May 17, 2025
  • May 17, 2025
Breaking News
April 13, 2025

நாங்கள் திரைப்பட விமர்சனம்

By 0 76 Views

தமிழில் அரிதான முயற்சியாகதான் இதுபோன்று ‘பேரல்லல் சினிமா’ எனப்படும் பரீட்சார்த்த முயற்சியிலான படங்கள் வருகின்றன.

அதற்காகவே படத்தை இயக்கிய அவிநாஷ் பிரகாஷையும்… முக்கியமாகப் படத்தைத் தயாரிக்க ஒத்துக் கொண்ட ஜிவிஎஸ் ராஜுவையும் பாராட்டியே ஆக வேண்டும்.

வணிக சினிமாவைப் பொறுத்த அளவில் கதைகள் பெரும்பாலும் தொழிலாளராக இருக்கும் ஒரு ஹீரோ படம் முடிவதற்குள் பெரிய தொழிலதிபராக வெற்றி பெற்றதைச் சொல்லி முடியும்.

ஆனால் இந்தப் படத்து நாயகன் ராஜ்குமார் தான் நடத்தி வந்த பள்ளி, எஸ்டேட், வீடு, கார் எல்லாவற்றையும் விற்றுவிட்டு ஒரு பள்ளிக்கு (முதல்வராக) வேலைக்குப் போவதுடன் படம் முடிகிறது. இப்படி வணிக சினிமாவில் சொல்லிவிட முடியாது.

ஆனால், கதை இதுவல்ல. தன் வாழ்வில் முன்னேற வேண்டும், தன் குடும்பத்தையும் பிள்ளைகளையும் முன்னுக்குக் கொண்டு வர வேண்டும் என்கிற பிடிவாதத்துடன் தெளிவற்ற… ஆனால், அவரது மனப்போக்கில் தெளிவான வாழ்க்கை வாழ்ந்து வரும் ராஜ்குமாருக்கு மனைவியோ, நண்பர்களோ, பிள்ளைகளோ நேர்மறை சிந்தனையுடன் உதவாமல் போன காரணத்தினால் அவர் வாழ்க்கை மட்டுமல்லாமல் அவரைச் சேர்ந்தவர்களின் வாழ்க்கையும் எப்படி சிக்கலுக்கு உள்ளாகிறது என்பதுதான் லைன்.

தன் விருப்பப்படி வாழ்ந்து வந்த அவர் எப்படி மற்றவர்களின் விருப்பத்திற்கு ஆட்பட்டு தன்னை தகவமைத்துக் கொள்கிறார் என்பதைச் சொல்வதுடன், தன் இலக்கை நோக்கி நகர்வதற்கான தடைகளையும் அது உறவே ஆனாலும் விலக்கி வைத்துவிடுகிறார் என்று போகிற கதை.

அந்தக் கதாபாத்திரத்தின் வழியாகப் பார்க்கும்போது அவரது ஒவ்வொரு செயலுமே ஒரு குறிக்கோளுடன் நகர்த்தப்பட்டதாகவே தோன்றும். 

ஆனால், தன்னைப் பற்றிய சுய பரிசோதனைகள் எதுவும் மேற்கொள்ளாமல் மற்றவர்களையே குறை சொல்லும் ஒரு மனிதனைப் பற்றிய கதை இது. அல்லது அந்த மனிதனின் வாழ்க்கையின் ஒரு பகுதி இது.

முதன்மைக் கதாபாத்திரத்தில் தந்தையாக நடித்திருக்கும் அப்துல் ரஃபே, தன் பாத்திரத்தை அப்படியே உள்வாங்கி நடித்திருக்கிறார். படம் பார்க்கும் கண்டிப்பான தந்தைகள் அமையப்பெற்ற ஒவ்வொருவரும் தங்கள் தந்தையை ஒரு நிமிடம் திரையில் இவர் மூலம் பார்த்து விட முடியும். 

அப்படிப்பட்ட கல்மனதுக்காரர் எப்படி கடைசியில் கரைகிறார் என்பதையும் போகிற போக்கில் சொல்கிறது படம்.

கதை எழுதி இயக்கிய அவினாஷ் பிரகாஷே ஒளிப்பதிவையும் ஏற்று இருப்பதால் நெருடல் இல்லாமல் செல்கிறது படம். சற்றே நீளமான… மெதுவான கதை நகர்த்தலுடன் கூடிய படமாக இருந்தாலும் நம் கண்களுக்கு ஒரு வாழ்க்கையைக் காட்டிய இயக்குனரைப் பாராட்டலாம்.

அந்த உணர்வை நமக்குள் கடத்துவதற்கு பெரும் அளவுக்கு உதவி இருக்கிறது வேத் ஷங்கர் சுகவனத்தின் இசை.

அப்துல் ரபேவின் மகன்களாக வரும் மிதுன், ரித்திக், நிதின் ஆகிய சிறுவர்களின் நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தை நினைத்தால் மனதைப் பிழிகிறது. 

ரஃபேவின் மனைவியாகவும் குழந்தைகளின் அம்மாவாகவும் வரும் பிரார்த்தனா, அவர்களது வாழ்க்கையில் போலவே படத்திலும் ஒட்டாமல் போகிறார்.

திரைக்கதையின் உணர்ச்சிகளுக்குத் தக்கவாறு கருப்பு வெள்ளை மற்றும் வண்ணத்தில் காட்சிகளை மாற்றிக் காட்டி இருக்கும் உத்தி பலே..!

படத்துக்குள் நிறைய கேள்விகள் நமக்கு எழுந்தாலும் அவற்றுக்கான பதில் அதில் இல்லவே இல்லை. பக்கத்து வீட்டிலிருந்து பார்ப்பவர்களுக்கு இந்த வீட்டில் நடக்கும் கதை என்னவாகத் தெரியுமோ அந்த அளவிலேயே நமக்கும் தெரிகிறது.

இது திட்டமிட்டு நடந்திருந்தால் பாராட்டலாம். 

நாங்கள் – வாழ்க்கைப் பாடம் அல்லது படம்..!

– வேணுஜி