நமக்கெல்லாம் சுமோ என்றால் ‘டாடா சுமோ’ கார்தான் நினைவுக்கு வரும். அந்தக் காரும் இப்போது தயாரிப்பில் இல்லாமல் வழக்கொழிந்து போய்விட்டதால், ஜப்பான் மல்யுத்த வகையான சுமோ பற்றி அறிந்தவர்களுக்கு மட்டுமே இது பற்றித் தெரியும் என்ற நிலையில்…
இதுபோன்ற தெரியாத விஷயங்களை எடுத்துக்கொள்ளும் பொழுது முதலில் அதனுடைய அடிப்படையையும் அது பற்றிய அறிவையும் அழுத்தமாகச் சொல்லி விட வேண்டும்.
ஆனால் அப்படியெல்லாம் இல்லாமல் கடலில் அடித்து வரப்பட்ட ஒரு சுமோ வீரர் தஷிரோவை அறிமுகம் செய்கிறார்கள். நினைவற்ற நிலையில் கரை ஒதுங்கும் அவரை அந்த ஏரியாவில் சர்ஃபிங் (இது பற்றியும் பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது) செய்ய பயிற்றுவிக்கும் நாயகன் ஷிவா பார்த்து, அவரைக் காப்பாற்றிக் கரை சேர்க்கிறார் அல்லது கரை சேர்ந்த அவரைக் காப்பாற்றுகிறார்.
தான் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற நினைவுகள் எல்லாம் அற்றுப்போன தஷிரோ ஒரு சிறு குழந்தையின் மனநிலையோடு தன்னை காப்பாற்றிய ஷிவாவையே சுற்றிச் சுற்றி வருகிறார்.
ஜப்பானுக்கு ஆட்களை அனுப்பும் ஸ்ரீநாத் மூலம் தஷீரோ பற்றிய தகவல்கள் ஷிவாவுக்கு கிடைக்க அவரை மீண்டும் ஜப்பானுக்கு கொண்டு சேர்க்க எண்ணம் கொண்ட ஷிவா அண்டு கோவின் முயற்சி என்ன ஆனது என்பதுதான் கதை.
அடிப்படைக் கதை இதுவாக இருந்தாலும் படத் தொடக்கத்தில் மேற்படி சர்ஃபிங் விடுதியை நடத்தி வரும் விடிவி கணேஷைக் கையில் ஒரு பெட்டியுடன் பிடிக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் காமெடி சதீஷ் விசாரணை செய்ய, அப்போதுதான் மேற்படி கதையைச் சொல்கிறார் விடிவி கணேஷ்.
கதையைக் கேட்டால் மட்டுமே அந்தப் பெட்டியைப் பற்றிய உண்மையைச் சொல்ல முடியும் என்று நம்ப வைத்து முழுக் கதையையும் கணேஷ் சொல்லி முடிக்க, பிறகு அந்தப் பெட்டியில் என்ன இருக்கிறது என்பதை கடைசியில் சொல்கிறார்.
ஆனால் அந்தப் பெட்டிக்குள் இருக்கும் பொருளுக்கும் அந்தக் கதைக்கும் எந்த சம்பந்தமுமே இல்லை. அப்புறம் எதற்கு இந்த வெட்டிக் கதை (பெட்டிக் கதை..?) என்று கேட்கலாம்தான்.
ஆனால், படத்தை தயாரித்தவர்கள், நடித்தவர்கள் உட்பட யாருமே அந்தக் கேள்வியைக் கேட்கவில்லை என்பதுதான் ஆச்சரியம்.
நடிக்கவே வராவிட்டாலும் நம்மைச் சிரிக்க வைக்கும் திறமை பெற்ற நாயகன் மிர்ச்சி ஷிவா, இந்தப் படத்தின் வசனங்களையும் எழுதி இருக்கிறார் என்பதுதான் ஆகப் பெரிய காமெடி. ஆனாலும், அவரால் எப்படியும் நம்மைச் சிரிக்க வைக்க முடியவில்லை.
நாயகியாக பிரியா ஆனந்த், அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளில் அவ்வப்போது வந்து போகிறார். ‘எப்படியும் நடிக்கத் தயார்…’ என்பவரை இப்படியா வீணாக்குவது..?
இவர்களுடன் யோகி பாபுவும் மூன்று காட்சிகளில் வருகிறார். அவராலும் நம் இறுக்கத்தைப் போக்க முடியவில்லை.
இவர்களுடன் நிழல்கள் ரவி, சேத்தன், சுரேஷ் சக்கரவர்த்தி என காமெடிக்கு குறைவில்லாத நடிகர்கள் இருந்தும் காமெடியை வலை வீசித் தேட வேண்டி இருக்கிறது.
நீண்ட இடைவெளிக்குப் பின் ராஜிவ் மேனன் இந்த படத்தின் ஒளிப்பதிவை ஏற்றிருக்கிறார். அவரது அடையாளமாக ஜப்பானின் ஃப்யூஜி மலை மட்டும் கம்பீரமாக நிற்கிறது.
நிவாஸ் கே.பிரசன்னா இசை ஓகேதான். ஆனால் காமெடி என்று வரும் காட்சிகளில் எல்லாம் மேடை நாடகம் போல் அவர் இசைத்துக் கொண்டிருப்பது மலிவான ரசனை.
பேர் சொல்ல இத்தனைப் பேர் இருந்தும் கதை எழுதி இயக்கியிருக்கும் எஸ்.பி.ஹோசிமினுக்கு என்ன விதமான நெருக்கடி இருந்தது என்பதைக் கணிக்க முடியவில்லை.
மொத்தத்தில் ‘சுமோ’ரான படம்..!
– வேணுஜி