பாரம்பரிய மனித மதிப்புகளை… குறிப்பாக பெற்றோரின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் படம். அதை எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் கொடுத்திருக்கிறார் இயக்குனர் மரிய ராஜா இளஞ்செழியன்.
கிராமத்தில் வாத்தியார் வேலை பார்த்த ஜார்ஜ் மரியான், தன் மகன் ஜீவி பிரகாஷ் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதற்காக மகனுக்கு ஹேப்பி என்ற பெயர் வைத்தாலும் அவரைத் தன் கைக்குள்ளேயே வைத்து வளர்க்கிறார். அதுவே ஜீவியின் மகிழ்ச்சியை கெடுக்கிறது.
அவரது முதல் காதலும் தோல்வியடைய,
அதற்குக் காரணம் பெற்றோரின் நாகரீகமின்மையே காரணம் என்று புரிந்து கொள்ளும் அவருக்கு பெங்களூரில் ஐடி வேலை கிடைக்க, விட்டால் போதுமென்று அங்கே குடியேறுகிறார்.
அங்கே அவரே எதிர்பாராமல் நாயகி ஶ்ரீ கௌரிபிரியாவின் அன்புக்கு பாத்திரமாகி அவரது காதலும் கிடைக்கிறது.
பழம் நழுவிப் பாலில் விழுந்து அது நழுவி வாயில் விழுந்த கதையாக தங்களின் திருமணத்திற்கு கௌரிப்ரியாவின்
அமெரிக்கத் தொழிலதிபர் தந்தையின் அனுமதியும் கிடைத்து விட, ஆனால் தன் பெற்றோரின் தகுதி அதைக் குறைத்து விடுமோ என்று அஞ்சுகிறார்.
அவர் பயந்தபடியே ஐந்து நட்சத்திர ஓட்டலுக்கு பட்டிக்காட்டான்கள் சகிதம் வந்து இறங்கும் ஜார்ஜ் மரியான் பல குழப்பங்களுக்குக் காரணமாகிறார். இதனால் மீண்டும் தன் காதல் பறிபோகும் நிலைக்கு ஆளாகிறார் ஜீவி.
இதையெல்லாம் தாண்டி அவர் காதல் ஜெயித்ததா என்பதுதான் மீதிக் கதை.
ஒரு சாதாரண கிராமத்தானின் மகனாக வரும் ஜீவி பிரகாஷ், தனது பெற்றோரின் உண்மையான மதிப்பை புரிந்து கொள்ளத் தவறும் பாத்திரத்தில் சிறப்பாக பொருந்தி இருக்கிறார்.
தனது கதாபாத்திரத்தின் ஆழத்தை முழுமையாக புரிந்து கொண்டு இயல்பான நடிப்பில் மிளிர்கிறார் ஜீவி.
கோடீஸ்வரியாக இருந்தாலும் இயல்பாக பழகும் மனம் கொண்ட நாயகி ஶ்ரீ கௌரி பிரியா தன் கதாபாத்திரத்தை திறம்பட கையாளுகிறார். ஜீவியின் திறமையை ஊக்குவித்து ஆதரிக்கும் கதாபாத்திரமாக வந்து மனதில் நிறைகிறார்.
திரைப்படத்தின் மையமாக ஜார்ஜ் மரியான் இருக்கிறார். அவர் தனது கதாபாத்திரத்தை அபாரமான நடிப்பு திறனுடன் நியாயப்படுத்தி வலுவான தாக்கத்தை ஏற்படுத்துகிறார். அவர் தன்னுடைய கதையை சொல்லும் அந்த ஃப்ளாஷ் பேக் படத்தின் இதயம் போன்றது.
நாயகியின் தந்தையாக நம் காதல் தேசம் அப்பாஸ் மீண்டும் வந்திருப்பது இந்தப் படத்திற்கு கூடுதல் மதிப்பை தருகிறது; ஜார்ஜ் மரியான் வட தருவத்தில் நின்று பிடிவாதம் பிடித்தால் அவருக்கு எதிராக தென்துருவத்தில் இவர் நிற்பது அவருக்கு போட்டியான சரியான தேர்வாக ஆக்குகிறது.
ஜஸ்டின் பிரபாகரின் இசையும், மதன் ஒளிப்பதிவும் படத்தை கிராமம் நகரம் எல்லாவற்றிலும் நேர்த்தியாக வெளிப்படுத்து கின்றன.
முதல் பாதி சற்று மெதுவாகவும் திருப்பங்கள் குறைவாகவும் இருந்தாலும், அது விறுவிறுப்பு குறையாத இரண்டாம் பாதிக்கான ஒரு தயாரிப்பாக அமைகிறது.
படத்தை எழுதி இயக்கி இருக்கும் மரிய ராஜா இளஞ்செழியன், கூட்டுக் குடும்பங்கள் அருகி நியூக்ளியர் குடும்பம் எனப்படும் தனித்து விடப்பட்ட குடும்பமாக மாறிவரும் இன்றைய சூழலை கருத்தில் கொண்டு குடும்பத்தின் வலிமையையும்யும் பெற்றோரின் தியாகத்தையும் அடிப்படையாக வைத்து இந்த கதையை எழுதி இருக்கிறார்.
அத்துடன் ஒரு தமிழன் கிராமத்திலிருந்து நகரத்துக்கு வந்து முன்னேறுவதற்குள் எந்த படிப்பறிவும் இல்லாமல் வடக்கிலிருந்து தெற்கில் வந்து குவிyம் வடக்கன்கள் பல மடங்கு முன்னேறி வரும் அரசியலையும் தொட்டுக்காட்டி மௌனமாக தமிழர்களை எச்சரித்து இருக்கிறார்.
ஹேப்பி ராஜ் – மகிழ்ச்சி..!
– வேணுஜி
Related