April 29, 2025
  • April 29, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • சசிகுமாரின் தலைப்பு மாறிய படம் ‘நான் மிருகமாய் மாற’ – நவம்பர் வெளியீடு
October 18, 2022

சசிகுமாரின் தலைப்பு மாறிய படம் ‘நான் மிருகமாய் மாற’ – நவம்பர் வெளியீடு

By 0 442 Views

TD ராஜாவின் ‘செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல்’ தயாரிக்கும் ‘நான் மிருகமாய் மாற’ திரைப்படம் வரும் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சத்திய சிவாவின் இயக்கத்தில், இயக்குனர் மற்றும் நடிகர் சசிகுமார் படத்தின் நாயகனாக நடித்துள்ளார்.

ஒரு சாதாரண மனிதன் சந்தர்ப்ப சூழ்நிலையால் எவ்வாறு மிருகமாக மாறுகிறான் என்பதே படத்தின் கதை.

மேலும் இந்தத் திரைப்படத்தில் சசிகுமார் ஒலி பொறியாளராக நடித்துள்ளார். ஒருவனின் வாழ்க்கையை எவ்வாறு ஒலி மாற்றுகிறது என்பதே படத்தின் திருப்புமுனையாக அமையும், என்று இயக்குனர் சத்ய சிவா தெரிவித்துள்ளார்.

முதலில் இந்தப் படத்துக்கு காமன் மேன் என்ற பெயர் வைக்கப் பட்டிருந்தது. அந்தத் தலைப்பு இன்னொரு தயாரிப்பாளரிடமும் இருந்ததால் இதன் தலைப்பை நான் மிருகமாய் மாற என்று மாற்றி இருக்கிறார்கள்.

படத்தின் வில்லனாக நடிகர் விக்ராந்த் நடித்துள்ளார்.

பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய சசிகுமார், “இப்படத்தின் தலைப்பு, திரைக்கதைக்கு பொருத்தமாக இருக்கும். ஒரு சாதாரண மனிதன் தன் வாழ்வில் நடக்கும் கசப்பான சம்பவங்களால் எவ்வாறு ஒரு மிருகமாக மாறுகிறான் என்பதே கதை”, என்று கூறினார்.

படத்தில் சண்டை காட்சிகள் அதிகமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

படத்தின் நாயகியான ஹரிப்ரியாவிற்கு ‘நான் மிருகமாய் மாற’ திரைப்படம், செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் உடன் இரண்டாவது, மற்றும் தமிழில் நான்காவது திரைப்படம் ஆகும். கர்நாடகத்தை சேர்ந்த இவர், இதற்கு முன்பாக ‘வல்லக்கோட்டை’, ‘முரண்’ மற்றும் ‘வாராயோ வெண்ணிலாவே’ போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

“எனது கன்னட திரைப்படமான ‘பெல் பாட்டம்’ கண்ட இயக்குனர், எனக்கு இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கான ஒரு வாய்ப்பு அளித்தார். படத்தின் கதை நன்றாக இருந்ததால் உடனடியாக ஒப்புக்கொண்டேன். தமிழிலிருந்து சிறிது காலம் ஒதுங்கி இருந்ததற்கு, கன்னடத்தில் நான் பரப்பரப்பாக இருந்ததே காரணம். தமிழில் கதைகள் கேட்டு வருகிறேன். நல்ல கதை இருந்தால் கண்டிப்பாக நடிப்பேன்”, என்று அவர் கூறினார்.

சசிகுமார் பற்றி கூறுகையில், “நடிகர் மட்டுமல்லாது இயக்குனராகவும் இருப்பதனால், அவரிடமிருந்து நிறைய விஷயங்கள் மற்றும் நுணுக்கங்கள் கற்றுக் கொண்டேன். மேலும் தமிழில் மீண்டும் நடிப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது”, என்று கூறினார்.

“படத்தில் நான் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில், கணவன் மற்றும் குழந்தையை பாதுகாக்கும் ஒரு எதார்த்தமான இல்லத்தரசியாக நடித்துள்ளேன்”, என்று கூறினார்.

இசையமைப்பாளர் ஜிப்ரான் படத்திற்கு பின்னணி இசை அமைத்துள்ளார்.

படத்தில் பாடல்கள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

“எனது போராட்டம் மற்றும் வலி உங்கள் அனைவருக்கும் தெரியும். அதனால் நான் திரைப்படங்களில் இருந்து சிறிது காலம் ஓய்வு பெற்றேன். வாழ்வில் எதுவும் நிரந்தரம் அல்ல! எல்லாம் மாறும்! அதனை நான் இப்போது புரிந்து கொண்டேன். பக்குவம் மற்றும் நிதானம் தான் மிகவும் முக்கியமானது. ஓடிக்கொண்டே இருப்பது வாழ்க்கை அல்ல. நிதானமாக பிடித்தவற்றை செய்வது மிகவும் முக்கியமானது”, என்று சசிகுமார் கூறினார்.

மேலும் அவர், தான் விரைவில் ஒரு வரலாற்றுப் படம் இயக்கவிருப்பதாகவும், அந்தப் படத்திற்கான திரைக்கதையை ‘ஈசன்’ திரைப்படம் வெளியானதற்கு பின்பு எழுதி முடித்ததாகவும் தெரிவித்தார்.

“இப்பொழுது வெளிவந்த பொன்னியின் செல்வன் மற்றும் பாகுபலிக்கு முன்னரே இந்தத் திரைப்படத்திற்கான பணி தொடங்கியது.

 ஆனால் படத்தின் செலவு மிகவும் அதிகமாக இருந்ததால், அந்தக் காலகட்டத்தில் இந்த திரைப்படத்தினை எடுக்க முடியவில்லை. ஆனால் விரைவில் இந்த படத்தினை இயக்குவேன்”, என்றும் அவர் தெரிவித்தார்.

மதுரையில் தங்கியிருப்பதை பற்றி பத்திரிகையாளர் கேள்வி எழுப்புகையில் அவர் கூறியதாவது, “மதுரை எனது சொந்த ஊர். நான் எனது குடும்பத்துடன் அங்கு வசித்து வருகிறேன். மேலும் எனது திரைப்படத்தின் படப்பிடிப்பு மதுரை மற்றும் மதுரையை சார்ந்த பகுதிகளில் நடைபெறுகிறது. அங்கு தங்கி இருப்பது மிகவும் எளிதாக உள்ளது.

இங்கே ஒரு டப்பிங் ஸ்டூடியோ இருப்பதனால், என் கிராமத்தில் தங்கி வேலை செய்வது எனக்கு மிகவும் சவுகரியமாக உள்ளது. எனவே சென்னைக்கு வரவேண்டிய கட்டாயம் இருந்தால் மட்டுமே நான் வருவேன்”, என்று கூறினார்.

ராஜா பட்டச் சார்ஜி இந்த படத்தின் ஒளிப்பதிவை செய்துள்ளார், மற்றும் ஸ்ரீகாந்த் NP, படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

படத்திற்கான தணிக்கை சான்றிதழ் விரைவில் வழங்கப்பட்டு, இந்தத் திரைப்படம் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் திரையரங்குகளில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.