April 26, 2024
  • April 26, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • அக்னிச்சிறகுகள் படத்துக்கு துரோகம் செய்த ஷாலினி பாண்டே
December 23, 2019

அக்னிச்சிறகுகள் படத்துக்கு துரோகம் செய்த ஷாலினி பாண்டே

By 0 900 Views

‘அம்மா கிரியேஷன்ஸ்’ டி.சிவா தயாரிப்பில் மூடர்கூடம் நவீன் இயக்க விஜய் ஆண்டனி, அருண் விஜய், ஷாலினி பாண்டே நடித்திருக்கும் படம் ‘அக்னி சிறகுகள்’.

பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் ஷாலினி பாண்டே இதில் நடித்துள்ள வேடத்தில் இப்போது நடித்து வருபவர் அக்ஷரா ஹாசன். ஏன் இந்த நாயகி மாற்றம்..? இதற்கு தயாரிப்பாளர் டி. சிவா பதில் சொல்கிறார்…

“விஜய் ஆண்டனி, அருண் விஜய், ஷாலினி பாண்டே மூவருக்குமே இதில் முக்கியமான கதாபாத்திரங்கள். மூவருமே கிட்டத்தட்ட ஹீரோ போலதான். இதைச் சொல்லித்தான் ஷாலினி பாண்டே விடம் 100 நாட்கள் கால்ஷீட் வாங்கியிருந்தேன். அதனாலேயே அவர் கேட்ட 35 லட்சம் சம்பளத்தையும் பேசி முடித்து அதில் 15 லட்சம் அட்வான்ஸ் கொடுத்து இருந்தோம்.

27 நாட்கள் படப்பிடிப்பு முடிந்த நிலையில் ஷாலினி பாண்டேவுக்கு ஒரு இந்திப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. ரன்பீர் கபூருடன் நடிக்கக்கூடிய வாய்ப்பு என்பதால் உடனடியாக அதில் நடிக்க ஒத்துக் கொண்டார் ஷாலினி.

அதனால் எங்கள் படத்துக்கு ஆறு மாதம் கழித்து தான் கால்ஷீட் தர முடியும் என்று திடீரென்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். ஆனால் அவருக்காக காத்திருந்தால் விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய்யின் தேதிகளை வீணாக்கி விடும் அபாயம் எங்களுக்கு இருந்தது. எனவே அவரிடம் எப்படியும் மன்றாடி நடிக்க கேட்டோம்.

ஆனால் அவரோ எனக்கு இந்தி படத்தில் நடிப்பதே லட்சியம். எனவே இந்த வாய்ப்பை என்னால் மறுக்க முடியாது. உங்களால் எப்படி முடியுமோ அப்படி பார்த்துக் கொள்ளுங்கள்… என்று சொல்லிவிட்டார் அதன்பிறகு அவரிடம் பேச முடியவில்லை. அவருடைய வக்கீல் தான் பேசிக் கொண்டிருக்கிறார்.

எனவே இனி காத்திருந்து பலனில்லை என்று ஷாலினி நடித்த காட்சிகளை எல்லாம் மீண்டும் அக்ஷரா ஹாசனை ஒப்பந்தம் செய்து நடிக்க வைத்து எடுத்தோம்.

இதில் வியக்கத்தக்க விஷயம் என்னவென்றால் இந்த கதாபாத்திரத்திற்கு நவீன் முதலில் எழுதியிருந்த நடிகை அக்ஷரா ஹாசன் தான். ஆனால் அப்போது அவரால் நடிக்க முடியாமல் இருந்தது. மீண்டும் அவரே இந்த படத்தில் நடிக்க வந்தது எங்களுக்கு முழுமையாக இருந்தது.

ஆனால் ஷாலினி பாண்டேவால் எங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்துக்கு நாங்கள் தமிழ் மற்றும் இந்தி தயாரிப்பாளர்களிடம் புகார் தெரிவித்து இருக்கிறோம். எங்களை பொறுத்தவரை ஷாலினி நடித்த வரை எங்களுக்கு எந்த தொல்லையும் இல்லை. ஆனால் அவரால் எங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட நாங்கள் இப்படி புகார் செய்து இருக்கிறோம்..!”

டி.சிவாவின்  பெருந்தன்மை வியக்கத்தான் வைக்கிறது.

ஒருவேளை ரன்பீர் கபூருடன் நடித்துவரும் ஷாலினி பாண்டே வுக்கு அடுத்து ஹாலிவுட்டிலிருந்து நடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தால் அவரையும் அப்படித்தான் அம்போவென்று விட்டு விட்டு ஓடி விடுவார் போலிருக்கிறது.

உஷார்… கபூர் உஷார்..!