July 17, 2026
  • July 17, 2026
Breaking News
March 3, 2026

யார்ரா அந்த பையன் நான்தான் அந்த பையன் திரைப்பட விமர்சனம்

By 0 424 Views

கதை நாயகனாக நடித்து அதற்கான படக் கதையை எழுதி, இயக்கி அதைத் தானே தயாரிப்பதற்கு எவ்வளவு ‘தில்’ வேண்டும்..?

அந்த ‘தில்’ தான் இந்த படத்தில் இத்தனை பொறுப்புகளையும் ஏற்க வைத்திருக்கிறது பால்ராஜ்-க்கு.

அது மட்டுமா? அத்துடன் பாடல்களை எழுதி அவற்றைப் பாடவும் செய்திருக்கிறார். 

அவர் சொல்ல வரும் கதை இதுதான்.

ஆறு குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும் என்கிற உயர்ந்த (!) லட்சியம் கொண்ட கார் மெக்கானிக் பால்ராஜ், மனைவி காயத்ரி மற்றும் குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார். 

தன் லட்சியத்துக்காக மீதி ஐந்து குழந்தைகளைப் பெற்றெடுக்க அவர் முயற்சி செய்யும்போதெல்லாம் காயத்ரி அதற்கு முட்டுக்கட்டை போட தாபத்தில் திரிந்து கொண்டிருக்கிறார். 

இன்னொரு பக்கம் குடிகாரனை திருமணம் செய்து கொண்ட சுவேதா ஸ்ரீ, கணவனை நெருங்கவே முடியாமல் அவரும் தாபத்தில் வாழ்கிறார். 

ஒரு கட்டத்தில் இருவரும் சந்திக்கும் பொழுது ஒரு நேசம் உருவாகிறது. அதை தவறாக புரிந்து கொண்ட காயத்ரி கணவனை விட்டுப் பிரிகிறார். 

அந்தக் கவலையில் இருக்கும் பால்ராஜ்க்கு சுவேதா ஸ்ரீ ஆறுதல் கொடுக்க, அந்த ஆறுதல் படுக்கை வரையில் கொண்டு போகிறது. 

இந்த பொல்லாத உறவு எதுவரை அவர்களைக் கொண்டு போகிறது என்பதுதான் மீதிக் கதை.

நடிப்புக்கு என்று பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை பால்ராஜ். இன்னும் கேட்டால் ஒப்பனை கூட இட்டுக் கொள்ளவில்லை. தனக்கு பிடித்த சுவேதாஸ்ரீ தனக்குக் கிடைத்ததும் சிகை அலங்காரத்தை மட்டும் கொஞ்சம் மாற்றிக் கொண்டிருக்கிறார். 

இயக்குனர் என்று இன்னொருவர் இருந்திருந்தால் நிச்சயம் இந்தக் குறைகளை மாற்றி அவரை ஒரு நியாயமான ஹீரோவாகக் காட்டி இருப்பார்.

கணவனை கோபித்துக் கொள்வதைத் தவிர காயத்ரி ரேமாவுக்கு பெரிதாக எந்த வேலையும் இல்லை. அவர் கணவனை நெருங்கவே விடாமல் இருப்பதற்கு எந்த விதமான காரணமும் இல்லை.

அதே போல் திருமணமான சுவேதா ஸ்ரீ கணவனைத் திருத்துவதற்கு எந்த முயற்சிகளும் எடுக்காமல் அவரை நெருங்க விடாமல் இருப்பதற்கும் எந்த விதமான காரணமும் இல்லை இல்லை.

இதற்கெல்லாம் இருக்கும் ஒரே காரணம் பால்ராஜும், சுவேதாஸ்ரீயும் படுக்கையில் ஒன்றிணைய வேண்டும் என்பதுதான். 

ஏதோ ஓரிடத்தில் கதை முடிய வேண்டும் என்பதற்காக சப் இன்ஸ்பெக்டர் ரவி மரியா வில்லன் ஆகிறார்.

படத்தில் எதிர்பாராமல் ரசிக்க வைக்கும் ஒரு வசனமும் அவர் பேசுவதுதான்.

சுவேதா ஸ்ரீயை பலாத்காரம் செய்ய முயலும் ரவிமரியாவிடம், “எதுக்கு நீ அவளை அடைய ஆசைப்படறே..?” என்று பால்ராஜ் கேட்க, பதிலுக்கு அவர், “நீ அடைஞ்சிட்டே… தத்துவம் பேசறே… நான் இன்னும் அடையலை… அதுக்குதான் அடைய ஆசைப்பட்றேன்..!” என்று பதில் சொல்லும் போது தியேட்டர் கலகலப்பாகிறது.

ஒளிப்பதிவாளர் உதயனும் இசையமைப்பாளர் விஜய் பிரபுவும் தங்களால் முடிந்த பங்காற்றி இருக்கிறார்கள்.

சினிமாவில் இத்தளை கிராஃப்ட்டுகள் இருப்பது அதில் சிறந்தவர்கள் எல்லாம் ஒன்றிணைந்து ஒரு நல்ல படைப்பைத் தர வேண்டும் என்பதற்காகதான். 

அவை எல்லாவற்றையும் ஒருவரே ஏற்பதிலும் தவறில்லை. ஆனால் அதற்குரிய ஆர்வம் திறமையுடன் பயிற்சியும் இருந்தாக வேண்டும்.

அந்த வகையில் போதிய பயிற்சி இல்லாமல் தைரியத்தை மட்டுமே மூலதனமாகக் கொண்டு இந்த முயற்சியில் இறங்கி இருக்கிறார் பால்ராஜ். 

அந்த பயிற்சிகளுடன் அடுத்த படத்துக்கு அவர் களம் இறங்கினால் யார்ரா இந்த பையன் என்று கேட்கும் அளவிற்கு வளரலாம்..!

அவரது தைரியத்துக்கு வாழ்த்துகள்..!