April 20, 2024
  • April 20, 2024
Breaking News
December 14, 2021

கள்ளன் தலைப்பை மாற்றச் சொல்லி மிரட்டல் வருகிறது

By 0 338 Views

பத்திரிகையாளர் எழுத்தாளர் சந்திரா தங்கராஜ் இயக்கத்தில் கரு.பழனியப்பன் நாயகனாக நடிக்கும் கள்ளன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தின் தயாரிப்பாளர்களான எஸ்.ரவிச்சந்திரன் வி.மதியழகனுடன் இயக்குனர் சந்திரா கலந்து கொண்டனர்.

சந்திப்பில் பேசிய சந்திரா தங்கராஜ், “எல்லா சமூகத்திலும் வேட்டை கலாச்சாரம் உண்டு. அப்படி வேட்டையாடும் தொழிலை பார்த்து வந்த நாயகன் வேட்டையாடும் வழக்கம் தடை செய்யப்பட்ட உடன் வாழ வழியின்றி வேறு சமூகக் குற்றங்களில் ஈடுபட அதன் விளைவு என்ன ஆகிறது என்பது கதை.

ஏற்கனவே மந்திரப்புன்னகை படத்தில் ஹீரோவான கருபழனியப்பன் இந்த வேட்டையாடும் நாயகனாக வரும் பாத்திரத்துக்கு பொருத்தமானவராக தெரிந்தார். அதனால் அவரை நடிக்க கேட்டேன் அவரும் ஒத்துக் கொண்டு சண்டைக் காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

நான் சினிமாவைப் பயின்ற அமீரிடம் படம் இயக்கப் போகிறேன் என்று சொன்னபோது படம் இயக்குவது அவ்வளவு சாதாரணமான காரியம் அல்ல. பலகாலம் பயிற்சி எடுக்க வேண்டும். உன்னால் முடிந்தால் அதை மேற்கோள் என்று கூறினார். அவர் அப்படிக் கூறியது அப்போது புரியவில்லை. இந்தப் படம் இயக்கி முடித்ததும் அவர் சொன்னது எவ்வளவு உண்மை என்பதைப் புரிந்து கொண்டேன்..!”

படத்தை வெளியிடும் எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் பி.மதியழகன் பேசும்போது, “பெண் இயக்குனர்கள் அதிகமாக தமிழ்சினிமாவில் எடுபடவில்லை – ஓரிருவரைத் தவிர. ஆனால் ஒரு பெண் இயக்குனராக இந்த படத்தில் சந்திரா நிச்சயமாக வெற்றி பெறுவார். ஒரு எழுத்தாளர் எப்படிப் படம் எடுப்பாரோ அந்த வகையில் இந்தப் படம் அமைந்திருக்கிறது.

நீங்கள் பல படங்களைத் தயாரித்து வெளியிடுகிறீர்கள். ஆனால் என் படத்தை மட்டும் ஏன் இன்னும் வெளியிடவில்லை என்று சந்திரா கேட்டுக்கொண்டிருந்தது என் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது. அதற்கான வேளையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஆனால் இந்தப் படம் பற்றி செய்திகள் வரும்போதெல்லாம் இந்த தலைப்பை மாற்ற சொல்லி நிறைய மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த படத்தின் தலைப்பு திருடன் என்ற பொருளிலேயே வைக்கப்பட்டுள்ளது. ஒரு இனத்தைக் குறிப்பிடுவதாக நிச்சயமாக இல்லை. அதைப் படம் பார்த்தால் புரிந்து கொள்ள முடியும்.

படம் விரைவில் தணிக்கை ஆகவிருக்கிறது.!” என்றார்.

கே இசையமைத்திருக்கும் படத்தில் நா.முத்துக்குமார், யுகபாரதி, சந்திரா தங்கராஜ் பாடல்களை எழுதியிருக்கிறார்கள். ஒளிப்பதிவு எம்.எஸ்.பிரபு, கோபி ஜகதீஸ்வரன்.

ஜனவரியில் கள்ளன் வெளியாக இருக்கிறது.