September 19, 2024
  • September 19, 2024
Breaking News
  • Home
  • Uncategorized
  • நந்தன் திரைப்பட விமர்சனம்

நந்தன் திரைப்பட விமர்சனம்

By on September 19, 2024 0 7 Views

“ஆள்வதற்கு மட்டுமல்ல வாழ்வதற்கே அதிகாரம் வேண்டும்…” என்ற நிலைப்பாட்டைக் கோட்பாடாக்கும், சமூக அடித்தட்டு  மக்களின் கதைதான் நந்தன். 

சமூக நீதிக்காக அரசு ஆயிரம் திட்டங்கள் வகுத்தாலும், அவற்றைக் கூட ஆதிக்க சாதியினர் எப்படி கூட்டிப் பெருக்கி, கழித்துத் தங்களுக்குச் சாதகமாகக் கணக்குப் போடுகிறார்கள் என்பதை இதுவரை சொல்லாத களம் மூலம் சொல்லி இருக்கிறார் இயக்குனர் இரா.சரவணன்.

“இப்படி எல்லாம் நடக்கிறதா என்று கேட்பவர்களைக் கைப்பிடித்து அங்கே அழைத்துச் செல்லத் தயாராக இருக்கிறேன்..!” என்று படத்தின் ஆரம்பத்தில் இயக்குனர் கட்டியம் கூறுவதே அவரது கெத்தைக் காண்பிக்கிறது. அதன் பிறகே வருகிறது அவரது வித்தை. 

வணங்காமுடி என்கிற கிராமத்தில் காலம் காலமாக வணங்காத முடிகளாக ஆட்சி செலுத்தும் ஆதிக்க சாதியினரின் கோவில் கூட்டத்தில் வெளியே அவர்கள் விட்டுச் சென்றிருக்கும் செருப்புகளை காட்டி ஆரம்பிக்கிறது படம். அந்த செருப்புகளின் மேல் அவர்கள் தங்கள் சிறப்புகளை பேசிக்கொள்வதாகக் குரல் விரியும் காட்சி சிறப்பு.

அங்கே வரவிருக்கும் நகராட்சி தேர்தலில் ஆண்டாண்டு காலம் தலைமை பதவியை அனுபவித்து வரும் தாங்களே இம்முறையும் அனுபவித்து விட வேண்டும் என்று வழக்கமான ஊராட்சி தலைவரைப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கும் கூட்டம் அது.

அப்படி அன்அப்போஸ்டாகத் தன்னைத் தேர்ந்தெடுக்க பாலாஜி சக்திவேலின் ஆதரவாளர்கள் கோர, அவருக்கு எதிராக கொடி பிடிக்கிறார் குட்டிப்புலி சரவணன். எனவே இருவரின் பெயரையும் சாமியின் முன்னால் போட்டு சாமி தரும் உத்தரவுக்கு கட்டுப்படுவதாக முடிவாகிறது. அப்படி சீட்டின் மூலம் பாலாஜி சக்தி வேலையே சாமியும் அடையாளம் காட்ட, அடுத்த காட்சியிலேயே நமக்குப் புரிய வைக்கப்படுகிறது அது சாமியின் வேலை அல்ல அந்த பலே ஆசாமி பாலாஜி சக்திவேலின் வேலை என்று.

அந்தக் கூட்டத்துக்கு எதிராக குரல் கொடுக்கும் தாழ்த்தப்பட்ட இளைஞன்தான் நந்தன். 

பாலாஜி சக்திவேலைக் கேள்வி கேட்ட நந்தன் அடுத்த காட்சியிலேயே விபத்தில் இறந்து போகிறார். 

சசிகுமார் ஹீரோவாகும் படத்தில் நாம் என்ன நினைக்கிறோம் – அவர்தான் நந்தனாக இருப்பார் என்று. ஆனால் சசிகுமாரோ ஆண்டான்களின் அடிமையாக பாலாஜி சக்திவேல் மீதான விசுவாசத்தில் நாயாக இருக்க, நந்தனோ இரண்டாவது காட்சியிலேயே இறக்க… அப்புறம் எப்படி தலைப்பு? – அதுதான் சிறப்பு..!  அதை கடைசியில் பார்க்கலாம். 

வேட்பமான தாக்கல் செய்யவிருக்கும் சூழலில் அதை ரிசல்ட் தொகுதியாக அறிவிக்கிறது அரசு. இது ஆதிக்க சாதியினருக்கு நெருக்கடியைத் தர, அதற்கான விசுவாசியைப் பிடித்து ஊராட்சித் தலைவராக்கி அதற்குப் பின்னால் தான் அதிகாரம் செலுத்தத் திட்டமிடுகிறார் பாலாஜி சக்திவேல். 

அப்படி ஏற்கனவே அவருக்கு அடிமையாக இருக்கும் விசுவாசி சசிகுமாரை ஊராட்சித் தலைவராக ஆக்குகிறார். அதன் விளைவு என்ன என்பதுதான் மீதிக் கதை.

இப்படி ஒரு வேடத்தில் இதற்கு முன் சசிகுமாரை நாம் பார்த்ததே இல்லை. இதுவரை நட்புக்கான பிராண்ட் அம்பாசிடராக இருந்தவர் இந்த படத்தின் மூலம் விசுவாசத்துக்கான தூதராகி இருக்கிறார். படத்தின் 99 விழுக்காடு காட்சிகளில் பரட்டைத் தலை, கருத்தமுகம், அழுக்கு உடையுடனே வரும் அவரை இழுத்துக் கொண்டு போய் குளிப்பாட்டி நல்ல உடை அணிவிக்க மாட்டோமா என்று நம் கை பரபரக்கிறது. 

அவருக்கு மனைவியாக வரும் பள்ளியில் படுக்கும் மகனும் கூட அப்படியே. மனைவிக்கு இருக்கும் புத்திசாலித்தனம் கூட சசிகுமாருக்கு இல்லை என்பதை ஒத்துக்கொண்டு நடித்திருப்பது சசிகுமாரின் பெருந்தன்மை.

வழக்கமாக படங்களில் நாயகன் வெளிச்சமாகவும் வில்லன் இருட்டாகவும் காண்பிக்கப்படுவார்கள். ஆனால் இந்த படத்தில் நாயகன் இருட்டாக இருக்க, வில்லன் பாலாஜி சக்திவேல் தான் பளிச்சென்று இருக்கிறார். 

“இந்தியாவுக்கு பிரசிடென்ட்டா எந்த சாதிக்காரர் வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனா இந்த ஊர் பிரசிடென்டா நாமதான் இருக்கணும்..!” இன்று முழங்குவதிலிருந்தே அவரை ‘இனம் ‘ கண்டுகொள்ள முடிகிறது.

காட்சிக்குக் காட்சி வரும் வசனங்கள் ஒவ்வொன்றும் காலக் கண்ணாடியாக கண் முன் நடப்பவற்றை பதிவு செய்து கொண்டே போகிறது. அந்தப் பதிவில் தூக்கலாக நிற்கும் பகடியே நம்மை அங்கங்கே கைதட்ட வைக்கிறது. 

சாவுக்கு வந்த தாழ்த்தப்பட்டவரின் வீட்டில், வந்திருப்பவர்களில் இருந்து ஊராட்சி தலைவருக்கான கொத்தடிமையை தேர்ந்தெடுக்கும் பாலாஜி சக்திவேல் கண்களில் ஒருவர் சிக்க, அவரைப் பற்றி விசாரிக்கும் போது குடித்து விட்டால் அவர் ஒரு புலியாகி விடுவார் என்கிறார்கள். அதற்கு பாலாஜி சக்திவேல் சொல்லும் பதில் “இந்த புலி, சிறுத்தை எல்லாம் நமக்கு வேண்டவே வேண்டாம்..!” என்பதுதான். இந்தப் பகடி இத்துடன் நிற்கவில்லை.

காவல் தெய்வத்தின் சிலையை காட்டி இது நமது முப்பாட்டன் என்று சசிகுமார் சொல்ல அவர் தோளில் தூக்கிச் செல்லும் மகன், “என்னப்பா நீ சீமான் மாதிரியே பேசுற..?”  என்பது திரை தாண்டிய பகடி.

இந்த ஏகடியங்களைத் தாண்டிய சோகத்தையும் தாங்கி நிற்கிறது இயக்குனர் சரவணனின் உரையாடல்.

தங்கள் இனத்தவரின் பிணத்தை எரிக்க சுடுகாடு இல்லாததை சொல்லும் சசிகுமார், “வாழறதுக்குதான் முடியலைன்னா சாகறதுக்குக் கூட எங்களுக்கு பயமா இருக்கு..!” என்பதில் சோகம் சுடுகிறது.