May 5, 2024
  • May 5, 2024
Breaking News
September 24, 2023

ஐமா திரைப்பட விமர்சனம்

By 0 165 Views

ஆதாம் (யூனஸ்) தன் தாயின் உடல் நிலை பாதித்ததால் அவரை மருத்துவமனையில் சேர்க்கிறான். அதேபோல் விபத்தில் சிக்கிய மரியா (எல்வின் ஜூலியட் ) அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்கிறாள்.

ஒரு கட்டத்தில் இவர்கள் இருவரையும் கடத்தி ரகசிய இடத்தில் அடைக்கின்றனர். கை கால் கட்டப்பட்டு கிடக்கும் அவர்கள் ஒரு வழியாக அதிலி ருந்து மீண்டு அந்த இடத்திலிருந்து தப்பிக்க முயல்கின்றனர். ஆனால் இவர்கள் இருவரையும் கடத்தி வரும் பேர்விழி ரகசிய திட்டம் தீட்டியிருக்கிறான். அதற்காக இருவரையும் சித்ரவதை செய்கிறான்.

இருவரையும் ஏன் கடத்தினான், கடத்தல்காரனின் திட்டம் என்ன என்பதற்கு படம் பதில் சொல்கிறது.

கதாநாயகனாக நடித்த யூனஸ் துடிதுடிப்பான இளைஞராக வருகிறார். சிலகோணங்களில் தோற்றத்தில் நடிகர் விஜய்யை நினைவூட்டுகிறார்.நடிப்பில் இயக்குநர் சொன்னதைச் செய்துள்ளார். குறை சொல்ல ஒன்றும் இல்லை.

கதாநாயகி எவ்லின் ஜூலியட் தப்பிக்கும் காட்சிகளில் நல்ல முக பாவங்களைக் காட்டியுள்ளார். அவரது திரைத் தோற்றம் திருப்தியாக உள்ளது. வில்லனாக நடித்திருக்கும் தயாரிப்பாளர் சண்முகம் ராமசாமி குறையில்லாத நடிப்பைக் கொடுத்து வில்லத்தனம் காட்டுகிறார்.

நாயகன் -நாயகி பாத்திரங்களின் மூலம் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுப்பவர்கள் தங்கள் உயிருக்கு ஆபத்து வரும்போது அதிலிருந்து தப்பித்து உயிர் வாழவே எண்ணுகிறார்கள் என்ற உளவியல் உண்மையைக் காட்டியுள்ளார்கள். அவர்களின் உயிர் தப்பித்தல் முயற்சிகளை அணு அணுவாக ரசிக்கும் வில்லனின் குரூர குணமும் காட்டப்பட்டுள்ளது.

ஐமா என்றால் கடவுள் சக்தி என்றும் பொருளாம். ஆனால் படத்துக்கும் கடவுள் சக்திக்கும் என்ன தொடர்பு என்று தெரியவில்லை.

திரில்லர் படம் என்ற சமிக்ஞை படத்தின் தொடக்கத்திலேயே தெரிகிறது. பேய் படமாக இருக்குமோ என்று யோசிக்க வைத்து மெல்ல, மெல்ல சைன்ஸ் பிக்ஷனாக மாறுகிறது.

தப்பிக்க முயல்வதற்கான க்ளு கண்டுபிடிக்க ஹீரோவை நச்சென்று லிப் டூ லிப் கிஸ் கொடுத்து சடன் கிக் ஏற்றுகிறார் ஜூலியட்.

யாருமே இல்லாத இடம்போல் சஸ்பென்சாக காட்சி செல்லும் போது திடீரென்று வில்லன் என்ட்ரி, அடியாட்கள் என்ட்ரி எல்லாம் சஸ்பென்சை நீர்த்துப் போகச் செய்கிறது.

வில்லனாக வரும் சண்முகம் ராமசாமி வித்தியாசமான கெட்டப்பில் வந்து மிரட்டி உள்ளார். “இவன் அவனில்லை அவ இவனில்ல” என்ற பாணியில் ஒரு வசனம் பேசி பொடி வைக்கிறார் வில்லன் சண்முகம்.

கே ஆர்.ராகுல் இசையில் படத்தில் மொத்தம் பத்து பாடல்கள் இடம் பெறுகிறது. கிளைமாக்ஸ் முடிந்த பிறகும் திரையில் பாடல் தொடர்கிறது.

விஷ்ணு கண்ணன் குறுகிய அறையில் காட்சிகளை சுழன்று படமாக்கியிருக்கிறார். குண்டு பல்பிலேயே படமெடுத்து இருப்பார் போல. அவ்வளவுதான் வெளிச்சம் தேவைப் பட்டிருக்கிறது.

ராகுல் ஆர்.கிருஷ்ணா ஹாலிவுட் சைன்ஸ் பிக்ஷன் பாணியில் கதையை சொல்ல முயன்றிருக்கிறார். காட்சிகளில் இன்னும் கூட விறுவிறுப்பு சேர்த்திருக்கலாம்.

ஐமா – சஸ்பென்ஸ் கைமா..!