June 15, 2025
  • June 15, 2025
Breaking News
June 14, 2025

படை தலைவன் திரைப்பட விமர்சனம்

By 0 12 Views

ஒடிசா பகுதி காட்டுப்பகுதியில் பழங்குடியினர் வசிக்கிறார்கள். அந்த காட்டுப் பகுதியை வில்லன் கருடன் ராம் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, பழங்குடியின மக்களை அடிமை போல் சித்திரவதை செய்து வருகிறார்.

இன்னொரு பக்கம் பொள்ளாச்சி சேத்துமடை பகுதியில் சேத்தை குழைத்து பானை செய்து வரும் வியாபாரியான கஸ்தூரி ராஜா, தன் மகன் மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். கஸ்தூரி ரஜாவுக்கு இவர்கள் மட்டும்தான் குழந்தைகள் என்று நினைத்து விடாதீர்கள். இவர்களுடன் ஒரு யானையையும் அவர் வளர்த்து வருகிறார். 

கஸ்தூரி ராஜாவின் மகனான நாயகன் சண்முக பாண்டியன் அந்த யானையைத் தன் சகோதரன் போலவே நினைத்துப் பழகி வருகிறார். காரணம் காலம் சென்ற அவருடைய தாயார் ஆதரவில்லாத இந்த யானைக் குட்டியை எடுத்து சண்முக பாண்டியனுடனேயேயே வளர்த்ததால் இருவரும் இணைபிரியாமல் இருக்கிறார்கள். 

ஆனால் ஒரு கட்டத்தில் அந்த யானை தொலைந்து போக, அதை சண்முக பாண்டியன் தேடிக் கண்டுபிடித்தாரா என்பதுதான் கதை. 

“யானையை எப்படித் தொலைக்க முடியும்..?” என்றெல்லாம் அபத்தமாகக் கேட்காதீர்கள். பானையை செய்து விற்பதற்கே கடன் வாங்கி வட்டி கட்ட முடியாமல் தவிக்கும் கஸ்தூரிராஜா ஒரு யானையை வளர்க்க முடியும் போது அந்த யானை ஏன் தொலையக் கூடாது..?

தமிழில் யார் அதிக உயரமான ஹீரோ என்றால் நிச்சயமாக சண்முக பாண்டியன் தான் என்று சொல்ல முடியும். எந்தக் கூட்டத்தில் நின்றாலும் அவரைத் தனியாக அடையாளம் காண முடியும். அந்த உயரத்திற்கு ஏற்றவாறு உடற்கட்டையும் அற்புதமாக வடிவமைத்திருப்பவர், நடிக்கும்போது மட்டும் பொறுமையாக நடிக்கிறார். ஆனால் அடிக்கும்போது அப்பாவைப் போலவே அவ்வளவு ஆக்ரோஷம். 

இத்தனை புஜ பலம் உள்ள ஒரு ஹீரோவை வைத்துக்கொண்டு இன்னும் நல்ல கதையை ஏன் தேர்ந்தெடுத்திருக்கக் கூடாது என்பதுதான் நம் வருத்தமாக இருக்கிறது. 

அவரது அப்பாவாக நடித்திருக்கும் கஸ்தூரி ராஜா பாத்திரம் உணர்ந்து உருக்கமாக நடித்திருக்கிறார். 

பழங்குடியின பெண்ணாக நடித்திருக்கும் யாமினி சந்தரரை நாயகியாக சொல்ல முடியுமா என்று தெரியவில்லை ஏனென்றால் நாயகனுடன் எந்த தொடர்பும் இல்லாமல் வருகிறார் அவர்.

இவர்களுடன் ரிஷி, முனிஷ்காந்த், யோகி சேது, ஸ்ரீஜித் ரவி, அருள்தாஸ், என்.பி.கே.எஸ்.லோகு, ஏ.வெங்கடேஷ் ஆகியோர் பாத்திரங்களை ஏற்று இருக்கிறார்கள்.

இளையராஜா இசையாம். பொட்டு வைத்த தங்க குடம் பாடல் வரும் போது மட்டுமே அது நமக்குத் தெரிய வருகிறது. ஆனால் அந்தப் பாடலையும் இதற்கு முன்பே ரப்பர் பந்துவில் பயன்படுத்தி ஹிட்டாகி விட்டார்கள்.

எஸ்.ஆர்.சதிஷ் குமாரின் கேமராதான் இதனை ஒரு நேர்த்தியான படமாக காட்டி இருப்பதில் பெரும்பங்கு வகுத்திருக்கிறது.

ஒரு காட்சியில் தொழில்நுட்பம் மூலம் கேப்டனை மறு உருவாக்கம் செய்து கூட்டி வந்திருக்கிறார்கள். அதையாவது சிறப்பாக செய்திருந்தால் அவர் ரசிகர்கள் புல்லரித்துப் போய் இரப்பார்கள்.

யானைதான் படத்தின் முக்கிய பாத்திரம் எனும்போது அந்த யானைக்கும் எந்த வேலையும் கொடுக்காமல் யானையைத் தேடி வரும் நாயகனுக்கும் எந்த வேலையும் இல்லாமல் திரைக்கதை சப்பென்று இருக்கிறது. 

கடைசி கடைசியாக அந்தக் காட்டுக்குள் ஒரு யானைக் கூட்டமே திரண்டு வரும்போது வில்லன்கள் தெறித்து ஓடப் போகிறார்கள் என்று பார்த்தால் ஓடிவரும் யானைகள் ஒரு ஓரமாக நின்று விட, சண்முக பாண்டியன்தான் எல்லோரையும் புரட்டி எடுக்கிறார். 

எல்லோரையும் அவரே அடித்து விட முடியும் போது அதை ஏன் முதலிலேயே செய்திருக்கக் கூடாது என்று தெரியவில்லை.

அத்தோடு அந்த ஒடிசா காட்டுக்குள்ளேயே அத்தனை யானைகள் இருக்க அம்மனுக்கு பலி கொடுக்க தமிழ்நாட்டில் இருந்து ஏன் சண்முக பாண்டியன் யானையைக் கடத்தினார்கள் என்பதும் புரியவில்லை. 

‘”அம்மனுக்கு யானை பலியா..?” என்று நீங்கள் வாய் பிளப்பதும் புரிகிறது. எத்தனை நாளைக்கு தான் ஆடு மாடுகளையே அம்மன் பலி கேட்டுக் கொண்டிருப்பாள்? அதனால் கருடன் ராம் ஸ்பெஷலாக யானைகளை அம்மனுக்கு பலியிடுவதாக இருந்திருக்கலாம். 

கூடவே வளர்ந்த ஒரு காரணத்தைத் தவிர சண்முக பாண்டியனால் யானைக்கோ யானையால் சண்முக பாண்டியனுக்கோ எந்த விதமான உபகாரமும் இல்லை. 

கையில் ஒரு லட்ச ரூபாய் பெறுமானம் உள்ள இருசக்கர வாகனத்தை வைத்துக்கொண்டு வட்டி தொகையான 25 ஆயிரத்தை புரட்ட முடியாமல் சண்முக பாண்டியன் அல்லாடுகிறார்.

அதேபோல் கடனை வாங்க வந்தவன் அந்த வண்டியை ஓட்டிக்கொண்டு போகாமல் யானையை இழுத்துக் கொண்டு போக முயற்சிப்பதும் காமெடி இல்லாத குறையை நிவர்த்தி செய்கிறது.

இப்படியான லாஜிக் எல்லாம் கேட்காமல் படத்தைப் பார்க்கத் தெரிந்தவர்களுக்கு இந்தப் படம் பிடிக்கக் கூடும். 

எழுதி இயக்கியிருக்கும்  யு.அன்புவிடம் தலைப்புக்கும் படத்துக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வியை கேட்காமல் இருக்க முடியவில்லை. குறைந்தபட்சம் அடிமைப்பட்டு கிடக்கும் பழங்குடியின மக்களை ஒன்று திரட்டி அந்த அடிமை படையையாவது சண்முக பாண்டியனைத் தலைமை ஏற்க வைத்திருக்கலாம். 

படை தலைவன் – யானை வளர்த்த பானை வியாபாரி..!

– வேணுஜி