இந்திய அரசாங்கத்தின் அமைச்சகத்தையே கைக்குள் வைத்திருக்கும் ஒரு மாபெரும் தொழில் அதிபரின் சாம்ராஜ்யத்தை சாதாரண ஒரு பிச்சைக்காரன் அழித்துவிட முடியுமா?
இப்படி நடந்தால் முடியும் என்று சில பல காய் நகர்த்தல்களில் கதை சொல்கிறார் இயக்குனர் சேகர் கம்முலா. அந்த ரசவாதம் பிச்சைக்காரன் அறியாமலேயே நடக்கிறது என்பது சுவாரஸ்யம்.
படத்தில் ஏகப்பட்ட ஆச்சரியங்கள்..!
படத்தின் ஹீரோ என்று நாம் அறிந்து வைத்திருக்கும் தனுஷ் முன்பாதியின் பாதியில்தான் வருகிறார். முன்னணி ஹீரோவான கிங் நாகார்ஜுனாவும் எந்தவித பரபரப்பும் இன்றி சிறையில் கைதியாக அறிமுகம் ஆகிறார். படத்தின் நாயகி ராஷ்மிகா மன்டனாவும் கிட்டத்தட்ட இடைவேளைக்கு முன்புதான் அறிமுகமாகிறார்.
அதுவும் தெருவில் யாசகம் கேட்கும் நிலையில் அமைகிற தனுஷின் அறிமுகம் வாய்பிளக்க வைக்கிறது..! இடையில் சில காட்சிகளைத் தவிர அவருக்குப் படம் முழுவதும் அழுக்கு உடைகளும், ஒப்பனை தொடாத தோற்றமும்தான். தெருவில் பிச்சைக்காரர்களுடன் அமர்ந்து யாசகம் பெறுவது மட்டுமல்லாமல் நிஜமான குப்பை மேட்டிலேயே நடித்திருப்பது எந்த இந்திய ஹீரோவும் மேற்கொள்ளத் தயங்கும் அசாதாரணமான ஆச்சரியம்.
அப்பாவித்தனமும், விசுவாசமும் நிறைந்த அந்தப் பாத்திரத்தில் யாசகம் பெறாமலேயே பல விருதுகள் வந்து விழக் கூடிய அர்ப்பணிப்பு அவருடையது.
அடுத்த வேளைச் சோற்றுக்கு வழியில்லா விட்டாலும் ‘பிழைக்கத்தான் வாழணும் ‘ என்கிற அவரது பாசிட்டிவ் அப்ரோச் ‘ நச்..!’
இயக்குனர் மீது எத்தனை நம்பிக்கை இருந்தால் தனுஷ் மட்டுமல்லாது ஆந்திரத்தின் முதல் நிலை நடிகரான நாகார்ஜுனாவும் பாத்திரத்துக்குள் புதைந்து இப்படி ஒரு வேடத்தில் நடித்திருப்பார்..? நேர்மைக்குப் பெயர் போன (!) ஒரு ஐஏஎஸ் அதிகாரி அந்த நேர்மைக்கு மதிப்பில்லாத போது அதர்மத்தின் பக்கம் சாய்ந்து கணநேர சுதாரிப்பில் மீண்டும் நேர்மைக்குள் வரும் வேடத்தில் நிறைவாகச் செய்திருக்கிறார் ”கிங்..!’
கையில் ஒரு சூட்கேஸ், நாலு சுடிதார்களோடு முடிந்து விடுகிறது ராஷ்மிகாவின் பாத்திரம். மனிதாபிமான அடிப்படையில் தனுஷுக்கு உதவப் போய் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடும் பாத்திரத்தில் இதுவரை பார்க்காத ஒரு ராஷ்மிகாவை இதில் நாம் பார்க்கிறோம்.
டிஎஸ்பி இசையமைப்பாளராக இருக்கும் படத்தில் கனவுப் பாடலிலாவது ஒரு குத்து போட்டு இருக்க வேண்டுமே ஶ்ரீ வள்ளி..? மூச்ச்.! (ராஷின் ரசிகர்கள் இயக்குனரை மல்லிச்சூ..!)
தனுஷின் காட்பாதர் வேடத்தில் வரும் பெரியவர் குரலை எங்கோ கேட்ட மாதிரி இருக்கிறதே என்று உன்னிப்பாகப் பார்த்தால்… அடடே… நம்ம பாக்யராஜ் சார்..!!!
இத்தனை நட்சத்திரங்கள் இருக்கும் படத்தில் வில்லனாக வரும் ஜிம் சர்ப் தான் படத்தை முழுவதும் தாங்கி இருக்கிறார். அவரில் ஆரம்பித்து அவர் முடிவிலேயே முடிகிறது படம்.
இந்தியாவின் வளங்களைக் கட்டி ஆளும் ஒரு செல்வந்தன் எப்படி இருப்பானோ அதில் ஒரு ரூபாய் கூட குறை இல்லை அவரிடம். இவரது பின்புலத்தையும் பாத்திரப்படைப்பையும் நம்பியே முதல் முக்கால் மணி நேரம் றெக்கை கட்டிப் பறக்கிறது திரைக்கதை. கிட்டத்தட்ட கதையின் நாயகனே அவர்தான்..!
நேர்மையான இன்ஸ்பெக்டராக வரும் சாயாஜி சிண்டே ஏன் வருகிறார், ஏன் சாகிறார் என்றே தெரியவில்லை. படத்தின் புட்டேஜை நீட்டியதைத் தவிர வேறொன்றும் அவர் செய்யவில்லை.
நடக்க முடியாத ஒன்றைத் திரையில் நடத்திக் காட்டுவதுதான் திரைக்கதையின் ஆணிவேர் அந்த வகையில் சேகர் கம்முலா இப்படி ஒரு லைனை வைத்துக்கொண்டு அசாத்தியமான விஷயங்களை சாத்தியமாக்க முயன்றிருக்கிறார்.
ஆனால், அதில் சில லாஜிக் மீறல்களும் இல்லாமல் இல்லை.
பல லட்சம் கோடிகளை அள்ளப் போகும் ஒரு திட்டத்தில் சின்ன குறை வந்துவிட அதற்குக் காரணமான தனுஷைத் தேடிக் கண்டுபிடிப்பதற்காக வெறும் ஆறு பேர் கொண்ட குழுவை மட்டுமே அனுப்பிக் கொண்டிருப்பது என்ன லாஜிக் என்று புரியவில்லை.
அதேபோல் அத்தனை பெரிய டீலே கைவிட்டுப் போய்விடும் நிலையில் அமைச்சரின் இணக்கமும் சுணக்கமாகும் வேளையிலாவது தனுஷை விட்டு ஒழித்து விட்டு இன்னொருவரை வைத்து பணத்தைக் கைமாற்றி இருக்க முடியும்.
சாதாரண தனுஷைக் தேடிக் கண்டுபிடிக்க முடியாமலும், நாகார்ஜுனாவும் தன் குடும்பத்தைப் பாதுகாப்பாக வெளிநாட்டுக்கு அனுப்பி விட…இப்படி ஒரு இனா வானா கோடீஸ்வரனை எளிதாக ஏமாற்றி விடலாம் போலத்தான் இருக்கிறது.
அவரும், அவர் மனைவி, தந்தையும் மட்டுமே இருக்கும் அந்தச் சின்னஞ்சிறு குடும்பத்துக்கு எதற்கு எத்தனை கோடிகள்..? வீட்டு ஹாலில் ஒரு ஃபேமிலி போட்டோவாவது மாட்டி இருக்கலாம்.
கோடீஸ்வரனின் நம்பிக்கைக்குரிய கையாளாக இருக்கும் ரோபோ என்கிற பாத்திரம், தேவையின் முக்கியத்துவம் புரியாமல் பிச்சைக்காரி மேல் (அதுவும் கர்ப்பிணி) பாலியல் துன்புறுதலை நடத்த விழைவது குமட்ட வைக்கும் கற்பனை..!
நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவில் இந்தியாவின் வளமையும் ஏழ்மையும் ஒருசேர பிரதிபலிக்கிறது. Hats off..!
தேவி ஸ்ரீ பிரசாத்தின் கைகளைத்தான் கட்டிப்போட்டு விட்டார் இயக்குனர். ஒரே ஒரு மரண கானா மட்டும் போனால் போகிறது என்று அவருக்கு வாய்க்க… குத்தித் தள்ளிவிட்டார் மனிதர்..!
படத்தின் மீது முதல் பாதியில் ஏற்பட்டிருக்கும் நம்பிக்கையைக் காக்கத் தவறிவிட்டது படத்தின் பின் பாதி. அதிலும் கிளைமாக்ஸில வில்லன் எடுக்கும் முடிவு வழக்கொழிந்த சினிமாத்தனம்..!
கொஞ்சம் கவனமாகக் கையாண்டிருந்தால் கொண்டாடி இருக்க வேண்டிய களம்.!
குபேரா – பாவங்களை வென்ற புண்ணிய ‘கோடி..!’
– வேணுஜி