September 20, 2026
  • September 20, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • புதன்கிழமை கோட்டை நோக்கி பேரணி – விஷால் அறிவிப்பு
March 31, 2018

புதன்கிழமை கோட்டை நோக்கி பேரணி – விஷால் அறிவிப்பு

By 0 1413 Views

தமிழ்த்திரைப்படத் துறை வேலைநிறுத்தம் தொடர்வது தொடர்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று (31-03-2018) நடைபெற்றது. இதில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், பெப்சி கூட்டமைப்புக்களின் தலைவர் ஆர்.கே.செல்வமணி , நடிகர் சங்கப் பொருளாளர் கார்த்தி, தயாரிப்பாளர் சங்க கெளரவ செயலாளர் 5ஸ்டார் கதிரேசன் , பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு , ஒளிப்பதிவாளர் சங்கத் தலைவர் பி.சி.ஸ்ரீ ராம் , இயக்குநர் சங்கத் தலைவர் விக்ரமன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பேசினர்.

அவர்கள் பேசியதிலிருந்து…

தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் –

“தியேட்டருக்கு பொதுமக்கள் வந்து படம் பார்க்கும் போது எந்த வித பாரமும் இல்லாமல் படம் பார்க்க வேண்டும். விவசாயிகளும், தயாரிப்பாளர்களும் ஒன்று என்ற நிலையில்தான் இப்போது இருக்கிறோம். தமிழகத்தில் உள்ள அனைத்து திரை அரங்கிலும் கம்யூட்டர் டிக்கெட் வழங்க வலியுறுத்தி உள்ளோம்.

தமிழக அரசு தலையிட்டு… முதல்வர், செய்தித்துறை அமைச்சர் தலையிட்டு பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். எங்களது கோரிக்கைகளை அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் ஒரு மனுவாகக் கொடுக்க உள்ளோம். இதற்காக அடுத்த வாரம் புதன் கிழமை பேரணியாக சென்று மனு கொடுக்க இருக்கிறோம்..!”

பெப்சி தலைவர் ஆர்,கே.செல்வமணி –

திரை அரங்குகளில் கம்ப்யூட்டர் டிக்கெட்களைக் கட்டாயம் வழங்க வேண்டும். குறைந்த அளவில் படம் பார்க்க வரும் மக்களிடம் அதிக அளவில் பணம் வாங்குவதால்தான் படம் பார்க்க திரை அரங்குகளுக்கு மக்கள் வருவதில்லை. அரசு இதை ஒரு வாரியமாக ஒழுங்கு செய்தால் மட்டுமே பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும்.

எனவே, வரும் புதன் கிழமை அனைவரும் பேரணியாகச் சென்று முதலவர் மற்றும் அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் மனு கொடுக்க உள்ளோம்..!”