April 30, 2024
  • April 30, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • பல பாகங்களைக் கொண்ட படைப்பின் தொடக்கம்தான் துருவ நட்சத்திரம் – கௌதம் மேனன்
November 21, 2023

பல பாகங்களைக் கொண்ட படைப்பின் தொடக்கம்தான் துருவ நட்சத்திரம் – கௌதம் மேனன்

By 0 183 Views

ஒரு நடிகராக வெற்றி அடைந்தாலும் தன் முத்திரையான இயக்கத்தை கைவிடாதவர் கௌதம் வாசுதேவ் மேனன். அவர் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்த இப்போது வெளியாக இருக்கும் படம் ‘துருவ நட்சத்திரம்.’

பல்வேறு தடைகளைக் கடந்து இந்த படம் வெளியாக இருக்கும் தருணத்தில் இதைப் பற்றி பேசினார் கௌதம் மேனன்.

சமீபத்தில் வெளியான துருவ நட்சத்திரம் டிரைலருக்கு பெரிய வரவேற்பு கிடைத்திருப்பதோடு, அதில் இடம் பெற்ற கிரிக்கெட் தொடர்பான வசனங்கள் வைரலாகி வருகிறது. எனவே, கிரிக்கெட் தொடர்பான விசயங்கள் இருக்கிறதா? என்ற கேள்விக்கு பதில் அளித்தவர், “படத்தில் கிரிக்கெட் பற்றிய விஷயங்கள் எதுவும் இல்லை. ஒரு குழுவைப் பற்றிய படம், உயர் பதவியில் இருக்கும் ஒருவர் இந்த குழுவை ஒருங்கிணைக்கிறார்.

இதில் 11 பேர் இருப்பதால், ஒரு கிரிக்கெட் அணியோடு ஒப்பிட்டு உருவாக்கிய டிரைலர் அது. படத்திலும் அந்த வசனங்கள் இடம் பெறும். ஆனல், கிரிக்கெட் பற்றி எதுவும் இல்லை.” என்றவர் தொடர்ந்து பேசினார்.

”இது தொடர்ச்சியான பாகங்களை கொண்ட படமாக இருக்கும். இது தான் அதன் தொடக்கம், இந்தப் படத்தின் முடிவில் ஒரு ட்விஸ்ட் இருக்கும். அதைத் தொடர்ந்து அடுத்த பாகம் வரும். அதில் வேறு ஒரு வில்லன் வருவார், வேறு ஒரு ஹீரோ கூட வருவார். சூர்யாவுக்காக நான் முன்பு எழுதிய கதைக்கும், இதற்கும் இருக்கும் வித்தியாசம், அதில் ஒரு உணர்வுப்பூர்வமான பிளாஷ்பேக் இருந்தது. அது இதில் இருக்காது, விக்ரம் சார் உள்ளே வந்ததால் அதை எடுத்துவிட்டேன்.

இந்தக் கதை முதலில் சூர்யாவுடன் பண்ணுவதாக இருந்து கைவிடப்பட்டவுடன் ரஜினி சாரிடம் சொன்னேன். அப்போதும் எமோஷனல் காட்சிகளை நீக்கிவிட்டுதான் சொன்னேன். ஒரு ஸ்டைலிஷான ஆக்‌ஷன் படமாக இருக்கும் சார், என்று தான் சொன்னேன். அவரும் கேட்விட்டு பிடித்திருப்பதாக சொன்னார்.

ஆனால், வேறு சில காரணங்களால் பண்ண முடியவில்லை. அதன் பிறகுதான் விக்ரம் உள்ளே வந்தார், அவரிடம் சொன்ன போதும் பிளாஷ்பேக் இல்லாமல் சொன்னேன். அவர் ஓகே என்று சொன்னார். ஆனால், அவர் கேட்ட ஒரே கேள்வி, “உங்கள் படத்தில் வில்லன் கதாபாத்திரம் பலம் வாய்ந்ததாக இருக்குமே, இதிலும் அப்படித்தானா?” என்பதுதான். அப்படி இருந்தால்தான் நீங்கள் பலமாக இருப்பீர்கள் என்று சொன்னவுடன் அவர் ஒகே சொல்லிவிட்டார்.

கதாபாத்திரத்தைக் கேட்ட பிறகு அதற்கு எந்த அளவுக்கு நடிக்க வேண்டுமோ அதை மட்டும்தான் விக்ரம் சார் செய்தார். கூடுதலாக இதை இப்படி வைக்கலாம், எனக்கு இது வேண்டும் என்று எதையுமே அவர் கேட்கவில்லை. அதனால், அவரிடமும் நான் எதையும் கேட்டுப் பெறவில்லை. நீங்கள் இந்த வேடம், இப்படிதான் இருக்க வேண்டும் என்று சொல்லியவுடன் அவர் அதற்கு ஏற்றவாறு நடிக்கத் தொடங்கி விட்டார். வில்லனாக நடித்த விநாயகனும் அப்படிதான். எனக்கு மிகப்பெரிய உதவியாக இருந்தார். அவருடைய நடிப்பை பார்த்து விக்ரம் சார் பாராட்டினார்.

“கதை பற்றி..?”

“மும்பை தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகு உருவாக்கப்பட்டது என்பது போல்தான் முன்பு சொன்ன குழுவை வைத்திருக்கிறேன். 15 வருடங்களுக்குப் பிறகு நடக்கும் சம்பவம் என்பதால் இவர்கள் யார்? எப்படி உருவானார்கள் என்பதை சொல்லியிருக்கிறேன். அந்தக் குழுவை உருவாக்குபவர் அரசு பதவியில் இருப்பவர், ஆனால் அவர் எந்த பதவியில் இருப்பவர் என்பதை இப்போது சொல்ல முடியாது.

அந்த கதாபாத்திரத்தில் பிரபல நடனக் கலைஞர் பத்மஸ்ரீ விருது வென்ற தனஞ்செயன் நடித்திருக்கிறார். முதலில் அமிதாப் பச்சனைதான் அந்த வேடத்தில் நடிக்க வைக்க முயற்சித்தோம், ஆனால் வெளிநாட்டுப் பயணங்கள் இருப்பதால் அவர் நடிக்க மறுத்துவிட்டார். அப்போதுதான் தனஞ்செயன் சாரை பார்த்தேன், அவர் சரியாக இருப்பார் என்று தோன்றிது நடிக்க வைத்துவிட்டோம். இப்போதைக்கு இதைத்தான் சொல்ல முடியும்..!”

“நீங்கள் இயக்கிய போலீஸ் ஸ்டோரி படங்களான ‘காக்க காக்க’, ‘வேட்டையாடு விளையாடு’ படங்களுக்கும் ‘துருவ நட்சத்திரம்’ படத்திற்கும் எந்த மாதிரியான வித்தியாசம் இருக்கும்?” என்ற கேள்விக்கு இப்படி பதில் அளித்தார் கௌதம் மேனன்…

 “காக்க காக்க’ ஒரு போலீஸ் அதிகாரியின் கதை, அதற்கான வழியில் அதன் திரைக்கதை இருக்கும், அவர் யார் என்பதையும் விளக்கியிருப்பேன். ஆனால், துருவ நட்சத்திரம் படத்தை பொறுத்தவரை ஒரு குழு உருவாக்கப்படுகிறது. விக்ரம் ஒரு பள்ளியில் வாத்தியாராக பணியாற்றுபவர். இதுதான் அவருக்கான அடையாளம். ஆனால், அவருக்கு வேறு ஒரு உலகம் இருக்கிறது, அது யாருக்கும் தெரியாது என்பதால், அவருடைய கதாபாத்திரத்தை விளக்கக்கூடிய விஷயங்களை இதில் செய்யவில்லை.

ஒரு ஜானராக சொன்னால், இது ஒரு ஸ்பை த்ரில்லர் படம் என்று சொல்லலாம். ஆனால், ரொம்ப டெக்னிக்கலாக அதற்குள் நான் போகவில்லை. நாட்டுக்கு ஒரு பிரச்சனை வருகிறது அந்த பிரச்சனைக்காக அந்தக் குழு எப்படி பணியாற்றுகிறார்கள், அவர்களுக்கு ஒரு பிரச்சனை வருகிறது. அதை அவர்கள் எப்படிக் கையாளுகிறார்கள், என்பதைதான் சொல்லியிருக்கிறேன்.

இந்த குழுவினர் இந்தியாவில் மட்டும் அல்ல உலகம் முழுவதும் பயணப்படுவார்கள். இந்தியாவுக்கு எதிரான பிரச்சினைகளைக் கையாள்வதற்காக உலகம் முழுவதும் பயணப்படும் ஒரு குழுவாக இருப்பார்கள்.

மொத்தத்தில் இது அனைவருக்குமான படம் தான். அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில்தான் படம் இருக்கும். இது ஒரு ஸ்டைலிஷான ஆக்‌ஷன் கமர்ஷியல் படம் தான். ஆனால், அதை நான் ரியலாக கொடுத்திருக்கிறேன். பிரமாண்டமான சண்டைக்காட்சிகளை நம் ரசிகர்கள் ஏற்கனவே பார்த்துவிட்டார்கள். அதையே நான் திரும்ப செய்ய முயற்சிக்கவில்லை. அதே சமயம், படத்தில் உள்ள சண்டைக்காட்சிகள் ஸ்டைலிஷாகவும், ரியலாகவும் இருக்கும்…”

மிகப்பெரிய பொருட் செலவில் பிரமாண்டமாக உருவாகியுள்ள ‘துருவ நட்சத்திரம்’ இஸ்தான்புல், சார்ஜா, துருக்கி, அமெரிக்கா, பல்கேரியா, ஜார்ஜியா, ருமேனியா, அபுதாபி போன்ற நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. மேலும், ஜேம்ஸ் பாண்ட் பட பாணியில் இப்படத்தை அடுத்தடுத்த பாகங்களாக தொடர்ந்து எடுக்க திட்டமிட்டுள்ள இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன், ஒன்று இரண்டு பாகங்களுக்கு பிறகு விக்ரம் நடிக்கவில்லை என்றாலும், வேறு ஒரு ஹீரோவை வைத்து அடுத்தடுத்த பாகங்களை எடுக்க திட்டமிட்டுள்ளார்.

கௌதம் வா(சுதே)வ் மேனன்..!