April 20, 2024
  • April 20, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • மக்கள் நல இயக்கம் அரசியலுக்காக அல்ல – கொடியை அறிமுகம் செய்து பேசிய விஷால்
August 29, 2018

மக்கள் நல இயக்கம் அரசியலுக்காக அல்ல – கொடியை அறிமுகம் செய்து பேசிய விஷால்

By 0 959 Views

விஷால் நடித்த ‘இரும்புத்திரை’ படத்தின் நூறாவது நாளான இன்று தன்னுடைய பிறந்தநாளையும் ரசிகர்களுடன் கொண்டாடி அவர்களின் முன்னிலையில் தன்னுடைய ரசிகர் நற்பணி இயக்கத்தை மக்கள் நல இயக்கமாக மாற்றினார். அத்துடன் மக்கள் நல இயக்கத்துக்கான கொடியையும் அறிமுகம் செய்து உரையாற்றினார் விஷால். அதிலிருந்து…

“உங்களில் ஒருவனான நான் இன்று உங்களால் மேடை ஏறி பேசுகிறேன். இது என்னுடைய வெற்றி அல்ல – உங்களுடைய வெற்றி. நடிகனாக நன்றாக சம்பாதித்து நாமும்,நம் குடும்பமும் நன்றாக இருந்தால் போதும் என்று நினைத்துவிட்டுப் போய்விடலாம். வீட்டுக்குள் போய்விட்டு மீண்டும் வீதிக்கு வர வேண்டும். அப்படி வரும் போது வீதியில் நடக்கும் சில விஷயங்களைப் பார்த்து சும்மா இருக்க முடியாது. அப்படி இருந்தால் அது பிணத்துக்கு சமம்.

ஏழை பெண்ணோ, ஆணோ, கல்வி உதவி கேட்கும் குழந்தையோ அவர்களுக்கு உதவும் போது தெரியாதவர்கள் வாழ்வை மாற்ற உதவியுள்ளோம் என்ற சந்தோசம் வருகிறது. இந்த சமூகசேவை பின்னாளில் அரசியலுக்கு வருவதற்காக பொய்யாக பூசிக்கொள்ளும் சாயம் என்று கூறுகிறார்கள். அப்படி பொய்யாக இருந்தால் உங்களுக்குத் தெரிந்துவிடும்.இது நிஜ வாழ்க்கை. இதில் சாயம் பூச வேண்டிய அவசியம் இல்லை.

நாட்டுக்கு நல்லது செய்ய இத்தனை கட்சிகள் உள்ளன. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கொள்கைகள் இருக்கலாம் ஆனால் மக்கள் பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டும். அதைத் தீர்த்து வைக்கும் பிரதிநிதியே அரசியல்வாதி. அரசியல்வாதி என்பது அரசு வழக்கறிஞர், அரசு ஆசிரியர் போன்று மக்களால் மக்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான்.

ஆனால் நம் பார்வையில் அரசியல்வாதி என்றால் பணம் சம்பாதிக்கும் பதவியாக சினிமாவிலும், நிஜத்திலும் நாம் நினைக்கிறோம். அதையெல்லாம் தாண்டி பத்து வருடங்களுக்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்டது என் ரசிகர் மன்றம். என் ரசிகர்களிடம் நான் கூறுவது என் படம் வரும் போதெல்லாம் வெளியில் தெரிவதைவிட பிறருக்கு பிறச்சனை ஏற்படும் போது அவர்களுக்கு உதவுங்கள். அது தொடர்பாக என்னிடம் கொண்டு வாருங்கள் அப்போது தான் படம் வருவதை விட ரொம்ப சந்தோசப் படுவேன் என்பதைத்தான்.

வெள்ளம் வரும் போது யாருமே செல்லாத பகுதிக்கு என்னுடன் படகில் வந்து எதையும் பொருட்படுத்தாமல் உதவிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. நீங்கள் ஒரு நல்லது செய்தால் அதைப் பார்த்து பக்கத்தில் இருப்பவர்கள் நல்லது செய்வார்கள். இந்த மக்கள் நல இயக்கம் அரசியலை நோக்கி செல்லும் இயக்கம் அல்ல. நான் வணங்கும் இரண்டு கடவுள் அன்னை தெரசாவும், அப்துல் கலாம் ஐயாவும்.

அவர்களின் கனவு இளைய தலைமுறையிரால் மட்டுமே நாட்டை முன்னேற்றமடைய செய்ய முடியும் என்பதுதான். அவர்களின் கனவு கண்டிப்பாக நிறைவேறும். அப்துல் கலாம் ஐயா அவர்களைப் பார்த்தால் அறிவும்,அன்னை திரேசாவை பார்த்தால் அன்பும் நினைவுக்கு வரும்.

என்னை நான் கண்ணாடியில் பார்க்கும் போது துணிவுதான் நினைவில் வரும்.என் சொத்து ஒன்று நீங்கள். இன்னொன்று உள்ளிருக்கும் தன்னம்பிக்கை.

“ஆர்.கே நகரில் விஷால் ஏன் நிற்கிறார்..?” என்று கேட்டார்கள். “ஏன் நிற்க கூடாது..?” என்று திருப்பிக் கேட்டேன். அவர்களிடம் பதில் இல்லை.நல்லது செய்ய வேண்டும் என்று யார் நினைத்தாலும் போட்டியிடலாம் அதற்கு பெயர் எம்.எல்.ஏ என்றாலோ அமைச்சர் என்றாலோ கட்சி என்றாலோ தப்பே இல்லை.கட்சி தொடங்குவதும் தப்பில்லை

நான் உங்களை அழைத்தது நான் உங்களுக்காக இருக்கிறேன், உங்களுக்குப் பின்னால் இருக்கிறேன் என்பதைக் கூறவே அழைத்தேன். உங்களில் ஒருத்தனான நான் போகும் பாதை நீங்கள் எல்லாரும் பார்க்கும் பாதைதான். அந்தப் பாதையை சுத்தம் செய்வதுதான் என் நோக்கம்.

இரண்டு வாரத்திற்கு முன் ஒரு பாக்கியம் கிடைத்தது சன் டி.வி யில் ‘நாம் ஒருவர்’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வாய்ப்பு கிடைத்தது. ஏழு வருடத்திற்கு முன் வெறும் பதினைந்தாயிரம் கடனுக்காக முதலாளியிடம் உழைத்து, உழைத்து மாதம் வெறும் 750 ரூபாய் மட்டுமே அந்தக் குடும்பத்திற்கு கிடைக்கிறது. அவர்களை மீட்டு அவர்களின் வாழ்க்கையை மாற்றினோம். அவர்களின் கண்ணீரைத் துடைத்து கொத்தடிமை என்ற முறையை மாற்றி அவர்கள் முகத்தில் சந்தோசத்தை பார்க்கும் போது நான் தெரியவில்லை. நீங்கள் தான் தெரிகிறீர்கள்.

நீங்களும் என்னுடன் கை கோர்த்து நல்லது செய்யும் போது எந்தக் கேள்வியும் வராது. அப்படி செய்யும் போது உங்களைப் பாராட்டுவார்களோ இல்லையோ ஆனால் கண்டிப்பாக வாழ்த்துவார்கள். சோதனை இல்லாமல் சாதனை வராது.

நான் மூன்றரை வருடத்திற்கு முன் கூறினேன், ‘நடிகர் சங்கக் கட்டிடம் கட்டிய பின்புதான் திருமணம்’ என்று. அதை அவசரத்தில் கூறவில்லை. என் கனவும் அதுதான். ஒவ்வொரு நாளும் நான் தூங்கி எழுந்திருக்கும்போது கட்டிடத்தால்தான் 3500 குடும்பம் சந்தோசப்படும் என எனக்குள் உருத்திக்கொண்டே இருக்கும்.3500 குடும்பங்களின் நிலையை மாற்றுவதே என் குறிக்கோள். அதற்காக எத்தனை தடைகள் வந்தாலும் அதை சந்திப்பேன்..!”