“என் அனுமதி இல்லாமல் நான் இசையமைத்த திரைப்பட பாடல்களை யாரும் பயன்படுத்தக் கூடாது…” என்று கொஞ்ச காலம் முன்பு இசைஞானி இளையராஜா தன் பாடல்களை பயன்படுத்துவோர்களிடம் ராயல்டி கூறியிருந்தார்.
அது சர்ச்சைக்குரிய பேச்சானது. காரணம் ஒரு படத்தில் வரும் பாடல்கள் நியாயப்படி அந்த படத்தின் தயாரிப்பாளரைதான் போய்ச் சேர வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சிலர் அந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
பொதுவாகவே திரைப்படப் பாடல்கள் மூலம் கிடைக்கும் வருமானம் யாருக்கு சொந்தம்? என்பது குறித்த சர்ச்சை இருந்து கொண்டே இருக்கிறது.
இந்நிலையில் திரைப்பட இசை மற்றும் பாடல்கள் மட்டுமல்லாமல் சுயாதீன பாடல்களின் உரிமை யாரை சேரும், ராயல்டி எனப்படும் வருமான பங்கு போன்றவற்றுக்கு யார் சொந்தம் கொண்டாடலாம், பாடல்களைப் பயன்படுத்துபவர்கள் எப்படி அதை முறையாக வாங்கலாம், அதற்காக இயங்கும் அமைப்புகள் என்னென்ன என்பது உள்ளிட்ட அனைத்து சந்தேகங்களையும் தீர்த்து வைக்கும் விதமாக, சென்னையில் உள்ள முன்னணி IPR Law நிறுவனமான KRIA Law, குழு ஆலோசனை நிகழ்வை மார்ச் 1 ஆம் தேதி சென்னையில் நடத்துகிறது.
இந்த நிகழ்வில்…
* சுயாதீன கலைஞர்கள், லேபிள்கள், தயாரிப்பாளர்களின் உரிமைகள் (Rights of Independent Artists, Labels, Producers)
* இசை நிறுவனங்கள் மற்றும் சங்கங்களின் பங்கு (Role of Music Organisations & Societies)
* திரைப்படம் மற்றும் வணிக இசையில் AI-ன் தாக்கம் (AI’s impact on Film & Commercial Music)
* உரிமங்களை சமநிலைப்படுத்துதல் (Balancing Licenses)
போன்ற தலைப்புகளில் குழு விவாதங்கள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் இசைத்துறையைச் சேர்ந்த முன்னணி கலைஞர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், இசை நிறுவனங்கள் உள்ளிட்ட தரப்பினர் அனைவரும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
இந்த நிகழ்வின் ஏற்பாடு குறித்து பத்திரிகையாளர்களை சந்தித்த KRIA Law நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக பங்குதாரர் எம்.எஸ்.பரத் பின்வரும் கருத்துக்களை முன்வைத்தார்.
“உலக ஐபி தினமாக ஏப்ரல் 26 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் உலக ஐபி தினத்தின் இந்த வருட கருப்பொருள் இசை மற்றும் ஐபி.
நம் சென்னையில் இசை என்றால் மார்கழி மாதம் தான். ஆனால், அன்றைய தினம் இசைக் கலைஞர்கள் வெளிநாடுகளுக்கு சென்று விடுவதால் மார்ச் மாதம் இந்த நிகழ்வை வைத்திருக்கிறோம்.
ஒரு பாடல் உருவாவதற்கும், இசை உருவாவதற்கும் ஒருவர் மட்டும் போதாது, பலர் தேவைப்படுவார்கள். இதில், இசைக்கலைஞர்கள், பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள், பாடகர்கள் என பல் கலைஞர்கள் அடக்கம். ஆனால், இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைப்பது தயாரிப்பாளர்தான். அதனால் இவற்றுக்கு முதலாளி தயாரிப்பாளர்தான்.
காப்பிரைட் சட்டத்தைப் பொறுத்தவரையில் யார் கிரியேட்டர்?, யார் முதலாளி? என்பது குறித்த உரிமைகள் இருக்கிறது. இவை அனைத்துக்கும் முதலாளி தயாரிப்பாளர்தான் என்றாலும், பாடலாசிரியர், இசைக்கலைஞர்கள், பாடகர்கள் என அனைவருக்கும் ராயல்டி என்ற பங்கு வழங்கப்பட வேண்டும்.
அதே சமயம் இவர்கள் தனிதனியாக சென்று ராயல்டி வாங்க முடியாது. எனவே, இவர்களுக்காக ஒரு அமைப்பு இருக்கிறது, அவர்கள் மூலமாக இவர்களுக்கு ராயல்டி பெற்றுத்தரப்படுகிறது. இந்த அமைப்பினரோடு இது போன்ற பல்வேறு அமைப்பினர் நாளைய நிகழ்வில் கலந்துக்கொள்கிறார்கள்.” என்றார்.
ஒரு திரைப்படத்தின் இசை மற்றும் பாடல்களுக்கு அந்த படத்தின் தயாரிப்பாளர் முதலாளியாக இருந்தாலும், அதை வேறு ஒரு ஆடியோ நிறுவனத்திடம் விற்பனை செய்த பிறகு, அதன் உரிமையாளர் அந்த ஆடியோ நிறுவனம் தானா ? என்ற கேள்விக்கு பதில் அளித்த எம்.எஸ்.பரத், “ஆடியோ நிறுவனத்திடம் விற்பனை செய்யும் போது போடப்படும் ஒப்பந்தம் தான் அதை முடிவு செய்யும். ஒப்பந்தத்தில் எதற்கெல்லாம் உரிமம் கொடுக்கப்பட்டிருக்கிறது, எத்தனை வருடங்கள் உரிமம் கொடுக்கப்பட்டிருக்கிறது, என்பதைப் பார்க்க வேண்டும்.
ஐந்து வருடங்களுக்கு உரிமம் கொடுக்கப்பட்டால், அந்த காலக்கட்டட்தில் மட்டுமே அந்த ஆடியோ நிறுவனம் பயன்படுத்த முடியும், அதன் பிறகு மீண்டும் அந்த உரிமம் தயாரிப்பாளருக்குதான் வந்தடையும். அதே போல், சம்மந்தப்பட்ட தயாரிப்பாளருக்குப் பிறகு அவரது குடும்ப உறுப்பினர்களிடம் 60 வருடங்களுக்கு அந்த உரிமம் இருக்கும்.” என்றார்.
சர்வதேச வர்த்தக முத்திரை சங்கத்தின் (International Trademark Association) வருடாந்திர சந்திப்பு அமெரிக்காவின் கலிபோர்னியாவில் மே 17 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதற்கான ஒரு ஆரம்பக்கட்ட நிகழ்வுதான் சென்னையில் நடைபெறும் KRIA Law நடத்தும் ஐபி மற்றும் இசை என்று கூறலாம்.