September 14, 2026
  • September 14, 2026
Breaking News
May 2, 2021

கலைஞர் நினைவிடத்தில் வெற்றியை சமர்ப்பித்த உதயநிதி ஸ்டாலின்

By 0 611 Views

நடந்து முடிந்த தேர்தலில் ஆளுங்கட்சியாக உருவெடுத்துள்ள தி.மு.க., வரலாற்றில், இளைஞரணி தலைவராக பணியாற்றிய ஸ்டாலின், 1984ல் முதன் முறையாக சட்டசபை தேர்தலில், சென்னை ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிட்டார்.

ஆனால், எதிர்த்து போட்டியிட்ட, அ.தி.மு.க., வேட்பாளர் கே.ஏ.கிருஷ்ணசாமி வெற்றி பெற்றார். ஆனால், இப்போது தி.மு.க. இளைஞரணி தலைவராக இருக்கும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின், தன், 43வது வயதில் முதன்முதலாக சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு, முதல் தேர்தலிலே வெற்றியை பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்தில் வெற்றி சான்றிதழை சமர்ப்பித்து மரியாதை செலுத்தினார் உதயநிதி ஸ்டாலின்்.

பின்னர் தன் டிவிட்டரில்,

“வங்கக் கடலோரம் தன் அண்ணனுக்கு பக்கத்தில் துயில் கொள்ளும் முத்தமிழறிஞருக்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறேன்.

முதல்முறையாக தேர்தலில் போட்டியிட்ட என் மீது நம்பிக்கை வைத்து, 69,355 வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியைத் தேடித்தந்த உங்களுக்காக உங்கள் வீட்டுப்பிள்ளையாக இருந்து கடமையாற்றுவேன் என என் தொகுதி மக்களுக்கு உறுதியளிக்கிறேன். இணைந்து பயணிப்போம்; முன்மாதிரி தொகுதியாக்குவோம்.

சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், தலைமைக்கழக நிர்வாகிகளுக்கும், எனக்காக தேர்தல் பணிகளை மேற்கொண்ட அண்ணன் தயாநிதி மாறன் எம்.பி., மா. பொறுப்பாளர் ப. செயலாளர்கள் உள்ளிட்ட கழகத்தினருக்கும் நன்றி..!” என பதிவிட்டுள்ளார்.