April 26, 2024
  • April 26, 2024
Breaking News
August 27, 2019

விஜய் படங்கள் இயக்குநரின் வேதனைப் பதிவு

By 0 1369 Views
விஜய்யை வைத்து ‘திருமலை’, ‘ஆதி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் ரமணா (சந்திரசேகர்) புற்றுநோய் பாதிக்கப்பட்ட நிலையில் வாழ்க்கையுடன் போராடி வருகிறார். இந்நிலையில் அதைக் காரணப்படுத்தியே போக்குவரத்து போலீசார் தன்னை தரக்குறைவாக நடத்தியதாகவும், அதிகார மீறலில் ஈடுபட்டதாகவும் வேதனைப்பட்டு தன் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு கீழே…
 
“கண்ணியம் மிக்க சட்டம் மற்றும் காவல்துறை மீது எனக்கு எப்போதும் மரியாதை உண்டு. அதில் பல நேர்மையான அற்புத மனிதர்களையும் தனிப்பட்டமுறையில் எனக்கு மிக நெருங்கிய பரிட்சையமும், நட்பும் உண்டு. ஆனால்…
 
இன்று மேலே படத்திலுள்ள, நான் சந்தித்த நேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் K. குமரன், காவலர் M. ராமர் இருவரும் அந்த கண்ணியமான  நேர்மையான அதிகாரிகள் வட்டத்துக்குள் வராதது மட்டுமல்லாமல் ஒரு சராசரி மனிதப்பிறவியாகக்கூட கருதத் தகுதியற்றவர்கள்.
 
இன்று காலை நான்,என் மனைவி, மகள் உட்பட காரில் சென்றபோது சாந்தோமில் என் வீட்டருகில் காவல்துறை  சாலை விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அபராதம் விதித்துக்கொண்டிருந்தது. 
 
சாலை விதிகளை மீறும் வழக்கம் எனக்கு எப்போதும் இல்லாத காரணத்தால் நான் சாலை விதிகளுக்குட்பட்டே என் வாகனத்தை திருப்பினேன். மிதமான வேகத்தில் வந்த என்னை வழியில் அங்கிருந்த காவலர் M. ராமர் வழிமறித்து காரை நிறுத்தச்சொல்லி நான் விதியை மீறி திரும்பியதாக சொல்லி அபராதம் கட்ட சொன்னார். ஆனால், விதியை மீறாததால்  நான் அபராதம் கட்ட மறுத்தேன். அதற்கு அவர் என்னை காரில் இருந்து இறங்க வற்புறுத்தி எனது லைசன்சை காண்பிக்கச்சொல்லி வாங்கி அங்கு அபராதம் விதித்துக்கொண்டிருந்த உதவி ஆய்வாளர் K. குமார் அவர்களிடம் தந்து எனக்கு அபராதம் விதிக்கச் சொன்னார். 
 
Director Ramana Chandrasekar Post

Director Ramana Chandrasekar Post

அதற்கு நான் அந்த உதவி ஆய்வாளரிடம் அபராதம் கட்டுவதற்காக காவலரிடம் என் லைசன்சை தரவில்லை, எனக்கு வாகனம் ஓட்ட தகுதி இருப்பதற்கு அத்தாட்சியாக மட்டுமே தந்ததாகவும் கூறி அபராதம் கட்ட மறுத்தேன்.  

 
அப்போது அந்த மனித பண்பாளர் உதவி ஆய்வாளர் திரு.  K. குமார். அவர்கள் என்னை பார்த்து, ஏய்.. தள்ளி நின்னு பேசுடா.. மேல எச்சில் படப்போகுது… உன் நோய் எனக்கு ஒட்டிக்கும்… என்று கூற கேன்சரால் பாதிக்கபட்டதை அறிந்தும் அவர் அப்படி பேசியதில் நான் மிகுந்த மனவேதனை அடைந்தேன். 
 
ஒரு கான்ஸரால் பாதித்தவனை அரசாங்கத்தின் காவல்துறையில் பொறுப்பிலிருக்கும் ஒருவர் இப்படி மனிதானமற்ற முறையில் பேசியது வேதனைக்குறியது மட்டுமல்ல கண்டிக்கத்தக்கதும் கூட… 
 
அதைவிட கொடுமை. அழைத்துவந்த காவலர் M. ராமரிடம், “பாதியிலயே சாவப் போறவனயேல்லாம் என்கிட்ட கூட்டிகிட்டு வந்து என் உயிர ஏன் எடுக்குற..?” என்று கூற, நான் அவரிடம் நீங்கள் “அப்படிப்பேசுவது தவறு…” என்று உதவி ஆய்வாளரிடம் சுட்டிக்காட்ட, அதற்கு, “அப்படித்தாண்டா பேசுவேன்… நீ என்ன பெரிய மயிரா..? என்ன புடுங்குறியோ போய் புடுங்கு…” என்று தன் பதவியையும் பொறுப்பையும் உணராமல் கீழ்த்தரமாக பேச, கோபத்தால் நானும் அவரை என்னை அவர் கூறிய அதே வார்த்தைகளால் அவரைத் திருப்பித்திட்ட…வாக்குவாதம் நீடிக்க… பக்கத்தில் முதல் கூறிய வட்டத்தில்  மற்ற உதவி ஆய்வாளர் பதவி வகிக்கும் ஒருவர் உண்மையை உணர்ந்து என்னை சமாதானப்படுத்தி அங்கிருந்து அபராதம் விதிக்காமல் அனுப்பி வைத்தார். 
 
அங்கு நிலவிய சூழலால் நானும் காரை எடுத்துக்கொண்டு நகர, சற்று தூரம் வந்தவுடன் என் ஒருஜினல் லைசன்ஸ் அந்த கண்ணியமற்ற காவல் அதிகாரிடம் இருப்பதை உணர்ந்து மீண்டும் அவ்விடத்திற்கு நான் காரை திருப்ப முயல, என் மகள் தர்ஷினி “வேண்டாம்பா… நீங்க மறுபடியும் போகவேண்டாம். நான் சென்று வாங்கி வருகிறேன்…” என்று கூற, மேலும் சூழலை சிக்கலாக்க விரும்பாமல் மகளை லைசன்ஸ் வாங்க அனுப்பினேன்… 
 
ஆனால் அந்த K. குமார் என்ற உதவி ஆய்வாளர் பெண் என்ற காரணத்தாலும் அவளின் அமைதியான குணத்தை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அவளை வேண்டுமேன்றே நீண்ட நேரம் காத்திருக்க வைத்து, “உன் அப்பன் என்னை எதிர்த்து பேசியதால் அபராதம் கட்டினால்தான் லைசன்சை தருவேன்…” என்று நிர்பந்தித்ததால், என் மகள் நான் மீண்டும் அங்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு என் குரல் மற்றும் உடல் நிலையை மோசமாக்கி கொள்ள விரும்பாமல் எனக்கு தெரிவிக்காமல் அபராத்தை செலுத்தி என் ஓட்டுனர் உரிமத்தை பெற்றுக்கொண்டுவந்து தந்தாள். அவள் அபராதம் செலுத்தியது எனக்கு தெரியாத காரணத்தாள் நான் காரை எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன்.  வீட்டுக்கு வந்த பின்பே அவள் அவள் அபராதம் கட்டி லைசன்ஸை வாங்கி வந்ததை வருத்தத்துடன் கூறினாள். 
 
அரசாங்கத்தின் விதிமுறைகள், ஆணைகள் மக்களை நெறிப்படுவதற்காக இருக்கவேண்டும். மாற்றாக இதுபோன்ற மனிதானமற்ற மோனமான ஈனச்செயலில் இடுபடும் அரசு அதிகாரிகளுக்கு சாதகமாய் இருப்பது வேதனை. 
 
குறிப்பாக கேன்ஸர் பாதித்த ஒருவனையே இப்படி அந்த ஆய்வாளர் நடத்துவாறென்றால்… சராசரி வெகுஜனத்திடம் அவரது அணுகுமுறை என்னவாக இருக்கும் என்று நினைக்கவே பயங்கரமாக உள்ளது. 
 
உயிருடனும், வாழ்வுடனும் போராடிக்கொடிக்கும் எங்களைப்போன்ற கேன்ஸர் போராளிகளிள்
யாரிடமும் அனுதாபத்தை எதிபார்ப்பதில்லை… ஆனால், இவர்களை போன்றவர்கள் கருணையுடன் நடத்தவிட்டாலும் பரவாயில்லை.. ஆனால் ‘பாதியில் சாகப்போகிறவன்…’ என்றும் கண்ணியமில்லாத வார்தைகளை சராசரி மனிதர்களிடம் அதிகாரத் திமிரில் பயன்படுத்தி காயப்படுத்துவதை தவிர்க்கலாம். 
 
செய்வார்களா…? 
 
வேதனையுடன் 
ரமணா
 
பின் குறிப்பு :-  எனது இந்தப் பதிவில் என் கருத்தில் நியாயம் இருப்பதாய் நண்பர்கள் நீங்கள் கருதினால் இப்பதிவை உங்கள் பக்கத்தில் பகிரவும். 
 
உங்களின் பகிர்தலால் கேன்சரால் பாதிக்கப்பட்டவர்களின் வேதனை யார் மூலமாவது  அம்மனிதர்களை சென்றடைந்து குறைந்தபட்சம் அவர்களிடத்து சக மனிதர்களிடம் நடந்துகொள்ளும் விதம் மனிதத்தன்மையுடன் மாறாதா என்ற நப்பாசைதான். 
 
நம்பிக்கைதானே வாழ்க்கை. 
 
 ✍நட்புடன் 
ரமணா
 
இதன் தொடர்ச்சியாக விசாரித்ததில் போலீஸ் உதவி கமிஷனர் ஒருவர் ரமணாவைச் சென்று சந்தித்து விசாரித்து நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்ததாகவும், உரிய விசாரணை நடந்து வருவதாகவும் கூறியிருக்கிறார். போக்குவரத்து ஐஜியும் ரமணாவிடம் பேசியதாகத் தெரிகிறது.