ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லராக உருவாகியுள்ள இந்தப் படத்தில் ஒரு தாயையும், அவளது இரட்டைச் சகோதரிகளான மகள்களையும் மையமாகக் கொண்டு, உளவியல் சிக்கல்களை குடும்ப பின்னணியுடன் இணைத்து சுவாரஸ்யமாக சொல்ல முயற்சித்துள்ளார் இயக்குனர் ஜெகதீஷ் தம்பையா.எஸ்.
ஒரு கார் விபத்தில் தந்தை இறந்து போக, அவரது மகள்களான இரட்டைச் சகோதரிகளின் வாழ்க்கை தலைகீழாக மாறுகிறது.
அவர்களின் தாயின் முகமும் சிதைந்து அது சம்பந்தமான அறுவை சிகிச்சை நிலையில் ஏற்படும் மர்மங்களும், இறந்துவிட்டதாக நம்பப்படும் சகோதரியின் இருப்பை மற்றொரு சகோதரி தொடர்ந்து உணர்வதும் அதன் முடிவு என்ன என்பதுமாக கதை நகர்கிறது.
முதல் பாதியில் மெதுவாக நகரும் திரைக்கதை, இரண்டாம் பாதியில் விறுவிறுப்பாக மாறிவிடுகிறது.
அதிலும் கிளைமாக்ஸில் வரும் திருப்பம் பார்வையாளர்களை மேலும் ஆச்சரியப்படுத்துகிறது.
இரட்டைச் சகோதரிகளின் தாயாக நடித்திருக்கும் அபிநயா தனது கதாபாத்திரத்தில் இயல்பான மற்றும் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
தன்னையே தன் குஞ்சுகளுக்கு உணவாக்கும் சிலந்தியின் கதையை சொல்லும் தாய்ப்பாசம் சிலிர்க்க வைப்பதுடன் அபிநயாவின் நடிப்பு நேர்த்தியான படமாக உணர வைக்கிறது.