June 15, 2025
  • June 15, 2025
Breaking News
July 28, 2019

ரசிகர்களைக் கவர கழுகு 2 இயக்குநர் கையாண்ட வழி

By 0 997 Views

‘கழுகு’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமான சத்யசிவா, இடையில் சில படங்கள் இயக்கிய பிறகு ஏழு வருடங்கள் கழித்து மீண்டும் ஒரு அழுத்தமான கதையுடன் ‘கழுகு-2’ என்ற படத்தை உருவாக்கியுள்ளார்.

முதல் பாகத்தில் நடித்த கிருஷ்ணா, பிந்து மாதவி என அதே ஜோடியுடன் காளி வெங்கட், எம்.எஸ்.பாஸ்கர் என முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களும் இந்த படத்தில் உடன் பயணிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ள இந்த படம் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

ரசிகர்களுக்கு லேசாக ஒரு முன்னோட்டம் காட்டினார் இயக்குனர் சத்யசிவா..

“கழுகு படம் போலவே இந்தப் படத்தின் கதையும் முழுக்க முழுக்க காட்டில் நடக்கும் கதைதான். ஆனால், முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. காமெடியை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரில்லர் படம் என்று ‘கழுகு-2’வை சொல்லலாம்..

Director Sathyasiva

Director Sathyasiva

கழுகு படத்தில் அறிமுகமான அதே பிந்துமாதவிதான் இப்போதும். எந்தவித மாற்றமும் இத்தனை வருடங்களில் அவரிடம் ஏற்படவில்லை. கழுகு படம் இயக்கும்போது எனக்கு புதியவராக இருந்த கிருஷ்ணா இப்போது கிட்டத்தட்ட உறவினர் போல மாறிவிட்டார்..

என் சொந்த ஊர் மூணார். அந்த பகுதியில் நடைபெற்ற ஒரு உண்மையான சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த கதையை உருவாக்கி உள்ளேன். மூணார் மற்றும் அதன் அருகில் உள்ள மறையூர் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தியுள்ளோம்..

காடுகளில் படப்பிடிப்பு நடத்துவது எப்போதுமே சவாலானது தான். மலைப்பாங்கான பகுதிகளில் எந்த வாகன வசதியும் இல்லாமல் மலைச்சரிவுகளில் கால்நடையாகவே ஏறியும் இறங்கியும் அட்டைகளின் கடிக்கு ஆளாகியும் ஒருவழியாக படப்பிடிப்பை சிறப்பாகவே நடத்தி முடித்தோம்.

இந்தப்படத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் மக்களுக்கு இடையூறு செய்யும் ஆபத்தான மிருகமான செந்நாய்களை வேட்டையாடும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கிருஷ்ணா.

கழுகு படத்தைப் போல இந்த படத்திலும் அழுத்தமான ஒரு காதல் இருக்கிறது. அதே போல மனதை உருக வைக்கும் சென்டிமென்டான கிளைமாக்ஸ் காட்சியும் இந்த படத்தில் இருக்கிறது.. நம் சினிமாவை பொறுத்தவரை என்னதான் நகைச்சுவையுடன் படங்களை நகர்த்தினாலும் இறுதியில் சென்டிமெண்ட் கலந்த ஒரு கிளைமாக்ஸ் கொடுக்கும்போதுதான் ரசிகர்கள் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்..!”

மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் சார்பில் சிங்காரவேலன் தயாரித்துள்ள இந்தப்படத்தை ஸ்க்ரீன் சீன் மீடியா நிறுவனம் வரும் ஆக-1ஆம் தேதி பிரமாண்டமாக வெளியிடுகிறது.