April 30, 2025
  • April 30, 2025
Breaking News
March 18, 2025

CITY OF DREAMS ஹாலிவுட் பட விமர்சனம்

By 0 53 Views

அமெரிக்காவில் குடியேற விரும்பும் வெளிநாட்டவர் அனைவருக்குமே அது ஒரு கனவு பிரதேசமாகத்தான் இருக்கும். தங்கள் கனவுகள் நிறைவேற அங்கே குடியேற அத்தனை பேரும் ஆசைப்பட்டுச் செல்கிறார்கள்.

ஆனால் அத்தனை பேரின் கனவுகளும் நிறைவேறுவதில்லை. மாறாக, விவரம் தெரியாதவர்கள் அந்த நாட்டின் அடிமைகள் ஆக்கப்படுகிறார்கள் என்கிறது இந்த படத்தின் கதை. 

ஆரி லோபஸ் மெக்சிகோவைச் சேர்ந்த சிறுவன். ஒரு கால்பந்து வீரனாக ஆசைப்பட்டு கையில் கிடைத்த ஒரு கால்பந்து விளையாட்டு விளம்பரத்தை வைத்துக்கொண்டு அமெரிக்கா சென்று கால் பந்தாட்ட வீரனாக ஆசைப்படுகிறான்.

அங்கே சென்று வேலை பார்த்துக்கொண்டே வீட்டுக்கு சம்பளமும் அனுப்ப முடியும், அவனுடைய கனவும் நிறைவேறும் என்று சொல்லி அவனை அங்கிருந்து அழைத்துச் செல்கிறார் ஒரு ஏஜென்ட். ஆனால் அவனை அவர் கொண்டு விட்டதோ ஒரு கொத்தடிமை வளாகத்தில். 

உடைகளை உற்பத்தி செய்யும் அந்த நிறுவனத்தில் ஆரியைப் போன்று பல சிறுவர்களும், சிறுமியர்களும் கடத்திவரப்பட்டு அங்கே அடிமைகளாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். 18 மணி நேர வேலை – சரியாக செய்யவில்லை என்றால் அடி, உதை, சவுக்கடி என்று அந்த இருண்ட கொட்டடிக்குள் அடிமைப்படுத்தப்பட்ட ஆரி லோபஸ் என்ன ஆனான் என்பதுதான் கதை.

காரில் மெக்சிகோவில் இருந்து சொகுசுப்பயணம் மேற்கொள்ளும் ஆரி லோபஸுக்கு அப்போது தெரியாது, நாம் அங்கே அடிமையாகச் செல்கிறோம் என்று – படம் பார்க்கும் நமக்கும்தான்.

ஆனால் ஒரு கட்டடத்தின் கதவைத் தட்டி “இந்தா.. இவனை வைத்துக் கொள்…” என்று ஒருவனிடம் ஆரியை ஒப்படைக்கும் போது அந்தக் கட்டிடத்தின் உள்ளே இருக்கும் இருள் சூழ்ந்த ஒளி அமைப்பே நமக்கு அவன் எதிர்காலத்தைச் சொல்லி விடுகிறது.

அங்கே வாங்கும் ஒவ்வொரு சவுக்கடியையும் தன் கால்பந்தாட்டக் கனவின் மூலமே பொறுத்துக் கொண்டும் சகித்துக் கொண்டும் ஆரி வாழ்வது நம்மை கண்ணீர் சிந்த வைத்து விடுகிறது. 

அதிலும் தன் மீது அன்பைப் பொழிந்த தோழியை இரவில் காணவில்லை என்றதும் அவளைத் தேடி அந்த ரகசிய கட்டடத்தினுள் அவன் அடிமேல் அடித்து வைத்து பயணப்படும் போது என்ன விதமான கொடூர சிக்கலில் இவன் அகப்படுவானோ என்று நம் மனம் பதை பதைத்து விடுகிறது. 

எதிர்பார்த்ததைப் போலவே அங்கே அவனது தோழி பலாத்காரத்துக்கு உள்ளாகி கடத்தப்பட்டிருப்பது தெரிய வருவதும் மயிரிழையில் அவனும் பிடிபடாமல் தப்புவதும் திக் திக் நிமிடங்கள். 

ஒரு கட்டத்தில் அவன் அங்கிருந்து தப்பித்து ஓடினாலும் துரத்தி வருபவரிடம் பிடிபட்டு விடக்கூடாது என்று ஆரியை விட நாம்தான் அதிகமாக கவலைப் படுகிறோம். அந்தத் துரத்திலின் முடிவில் அவன் அகப்பட்டுக் கொள்ள இதுவரை கிடைக்காத அளவில் கொடூர தண்டனை அடைந்து இருண்ட அறைக்குள் அவன் பூட்டப்படுவது நம் இதயத்தை நின்று போகச் செய்யும் வேதனை. 

மொழி தெரியாத இடத்தில் வாய் பேச முடியாத அந்த சிறுவன் ஆரி லோபஸின் அற்புதமான நடிப்பில் ஆஸ்கர் தரம். மரண அடியை வாங்கும் போது கூட அதையெல்லாம் தன் கனவுக்காக பொறுத்துக் கொண்டிருந்த விட்டு, இறுதியில் எதிர்த்து நின்று நிற்கும் போது மலைப்பை ஏற்படுத்தி விடுகிறான்.

தான் காப்பாற்றப்பட்டு விட்டோம் என்று நம்பும்போது மட்டுமே அவனிடமிருந்து கண்ணீர் பெருக்கெடுக்கிறது. Awesome Ari..!

அப்படி ஒரு அற்புத நடிப்பை வாங்கிய இயக்குனருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். 

பல இடங்களில் நம் இந்தியப் படங்களை நினைவூட்டும் படியே காட்சி அமைப்புகள் வந்து போகின்றன. 

அந்த இடத்தின் ஒளி அமைப்பே பயங்கரத்தைச் சொல்ல ஒளிப்பதிவாளருக்குப் பாராட்டுகள். அதேபோல் அதன் உணர்வுகளை சொல்லும் இசையமைப்பாளரும் இணையாக பாராட்டுக்குரியவர். 

இப்படி ஒரு படத்தை எடுத்து அமெரிக்காவின் இன்னொரு முகத்தை வெளியுலருக்கு சொல்ல வேண்டும் என்று நினைத்த தயாரிப்பாளர் ரூபஸ் பார்க்கரின் துணிச்சலும், நல்லெண்ணமும் தொழத் தக்கவை.

படத்தில் நடித்த ஹரி லோபசே படம் முடிந்ததும் திரையில் தோன்றி “இந்த படம் இனிதாக முடிந்தது. ஆனால் இதேபோன்று மாட்டிக் கொண்டிருக்கும் கடத்தப்பட்ட சிறுவர் சிறுமியரின் வாழ்க்கை எல்லாம் இப்படி இனிய முடிவுடன் இருப்பதில்லை..!” என்ற உண்மையை கூறும் போது நமக்கு கண் கலங்குகிறது. 

அத்துடன் அமெரிக்காவில் அதிபராக பதவி ஏற்கும் ஒவ்வொரு தலைவருமே இதுபோன்ற குழந்தைக் கடத்தலை முடிவுக்கு கொண்டு வருவோம் என்று சொல்லித்தான் ஆட்சி அமைக்கிறார்கள் என்ற கசப்பான உண்மையையும் சொல்லி முடிகிறது படம். 

இத்தனை வலி தாங்கிய அந்தச் சிறுவனின் பாத்திரப் பெயர் ‘ ஜீசஸ் ‘ என்பது.

சிட்டி ஆப் ட்ரீம்ஸ் – ஓ… ஜீசஸ்..!

– வேணுஜி