April 25, 2024
  • April 25, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • சிகை படமும் என்னைப் பற்றி நிறைய பேச வைக்கும் – பரியேறும் பெருமாள் கதிர்
September 30, 2018

சிகை படமும் என்னைப் பற்றி நிறைய பேச வைக்கும் – பரியேறும் பெருமாள் கதிர்

By 0 1347 Views

திரையிட்ட இடங்களிலெல்லாம் பரியேறும் பெருமாள்’ வெற்றிக்குதிரையில் ஏறி பவனி வந்து கொண்டிருக்கிறது. படத்தின் நாயகன் கதிர் மீது ‘மதயானைக் கூட்டம்’, ‘கிருமி’, ‘விக்ரம் வேதா’ படங்களுக்குப் பின் நம்பிக்கையும் கூடியிருக்கிறது.

படம் பற்றிப் பேசினார் கதிர்.

“பரியேறும் பெருமாள்’ என்னைத் தேடி வந்த வாய்ப்பல்ல. நானாக தேடிப்போய் வாங்கிய வாய்ப்பு. நண்பர் ஒருவர் மூலமாக இயக்குனர் மாரி செல்வத்திடம் இப்படி ஒரு கதை இருக்கிறது என கேள்விப்பட்டதும் மறுநாளே அவரை தேடிப்போய் நின்றேன்.. அவருக்கும் நான் சரியாக இருப்பேன் என பட்டது.

திருநெல்வேலியில் 47 நாட்கள் கொளுத்தும் வெயிலில் படப்பிடிப்பு நடந்தது. அந்த சமயத்தில் தான் ஒரு கி.மீ தூரத்திற்கும் அதிகமாக ஓடுவது குதிப்பது, கீழே விழுவது ஆகிய காட்சிகளை படமாக்குவோம். மாலையில் கூட ஓய்வெடுக்க நேரம் இருக்காது. மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பி நடந்து வருவோம் இல்லையா அந்த நடைதான் எனக்கு ஒய்வு நேரம்.

இதுவாவது பரவாயில்லை.. மொட்டை வெயிலில் பொட்டல்வெளியில் நடக்கும் ஷூட்டிங்கில் கொஞ்சம் ஓய்வெடுக்க வேண்டும் என்றாலும் மரத்தை தேடி போகவேண்டும். அதற்கும் ஒரு மைல் நடக்கவேண்டும்.. அப்படி நடந்து களைப்படைவதற்கு பதிலாக ‘வெயிலே நல்லது’ என உட்கார்ந்து விடுவேன்..

என்னுடன் நடித்த நாய் கருப்பி, வேட்டை நாய் ரகம்.. பார்க்க பயங்கரமாக இருந்தாலும் பாசம் காட்டுவதிலும் அசர வைத்துவிடும். ஆரம்ப நாட்களில் வேட்டைக்குத்தான் போகிறோம் என நினைத்துக்கொண்டு எங்களுடன் துள்ளிகுதித்து ஓடியது. அப்புறம் நான்கு நாட்களில், அதற்கே ஷூட்டிங் எடுக்கிறார்கள் என தெரிந்து, ‘ஆக்ஷன்’, ‘கட்’டிற்கு ஏற்ற மாதிரி நடிக்கப் பழகி விட்டது.

நாய்க்கு இணையாக வேகமாக ஓடி ஓடி கடைசி ஒருவாரம் எனது முட்டிக்கு கட்டுப்போட்டுக்கொண்டால்தான், நடக்கவே முடிந்தது.

கதாநாயகன் எந்த மனநிலையில் இருக்கிறான் என்பதை உணர்ச்சிகரமாக வெளிப்படுத்தவேண்டிய ஒரு காட்சி. அதற்காக இரண்டுபக்கமும் பரபரப்பாக வாகனங்கள் சென்றுகொண்டிருக்கும், சென்டர் மீடியன் இல்லாத திருநெல்வேலி ஹைவே ரோட்டில், திடீரென நடுவில் உட்கார்ந்துவிடுவது போல ஒரு காட்சியை படமாக்கினார்கள்.

எந்தவித திட்டமிடலும் இல்லாமல் திடீரென எடுக்கப்பட காட்சி அது. ஏதோ ஒரு வாகனம் எதிர்பாராமல் ஓவர்டேக் பண்ணுவதற்காக சற்றே ஏறி வந்திருந்தாலும் என் கதை முடிந்திருக்கும்.. எப்படி அந்த காட்சியில் நடித்து முடித்தேன் என்பதே தெரியவில்லை. ஆனால் அன்று இரவு முழுதும் என்னால் தூங்கவே முடியவில்லை. இனி அப்படி ஒரு காட்சியில் நடிக்கவே மாட்டேன்.

என்னதான் நன்றாக நடித்திருந்தாலும் சினிமா பின்னணி இல்லாமல் வரும் என்னைப்போன்ற ஆட்களுக்கு எங்களையும் படத்தையும் மக்களிடம் உரியவகையில் கொண்டு சேர்த்து மேலே வருவது கஷ்டமான ஒன்று.

அடுத்து  வெளியாக இருக்கும் ‘சிகை’ படத்தில் கூட வித்தியாசமான கதைக்களமும் கேரக்டரும் தான். அதில் நான் நடித்துள்ள இருவித கெட்டப்புகளில் முக்கியமான கெட்டப் ஒன்று மட்டும் நாற்பது நிமிடம் இடம்பெறும்.. அது படத்தைப்பற்றி, என்னைப்பற்றி நிறையநாள் பேசவைக்கும். அது தவிர குமரன் என்பவர் டைரக்ஷனில் ஒரு படம் நடித்து வருகிறேன்.

வழக்கமான ஃபார்முலாவில் கடகடவென நடித்துவிட்டுப்போக எண்ணமில்லை. பத்துப்படம் நடித்தாலும். ஆனால் ஏதோ ஒருவிதத்துல புதிதாக பண்ண வேண்டும். அந்தப்படம் வெளியான பின்னால் ரசிகர்களை கொஞ்ச நாளாவது படத்தை பற்றி விவாதம் பண்ண வைக்க வேண்டும்..!”