தலைவர்களுக்கே இறந்த பின்தான் சிலை வைக்கும் பழக்கம் இருந்து வருகிறது. ஆனால் கபடி போட்டியில் தங்கள் மண்ணின் பெருமையை உலகுக்கு உணர்த்திய பொத்தாரி என்ற நபருக்கு அவரது ஊரில் சிலை வைக்கிறார்கள் தஞ்சைப் பகுதி மக்கள்.
பிறகு அவர் மீது கொண்ட கசப்பால் அவர் உயிரோடு இருக்கும்போதே அந்தச் சிலையை ஊர் மக்கள் உடைத்து எறியவும் செய்கிறார்கள். அவர் குடும்பத்தையே ஊருக்கு ஆகாதபடி செய்கிறார்கள்.
அந்த அளவுக்கு அவர் மீது என்ன கோபம்..? இந்த சிக்கலை அவர் குடும்பம் எப்படி எதிர்கொண்டது என்ற கேள்விகளுக்கு பதில் சொல்லும் படம் தான் பட்டத்து அரசன்.
பொத்தாரி என்ற அந்த வேடத்தில் ராஜ்கிரண். கபடி விளையாட்டில் புகழ்பெற்ற உண்மை வீரரான முத்தாரின் பெயரையே ராஜ்கிரனுக்கு வைத்து பெருமைப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் சற்குணம்.
இப்போதைய கதைப்படி ராஜ்கிரனுக்கு சுமார் 70 வயது இருக்க, அவருக்கு ஆகாத பேரனாக வருகிறார் நாயகன் அதர்வா.
ஏன் ராஜ்கிரனுக்கும் அதர்வாவுக்கும் ஆகவில்லை என்பதற்கு ஒரு கிளாஸ் பாக்ஸ் சொல்கிறார்கள் ராஜ்கிரனுக்கு இரண்டு தாரம் இருக்க முதல் தாரத்துக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகளும் இரண்டாவது தாரத்துக்கு ஒரே பிள்ளையும் இருக்க, அந்தப் பிள்ளையான ஆர்.கே.சுரேஷ் கபடி விளையாட்டில் உயிரை விட, அவரது மனைவியான ராதிகா தன் மகன் அதர்வாவுடன் ராஜ்கிரனிடம் தங்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்து வாங்கிக்கொண்டு வெளியேறுகிறார்கள்.
இந்த விஷயமே ராஜ்கிரணுக்கு அதர்வாவை ஆகாதவர் ஆக்குகிறது. ஆனாலும் தாத்தாவின் பாசத்தை பெறுவதற்காக அதர்வா முயன்று கொண்டே இருக்கிறார்.
பாசமிக்க பேரனாக அதர்வா நடித்திருக்கிறார். தாத்தா, பெரியப்பா,மாமா ஆகியோர் ஒதுக்கினாலும் திரும்பத் திரும்ப அவர்களோடு சேர நினைக்கிறார். இக்காலத்தில் அரிதாகிப் போன உணர்வு. அதைச் சரியாகச் செய்திருக்கிறார்.
நாயகியாக ஆஷிகாரங்கநாத் என்கிற புதுமுகம் நடித்திருக்கிறார். குடும்பப்பாங்கு அளவான கவர்ச்சி நிதானமான நடிப்பு என முதல்படத்திலேயே கவனம் ஈர்க்கிறார்.
ஜெயப்பிரகாஷ், துரைசுதாகர், சிங்கம்புலி,செந்தி, ராஜ் அய்யப்பா, பாலசரவணன், ராதிகா, ஆர்.கே.சுரேஷ், ரவிகாளே உட்பட படத்தில் ஏராளமான நடிகர்கள்.
லோகநாதன் சீனிவாசனின் ஒளிப்பதிவு படத்தின் தன்மைக்குப் பொருத்தமாக இருக்கிறது.
ஜிப்ரானின் இசையில் பாடல்கள் சுகம். பின்னணி இசையும் பதம்.
பட்டத்து அரசன் – குடும்ப ஆட்டம்..!