என்பதும் ஒரு சிறப்பு. ஒருநாள் வந்து “நீங்கள் என்னுடைய சீனியர்” என்று கூறிய தருணம் மிகவும் மகிழ்ச்சியளித்தது..

கார்ப்பரேட் அனுபவத்தைப் பயன்படுத்தி, திட்டமிட்ட முறையில், சரியான பட்ஜெட்டிலும், குறிப்பிட்ட காலக்கட்டத்துக்குள் இந்த படத்தை உருவாக்கியிருப்பது பாராட்டத்தக்கது. இதற்காக இயக்குநர் டென்னிஸ் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். அவர் மிகச் சிறப்பாக தனது பணியை செய்திருக்கிறார். படத்தின் பாடல்கள் மிகுந்த உற்சாகத்துடன் அமைந்துள்ளன. இசையமைப்பாளர் பிரியன், குறிப்பாக புதிய குரல்களையும் புதிய லிரிசிஸ்ட்களையும் பயன்படுத்தி தரமான பாடல்களை வழங்கியுள்ளார். லைவ் நிகழ்ச்சியிலேயே அந்த எனர்ஜி உணரப்பட்டது; அதேபோல் திரையிலும் அது மக்களை கவரும். இந்த பாடல்கள் படத்திற்கு ஒரு முக்கிய பலமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இயக்குநர் டென்னிஸ் ஒரு வலுவான அணியை ஒருங்கிணைத்துள்ளார். முழு குழுவும் இணைந்து நல்ல முயற்சியை வழங்கியுள்ளது. இந்த படம் ஒரு சிறப்பான வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன். நடிகர் அணியைப் பார்த்ததும் மகிழ்ச்சி அளித்தது. ஒய்.ஜி. மகேந்திரன், மைம் கோபி, கௌசல்யா போன்ற அனுபவம் மிக்க கலைஞர்கள் இணைந்திருப்பது படத்திற்கு கூடுதல் வலுவாக உள்ளது. கௌசல்யா மேடம் நீண்ட நாட்களுக்கு பிறகு மேடையில் காணப்பட்டது மகிழ்ச்சியாக இருந்தது.

சமீபத்தில் பார்த்த கன்னட படம் ‘நீதி’யில் சிறப்பாக நடித்த குஷி ரவி, இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். அவருடைய வரவு தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக அமையும் என நம்புகிறேன். மேலும், தமிழ் சினிமாவின் முக்கியமான படைப்புகளை வழங்கிய இயக்குநர் செல்வராகவன் அவர்கள் இந்த படத்தில் ஹீரோவாக நடிப்பது பெருமையாகும். அவர் தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்; தொடர்ந்து பல நல்ல படங்களில் அவரை பார்க்க முடிகிறது. எதிர்காலத்தில் அவரிடமிருந்து மேலும் பல முக்கியமான படங்கள் வரும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

சதீஷ் அவர்களின் இந்த முயற்சி மிக முக்கியமானது. தற்போதைய தமிழ் சினிமாவில், ஒரு படம் மிகப்பெரிய வெற்றி பெறுவது அல்லது முழுமையாக நிராகரிக்கப்படுவது போன்ற நிலை உருவாகியுள்ளது. வாரம் தோறும் பல படங்கள் வெளியாகும் நிலையில், குறைந்தது சில படங்களாவது மக்கள் ஆதரவைப் பெறுவது அவசியம். அப்படியானால் தான் துறை மேலும் வளர்ச்சி அடையும்.

‘மனிதன் தெய்வமாகலாம்’ படம் நல்ல வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. இப்படிப்பட்ட தரமான படங்கள் மக்களிடம் சேர, ஊடகங்களும் பத்திரிகையாளர்களும் தங்களது ஆதரவை வழங்க வேண்டும்.

தயாரிப்பாளர் விஜயா சதீஷ் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். முதல் படமாக இருந்தாலும், மிகுந்த நம்பிக்கையுடன் இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளார். குடும்பமாக இணைந்து இந்த படத்தை வழங்குவது பாராட்டத்தக்கது. சதீஷ் அவர்களின் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் பயணம் மிகப்பெரிய வெற்றியை அடைய வேண்டும்.” என்றார்.

சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் பேசுகையில், “வழக்கமான ஆடியோ லாஞ்ச் அல்லது பிரஸ் மீட்டிலிருந்து வித்தியாசமாக, “மனிதன் தெய்வமாகலாம்” படத்தின் பிரஸ் மீட் ஒரு குடும்ப விழாவைப் போல அமைந்திருந்தது. நிகழ்வு நடைபெறும் இடத்திலேயே, பள்ளி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குடும்ப நிகழ்ச்சியின் உணர்வோடு கலந்து கொண்டது, இந்த படத்தின் அணியின் ஒருமைப்பாட்டையும் அதன் நேர்மையான அணுகுமுறையையும் வெளிப்படுத்தியது.

இந்த படம் ஆரம்பிக்கப்பட்ட தருணத்திலிருந்தே, முழு அணியிலும் ஒரு உற்சாகமும் ஒற்றுமையும் காணப்படுகிறது. குறிப்பாக, படத்தில் காட்டப்படும் கிராமப்புற சூழல் மிக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டு, முழு படமும் அதே இடத்தில் இயற்கையாக படமாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. கதை, கதாபாத்திரங்கள் மற்றும் நிகழ்வுகள் எதுவும் திணிக்கப்பட்டதாக இல்லாமல், இயல்பான ஓட்டத்தில் நகரும் விதம் படத்தின் மிகப்பெரிய பலமாக உள்ளது.

இயக்குநர் செல்வராகவன் அவர்கள், வழக்கம்போல எளிமையான நடிப்பில் கதாநாயகனாக மிகவும் அழகாக காட்சியளித்துள்ளார். சிறிய கதாபாத்திரங்களிலும் தனித்துவமான முத்திரையை பதிக்கும் அவர், இந்த படத்தில் முழுநீள கதாநாயகனாக மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளார்.

படத்தை பார்க்கும் அனுபவம் மிகவும் ஈர்க்கக்கூடியதாக இருந்தது. இடைவேளையில் தயாரிப்பாளருடன் உரையாடியபோது, அவர் ஒரு கார்ப்பரேட் பின்னணியில் இருந்து வந்தவர் என்பதும் தெரிந்தது. அதே சமயம், படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தையும் ஏற்று நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு சாதாரண தோற்றமாக இல்லாமல், முக்கியமான கதாபாத்திரமாக இருந்தது என்பதும் அவரது அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.

மைம் கோபி அவர்கள், திரையில் வில்லன் கதாபாத்திரத்தில் வலுவாக காட்சியளித்துள்ளார். இயல்பில் மிகவும் எளிமையானவராக இருந்தாலும், திரையில் எதிர்மறை கதாபாத்திரத்தில் அவருடைய நடிப்பு சிறப்பாக உள்ளது. எதிர்காலத்தில் அவரை கதாநாயகனாகவும் பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை இந்த படம் உருவாக்குகிறது. ஒய்.ஜி. மகேந்திரன் போன்ற மூத்த கலைஞர்கள், இளம் அணியினருக்கு ஆதரவாக இணைந்திருப்பது படத்திற்கு மேலும் பலம் சேர்க்கிறது. குஷி ரவி, கன்னடத்தில் வெற்றி பெற்ற நடிகையாக இருந்தாலும், தமிழில் அறிமுகமாகும் இந்த படத்தில் தனது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். கௌசல்யா அவர்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில், இந்த படம் இயல்பான உணர்வுகளுடன் உருவாகிய ஒரு தரமான படைப்பாக உள்ளது. சண்டைக் காட்சிகள் கூட மிக நிஜத்தன்மையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அம்சமும் சரியான முறையில் அமைந்துள்ளதால், இது ஒரு முழுமையான திரைப்படமாக உருவாகியுள்ளது. இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் அவர்களுடன் இது இரண்டாவது இணைப்பு என்பதும், முன்பிருந்த அனுபவத்தின் அடிப்படையில் இந்த படம் மேலும் சிறப்பாக உருவாகியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்த ரேகா மேடம் அவர்களுக்கும் பாராட்டுகள். இந்த படம் ஒரு மாபெரும் வெற்றி பெற வேண்டும் என அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.” என்றார்.