June 20, 2025
  • June 20, 2025
Breaking News
June 27, 2019

ஓட்டகத்தின் 100 நாள் கால்ஷீட் – பக்ரீத் விக்ராந்த்

By 0 671 Views
‘எம்10 புரொடக்‌ஷன்’ (M10 PRODUCTION) சார்பில் எம்.எஸ்.முருகராஜ் தயாரிக்க உருவாகி இருக்கும் படம் ‘பக்ரீத்’. இதில் விக்ராந்த் நாயகனாகவும் வசுந்தரா நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். மேலும் ‘ரோகித் பதாக்’ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
 

ஒட்டகத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படத்தை இயக்கியதோடு மட்டுமில்லாமல் ஒளிப்பதிவும் செய்திருக்கிறார் ஜெகதீசன் சுபு. டி.இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் முருகராஜ், இயக்குனர் ஜெகதீசன் சுபு, நாயகன் விக்ராந்த், நாயகி வசுந்தரா, நடிகர் ரோகிப் பதாக், மோக்லி, பேபி ஸ்ரூத்தீகா, பாடலாசிரியர்கள் ஞானகரவேல், மணிஅமுதவன், கலை இயக்குனர் மதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விக்ராந்த் பேசும்போது, “நான் சினிமா உலகிற்கு வந்து 11 வருடம் ஆகிறது. ஆனால் இந்த மேடை எனக்கு ரொம்ப புதியது. இப்போது பெரிய நம்பிக்கையோடு நிற்கிறேன். இந்தப்படம் அந்த தைரியத்தைக் கொடுத்து இருக்கிறது. கண்டிப்பாக இந்தப்படம் போல ஒருபடம் இதுவரை வந்ததில்லை. இனியும் வராது. 

முருகராஜ் அண்ணன் எனக்கு 13 வருடமாக தெரியும். ஆனால் இந்தக் கதை மீது அவருக்கு பெரிய நம்பிக்கை. இந்த படத்தில் வரும் ஒட்டகத்தைக் கொண்டுவருவதற்கு அவ்வளவு சிரமப்பட்டார். ஓட்டகம் மீது நிறைய பஞ்சாயத்து இருக்கு. அந்த ஒட்டகத்தை அனுமதி வாங்கி கொண்டுவர 8 மாதங்கள் ஆகியது. ஒட்டகத்தை தத்தெடுத்து பயிற்சி கொடுத்து, அதனுடன் நாங்கள் பழக ஒரு மாதம் ஆகியது. மேலும் அந்த ஒட்டகத்தை 100 நாளில் ஒப்படைக்க வேண்டும் என்ற டெட்லைன் வேறு இருந்தது.

 

ராஜஸ்தான், மத்திய பிரதேஷ் ஆகிய இடங்களுக்கு ஒட்டகத்தை அழைத்து சென்று படப்பிடிப்பு நடத்தினோம். வானிலை, மழை என பல பிரச்சினைகள் இருந்தன. உண்மையிலேயே தயாரிப்பாளருக்கும் ஒட்டகத்திற்கும் தான் பெரிய நன்றி சொல்லணும். இப்படத்தில் ஒரு கிராபிக்ஸ் காட்சி கூட இல்லை. படத்தைப் பார்த்த அனைவருமே பெரிதாகப் பாராட்டி இருக்கிறார்கள்..!” என்றார்.

வசுந்தரா பேசும்போது, “இந்தியாவிலே ரொம்ப சிறந்த படமாக பக்ரீத் வந்திருக்கிறது. இதுபோன்ற ஒரு அனுபவம் எந்தப்படத்திலும் எனக்கு கிடைத்தது இல்லை. இயக்குநர் ஜெகதீசன் சாருடன் தொடர்ந்து வேலை செய்ய வேண்டும் என்று எல்லா நடிகர்களுக்கும் தோன்றும். விக்ராந்த் மிகச் சிறப்பான நடிகர். நிச்சயம் படம் உங்களை அழ வைக்கும்..!” என்றார்
.
இயக்குநர் ஜெகதீசன் சுபு பேசும்போது, ‘எனக்கு இது முதல் மேடை. தயாரிப்பாளர் இப்படத்தை ஒத்துக்கொண்ட பின் ஒரு சின்னப்படமாக எடுக்கலாம் என்று முடிவு செய்தோம். ஆனால் படம் படிப்படியாக வளர்ந்தது. இந்தக் கதை எழுதும் போது எனக்கு விக்ராந்த் நினைவில் வரவேயில்லை. ஆனால் அவர், இந்தப்படத்திற்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்கிறேன் என்றார். மிகவும் அற்புதமாக நடித்திருக்கிறார். வசுந்தராவின் வாய்ஸ் எனக்கு பிடிக்கும். அன்பைக் கூட அவர் சத்தமாகத்தான் வெளிப்படுத்துவார். பாடலாசிரியர்கள் சிறப்பாக ஒத்துழைத்துள்ளார்கள்..!” என்றார்.

தயாரிப்பாளர் முருகராஜ் பேசும்போது, “எனக்கு இது இரண்டாவது படம். முதல் படத்திற்கு தந்த அதே ஆதரவை இப்படத்திற்கு தருவீர்கள் என்று நம்புகிறேன்..!” என்றார்.