April 25, 2024
  • April 25, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • என் பெற்றோர் செய்த புண்ணியம் நான் ஜனா சார் படத்தில் நடித்தது – விஜய் சேதுபதி
September 3, 2021

என் பெற்றோர் செய்த புண்ணியம் நான் ஜனா சார் படத்தில் நடித்தது – விஜய் சேதுபதி

By 0 423 Views

உணவு அரசியல், விவசாயம் சார்ந்த அரசியல் மற்றும் கிராமீயப் பொருளாதாரப் பற்றி ‘லாபம்’ படம் பேசுகிறது என அப்பட நாயகனும், தயாரிப்பாளர்களில் ஒருவருமான ‘மக்கள் செல்வன்’ விஜய்சேதுபதி தெரிவித்தார். 

விஜய்சேதுபதி புரொடக்சன்ஸ் மற்றும் 7c ஸ் என்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘லாபம்’. ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, நடிகை சுருதிஹாசன், ஜெகபதி பாபு, கலையரசன், நடிகை சம்பிகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு டி இமான் இசையமைத்திருக்கிறார்.

செப்டம்பர் ஒன்பதாம் தேதியன்று வெளியாக இருக்கும் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, மறைந்த இயக்குனர் எஸ்பி ஜனநாதன் அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வாக சென்னையிலுள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது.

இதில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, தயாரிப்பாளர் ஆறுமுக குமார், பெப்சியின் தலைவர் ஆர் கே செல்வமணி, இயக்குனர் ஆர் வி உதயகுமார் உள்ளிட்ட திரைப்பட இயக்குனர் சங்கர் நிர்வாகிகள், பெப்சி நிர்வாகிகள் மற்றும் படக்குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இசையமைப்பாளர் டி இமான் பேசுகையில்,’ லாபம் படத்தில் இயக்குனர் எஸ் பி ஜனநாதனுடன் பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது.

சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் போராடிக் கொண்டிருந்தேன் அந்த தருணத்தில், என்னையும் ஒரு இசையமைப்பாளராக அங்கீகரித்து, என்னுடைய வீட்டிற்கு இயக்குனர் ஜனநாதன் வருகை தந்தார். அந்தத் தருணத்தில் அவர் ‘இயற்கை’ படத்திற்கான கதை விவாதத்தில் ஈடுபட்டிருந்தார்.

அதன்பிறகு பல்வேறு காரணங்களால் அவருடன் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பும் கிடைக்கவில்லை. 

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவருடன் ‘லாபம்’ படத்தில் பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. பாடல், பாடலுக்கான சூழல், அதற்கான பின்னணி, பாடல் வரிகள், மெட்டு, அதற்கான இசை… இதை கடந்து உலக அரசியலை குறித்து ஆர்வமுடன் விவரிப்பார். அவர் ஒரு நடமாடும் என்சைக்ளோபீடியா கூகுள் போன்றவர்.

இந்தப்படத்தில் ‘சேருவோம் சேருவோம்..’ எனத் தொடங்கும் ஒரு பாடல் உள்ளது. இந்த பாடலை சுவிட்சர்லாந்து நாட்டில் வாழும் ஈழப் பெண் பாடகி கிளியோபாட்ரா என்பவர் பாடியிருக்கிறார். அது ஒரு ராப் இசை பாடல்.

ஒரு படைப்பை நூறு சதவீதம் நேர்த்தியாக திரையில் உருவாக்கிய படைப்பாளி ஜனநாதன் சார் என சொல்லலாம்.

அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அனுமதிக்கப்பட்டிருந்த காட்சி எனக்கு உணர்வுரீதியாக இணைந்திருந்தது. அதே மருத்துவமனை – அதே தீவிர சிகிச்சை பிரிவில்.. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் என்னுடைய தாயார் சிகிச்சைப் பெற்று,மறைந்ததை நினைவூட்டியது..!” என்றார்.

தயாரிப்பாளர் ஆறுமுகக் குமார் பேசுகையில்,’ “லாபம் படத்தை நானும் விஜய் சேதுபதியும் இணைந்து தயாரித்திருக்கிறோம்.

படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல் காட்சிகளைப் பார்க்கும் போது, ஜனா சார் அடிக்கடி என்னிடம் கூறிய வார்த்தைகள் தான் நினைவுக்கு வருகிறது. ‘ “சார்… இதை பெரிய திரையில் காணும் பொழுது வேறு வகையான உணர்வைத் தரும்…” என்பார். அது உண்மை என்பதை இன்று நான் உணர்கிறேன். ஜனநாதன் சார் ஒரு மிகப்பெரிய கலை ரசிகன்.

லாக்டௌன், ஓ டி டி என்ற பிரச்சனை எழுந்த போதெல்லாம் என்னிடம் அவர்,‘ லாபம் எளிய மக்களுக்கான திரைப்படம். இதனை திரையரங்குகளில் வெளியிடுவதற்கு தான் முன்னுரிமை அளிக்க வேண்டும்’ என அடிக்கடி உறுதியான குரலில் சொல்வார். அவரது ஆசைப்படி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது..!” என்றார்.

 

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி பேசுகையில், “ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக வாய்ப்பு தேடிய காலகட்டத்திலிருந்து ஜனா சாரை சந்தித்தது முதல் அவரது மறைவு வரையிலான இந்த காலகட்டம் மறக்க முடியாது. அவருக்கும் எனக்கும் இடையிலான உறவையும் வார்த்தைகளால் குறிப்பிட இயலாது. 

எனக்கும் அவருக்குமான உறவு தந்தை மகன் போன்றதொரு உறவு. அருகில் இருக்கும் பொழுது அதன் அருமை தெரியாது. தூரத்திலிருந்து நான் அவரை நேசித்துக் கொண்டே இருந்தேன். காலம் எப்படி படு பாதகமாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. அவரைப் பற்றி தெரிந்திருந்தால்… புரிந்து கொண்டிருந்தால்.. அவருடன் நிறைய நேரம் செலவிட்டிருப்பேன்.

அவருடன் நன்றாக பழகத் தொடங்கிய இந்த ஐந்து ஆண்டுகளில் இன்னும் அதிகமாக அன்பு பரிமாற்றம் நடந்திருக்க வேண்டும் என தற்போது நினைக்கிறேன். சில நேரங்களில் மனிதர்கள் மீது அன்பு செலுத்துவதை பயன்படுத்தி இருக்கலாம். நான் அதை தவற விட்டிருக்கிறேன். 

இந்தப் படம் மிகச் சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது என்றால், அது அதன் முழு பொறுப்பும் தலைவர் ஜனநாதனையே சேரும்.

இங்கு பேசும்பொழுது ஆர்கே செல்வமணி, ஜனநாதனின் தஞ்சாவூர் பெரிய கோயில் பற்றிய கதையை படமாக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். ஆனால் என்னுடைய அனுபவத்தின் படி ஜனநாதன் ஒரு கதையை எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமென்றாலும் மாற்றி மாற்றி யோசித்து எழுதக்கூடிய படைப்பாளி. ஒவ்வொரு படத்திலும் பெரும் மாற்றங்களை செய்துகொண்டே இருப்பார்.

படத்திற்காக உழைத்துக் கொண்டே இருப்பார். புதிய புதிய செய்திகளை தெரிந்துகொண்டு அதனை படைப்பில் இணைத்துக் கொண்டே செல்வார். அதனால் அவர் எழுதிய தஞ்சாவூர் கோயில் பற்றிய கதையை படமாக்குவதற்கான திட்டம் எதுவும் என்னிடம் இல்லை.

ஏனென்றால் அவர் பணியாற்றும் ஸ்டைல் எனக்கு தெரியும்.. தினமும் தன்னை புதுப்பித்துக் கொண்டே இருப்பார். அதனால் இதுதான் கிளைமாக்ஸ்… இதுதான் இடைவேளை காட்சி… இதுதான் வசனம்… என்று எந்த வரையறையும் அவரிடம் இருக்காது. அவருடன் இரண்டு படங்களில் பணியாற்றியிருக்கிறேன். 

 

இப்படத்தின் தயாரிப்பாளரான ஆறுமுகக்குமாரை எனக்கு 12 ஆண்டுகளாக தெரியும்.

இந்தப்படத்தில் நான் சம்பளமாக எதையும் பெறவில்லை. எடுக்கவும் இல்லை. இந்த திரைப்படம் நல்லபடியாக வெளியாக வேண்டும். என்னுடைய தாய் தந்தையர், தாத்தா பாட்டி போன்றவர்கள் செய்த புண்ணியத்தால் ‘லாபம்’ படத்தில், ஜனநாதன் சார் இயக்கத்தில் நடித்திருக்கிறேன்.

ஜனநாதன் சார் ‘ஒரு திரைப்படத்தை பொழுதுபோக்கு’ என்று சொல்வதை ஒப்புக் கொள்ள மாட்டார். திரைப்படம் என்பது பொழுதுபோக்கு என்ற எல்லையும் கடந்து, பார்வையாளர்களை ஏதேனும் ஒரு விஷயத்தில் சிந்திக்கத் தூண்டுகிறது.

அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை திரைப்படத்தைப் பார்க்கும் பலரும் பல தருணங்களில் இந்த காட்சி என்னை மாற்றியது. இந்தக் காட்சி என்னை யோசிக்க தூண்டியது… இந்த காட்சி என்னை மனிதனாக்கியது.. என சொல்வதை கேட்டிருக்கிறோம். அது எந்த மொழி படமாக இருந்தாலும் பரவாயில்லை. திரைப்படம் ஏதோ ஒரு வகையில் நம்மில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது. உலகம் முழுவதும் மனிதனின் உணர்வுகள், ஒரே வகையான தாக்கத்தை ஏற்படுத்தி நம் மனதை தொடுகிறது.

அதனால் திரைப்படம் சாதாரண பொழுதுபோக்கு மட்டுமல்ல, அது அதையும் கடந்து ஏதேனும் ஒரு பாதிப்பை மனிதர்களுக்குள் ஏற்படுத்துகிறது. மக்கள் சிந்திக்க வேண்டியவற்றை பிரதானமாக எடுத்துச் சொல்வது கலை வடிவங்கள்தான். ஒரு நகைச்சுவை காட்சி கூட ரசிகர்களை யோசிக்க வைக்கும். அதனால் கலையை சாதாரண பொழுது போக்கு அம்சம் என்ற கோணத்தில் மட்டும் அணுகாதீர்கள்.

கலை என்னை சிந்திக்க வைத்தது. அதனால் இத்துறையில் அடி எடுத்து வைத்தேன். இதுதான் என்னுடைய வாரிசுகளுக்கும் கற்றுக் கொடுக்கிறேன். அதனால் ஒரு படத்தைப் பார்த்துவிட்டு நன்றாக இல்லை என்று மட்டும் விமர்சிக்காதீர்கள். அதிலிருக்கும் எந்த சிந்தனை சிறந்தது? எது பலவீனமாக இருக்கிறது? என்பதை உணர்ந்து, திறனாய்வு செய்ய பழகிக் கொள்ளுங்கள்.

என்னுடைய வாரிசுக்கு இதைத்தான் நான் கற்றுக் கொடுக்கிறேன். ஒரு விஷயத்தை குறை சொல்வதன் மூலமாக நம்மை நாமே புத்திசாலிகள் என்று நம்பிக் கொண்டிருக்கின்றோமோ என எண்ணத் தோன்றுகிறது. இங்கு ஒருவரை குறை சொன்னால் நான் புத்திசாலி ஆகி விடுகிறேன். கலை மனிதனை சிந்திக்க வைக்கிறது அதனால் தான் பல கோடி ஆண்டுகளுக்கு பிறகு அது இன்றும் உயிர்ப்புடன் இருக்கிறது.

மேலும் இந்தப் படத்தைப் பற்றி நான் சொல்வதை விட, மறைந்த இயக்குனரும் என்னுடைய தலைவருமான இயக்குனர் ஜனநாதன் பல்வேறு பேட்டிகளில் சொன்னதை நான் இங்கு குறிப்பிடுகிறேன்.

 

‘சேத்துல கால் வச்சாதான் சோத்துல கை வைக்க முடியும் என விவசாய பத்தி சொல்லி சுருக்கிட்டாங்க. நான் விவசாயத்தை எப்படி பார்க்கிறேன்னே.. பிரிட்டிஷ்காரன் இந்தியாவுக்கு வந்தததே.. இந்த கிராம பகுதியில் நடக்கிற விவசாயத்தை பார்த்துதான். தங்கம் மாதிரி பொருளாய் இருந்தா.. அவன் எப்பவோ எடுத்துட்டு போய் இருக்கலாம்.

ஆனா இந்த மண்ணுல முன்னூறு நானூறு வருஷமா பருத்தியை எடுத்து கிட்டே இருக்காங்க. கரும்பை எடுத்துகிட்டே இருக்காங்க. இதுக்கு உலக அளவுல மார்க்கெட் இருக்கிறதால.. இன்னும் கூட எடுத்துகிட்டு இருக்காங்க. இந்தியா முழுக்க சுமார் 2000 சர்க்கரை ஆலை இருக்கு.. இவை அனைத்தும் கரும்பை மூலப்பொருளாக வைத்துதான் இயங்குது இந்த கரும்பிலிருந்து வர்ற சர்க்கரை, சர்க்கரையிலிருந்து வர்ற மொலாசஸ், மொலாசஸிருந்து வர்ற ரம், ஜின், பிராந்தி, பால் கலந்த சாக்லேட், இதுல வர்ற மின்சாரம், அத தொழிற்சாலைக்கு பயன்படுத்திய பிறகு மீதமுள்ள மின்சாரத்தை விற்பனை செய்வது, கரும்பு சக்கையிலிருந்து பேப்பர் தயாரிப்பது என எல்லாமே விவசாயத்தில் இருந்து தான் கிடைக்கிறது.’

 

‘பஞ்சாலை, கரும்பாலை என விவசாயத்திலிருந்து வர்ற எந்த பொருளாக இருந்தாலும் சரி வேஸ்டேஜ் அப்டின்னு ஒன்னும் இல்ல. பல நாடுகள் தங்களுடைய வேஸ்டேஜ் கொட்றதுக்குன்னு சில நாட்ட செலக்ட் பண்ணி பயன்படுத்தறாங்க. நம்ம நாட்டுக்கும் கன்டெய்னர் கன்டெய்னரா ஏராளமான வேஸ்ட் அனுப்புறாங்க.’‘ 

 

அதனால விவசாயத்தை நம்பி பல தொழிற்சாலைகள் இயங்கி கொண்டிருக்கு. கோடிக்கணக்கான பணம் புழங்கிக் கொண்டிருக்கு. சோத்து பிரச்சனை இல்லை. வெளவிச்சு பயிரிட்ட விவசாயி, அதுல உருவான பாட்டில வாங்கி குடிக்க சாய்ந்தரம் ஆனதும் க்யூவுல போய் நிற்கிறான். இது என்னுடைய உற்பத்தி செஞ்சு வர்ற பொருளிலிருந்து தான் பீராவும், பிராந்தியாவும் இங்க வித்து லாபம் சம்பாதிக்கிறாங்கன்னு விவசாயிக்கு தெரியல அதைதான் இந்த படம் சொல்லுது.’ என்றார்.

 

அனைத்தையும் கடந்து தமிழகம் முழுவதும் திரையரங்குகளை திறக்க உத்தரவிட்ட தமிழக அரசுக்கு நன்றி. இது ‘லாபம்’ படம் வெற்றியடைய வேண்டும் என்பதற்காக சொல்லவில்லை. திரைத் தொழில் என்பது பல லட்சம் குடும்பங்களின் உழைப்பை உள்ளடக்கியது. இவர்களின் அனைவரின் சார்பாகவும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கிறேன். மேலும் திரையரங்குகளுக்கு வரவிருக்கும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வருக! வருக! என மனமார வரவேற்கிறேன்.’ என்றார்.