May 4, 2024
  • May 4, 2024
Breaking News
April 25, 2024

விஜய்யின் அரசியல் கட்சியை கடுமையாக விமர்சித்த ‘உழைப்பாளர் தினம்’ பட இயக்குநர்

By 0 36 Views

சந்தோஷ் நம்பிராஜன் தயாரித்து இயக்கியிருக்கும் ‘உழைப்பாளர்கள் தினம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா ஏப்ரல் 22 ஆம் தேதி சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இயக்குநரும் நடிகருமான ராஜ்கபூர், தயாரிப்பாளர் நந்தகுமார் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் ஜி.ராமகிருஷ்ணன் பேசுகையில்,

56 லட்சம் மக்கள் தொகை கொண்ட ஒரு நகரமாக இருக்க கூடிய சிங்கப்பூர் தேசத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தொடர்பான படம் என்று சொன்னார்கள். குறிப்பாக உழைப்பாளர்கள் தினம், உழைப்பாளர்கள் பற்றி, உழைக்கும் மக்கள் பற்றி ஏராளமான படங்கள் வந்திருக்கிறது என்றாலும், 1886 ஆம் ஆண்டு அமெரிக்காவில் சிக்காகோ நகரத்தில், மிகப்பெரிய அளவிலான எழுச்சியை தொடர்ந்து மே மாதம் 1 ஆம் உலக பாட்டாளி வர்க்கத்தினர் அனைவரும் உழைப்பாளர்கள் தினமாக கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்தியது.

இன்று உலகத்தில் நாடு கடந்து, மதம் கடந்து, சாதி கடந்து, கலாச்சாரங்கள் கடந்து கொண்டாடப்படும் ஒரு தினம் என்றால் அது உழைப்பாளர்கள் தினம் மட்டுமே, வேறு எந்த தினமும் இல்லை. அப்படிப்பட்ட மே தினத்தை மையமாக கொண்ட இந்த ‘உழைப்பாளர்கள் தினம்’ படம் என்பது நிச்சயம் பாராட்டுக்குரியது.

2010-ல் கட்சியின் மாநில செயலாளராக நான் பொறுப்பேற்றேன், அடுத்து இரண்டு ஆண்டுகளில் மறைந்த இயக்குநர் கே.பாலச்சந்தரை சந்த்தேன். அவரை நான் சந்திக்கும் முன்பு ஒரு புத்தகத்தில் சினிமா பற்றிய செய்திகளை படித்துவிட்டுச் சென்றேன். அப்போது அவரிடம், “அன்று இருந்த எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி இருவருடைய ஃபார்முலாவில் நீங்கள் பயணிக்கவில்லை, அப்படி இருந்தும் வெற்றி பெற்றது எப்படி?” என்று கேட்டேன். அதற்கு அவர், “நான் சினிமாவுக்கு வந்த போது, இப்போது இருக்கிற மாதிரி ஹாலிவுட் படங்களை பார்க்கும் வசதி இல்லை.

இப்போது பத்து ஹாலிவுட் படங்களை பார்த்துவிட்டு, அதில் இருந்து ஒரு கதையை தயார் செய்துவிடுகிறார்கள், எங்களுக்கு அப்படிப்பட்ட வசதியில்லை. அதனால், எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி இருவரிடமும் போகாமல் தனி பாதையில் பயணிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அப்படி இருந்தும் எம்.ஜி.ஆர் படம் பண்ணலாம் என்று என்னிடம் பலமுறை கேட்டிருக்கிறார். ஆனால்,உங்களை வைத்து படம் பண்னும் அளவுக்கு நான் திறமைசாலி இல்லை என்று சொல்லி நான் மறுத்துவிடுவேன். இருந்தாலும், அவருடைய கட்டாயத்தின் பேரில் ‘தெய்வத்தாய்’ என்ற படத்திற்கு மட்டும் திரைக்கதை, வசனம் எழுதினேன் என்றார்.

படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான சந்தோஷ் நம்பீராஜன் பேசுகையில்,

இந்த படத்தின் கதையை நான் பல தயாரிப்பாளர்களிடம் சொல்லியிருக்கிறேன். ஆனால், வெளிநாட்டு உழைப்பாளர்களைப் பற்றிய படம் இங்கு எப்படி ஓடும், வெளிநாடுகளில் ஓடிடி வந்துவிட்டதே, அவர்கள் இதை எப்படி பார்ப்பார்கள் என்று சொன்னார்கள். ஆனால், உழைப்பாளர் தினம் என்ற தலைப்பை சொன்ன உடன் சிங்கப்பூர் துரைராஜ், ரஜேந்திரன் சார், எங்க அண்ணன் நம்பிராஜன், கடலூர் ஜான், பொண்ணுசாமி புருஷோத்தமன், பாண்டுதுரை, சரஸ் என அனைவரும் குழுவாக சேர்ந்து இந்த படத்தை தயாரித்திருக்கிறோம்.

தற்போதைய தமிழ் சினிமா எப்படி இருக்குனா, ஒரு நகைச்சுவை நடிகரோட ஒரு நாள் சம்பளம் 10 லட்சம், அவரோட உதவியாளருக்கு 30 ஆயிரம் ரூபாய், அதில் 2 ஆயிரத்தை மட்டுமே அவருக்கு கொடுத்துவிட்டு, மீதியை அந்த நடிகரே எடுத்துக்கொள்வதாகவும் சொல்லப்படுகிறது. அதே சமயம், 10 ஆயிரம் ரூபாய் இல்லாமல் சேசு என்ற நகைச்சுவை நடிகர் இறந்து போகிறார். கடந்த ஆண்டு போண்டா மணி என்ற ஒரு நடிகர் இறந்து போகிறார். ‘அங்காடித் தெரு’ பட நடிகைக்கும் இதே நிலை தான் ஏற்பட்டது. இது மிகவும் வருத்தமளிக்கிறது. நடிகர் சங்கம் இருக்கிறது, இன்று சங்கத்திற்கான கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபடுகிறார்கள். செங்கலையும், சிமெண்டையும் கொண்டு எழுப்பும் கட்டிடத்தை விட மனித உயிர் தான் முக்கியம், ஒரு நடிகரின் வாழ்க்கையை காப்பாற்றாத சங்கம் எதற்கு. இது மிகவும் வருத்தப்படக்கூடிய விசயம்.

லோகேஷ் கனகராஜ், நலன் குமாரசாமி, கார்த்திக் சுப்புராஜ், மாரி செல்வராஜ், பா.இரஞ்சித், வெற்றிமாறன் போன்ற திறமையான இயக்குநர்கள் அனைவரும் சிறிய படங்கள் மூலம் தான் தங்களை நிரூபித்துக்காட்டினார்கள். ஆனால், அவர்களுடைய அடுத்தடுத்த படங்களில் சிறிய நடிகர்களுடன் பணியாற்றாமல் பெரிய பெரிய நட்சத்திர ஹீரோக்களுடன் பயணிக்கிறார்கள். இது சொம்பு தூக்குற மாதிரி, பல்லக்கு தூக்குற மாதிரி இருக்கிறது. வசூல் பின்னால் போனால் அவர்களுடைய வாழ்க்கை நிலையாக இருக்க முடியாது. இதே பாரதிராஜா சாதாரண ஒரு வளையல் கடையில் இருந்தவரை ஹீரோவாக்கினார்.

தமிழ் தெரியாமல் கர்நாடகாவில் இருந்து வந்தவரை பாலச்சந்தர் நடிக்க வைத்து சூப்பர் ஸ்டாராக்கினார். அதனால் தான் இவர்கள் பற்றி இன்னமும் பேசப்படுகிறது. இந்த விசயத்தை நான் இங்கு பேசுவதற்கு காரணம் என்னுடைய இயக்குநர் தான். அவர் எந்தவித பொருளாதார நிலையை எதிர்பார்க்காமல் என்னை ஹீரோவாக்கினார். இங்கு ஹீரோவுக்கு தான் அதிகம் செலவு செய்கிறார்கள். இதே நிலை நீடித்தால் தமிழ் சினிமா இதைவிட மிகப்பெரிய வீழ்ச்சியை சந்திக்கும்.

இங்கு யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் அது தவறில்லை. ஆனால், சினிமாவில் 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிவிட்டு, சக நடிகர்களுக்காகவோ, கலைஞர்களுக்காகவோ எந்தவித சமூக சீர்திருத்தங்களையும் செய்யாமல், அரசியலுக்குள் நுழைகிறார்கள் என்றால், 1000 கோடி ரூபாய் நோக்கி அவர்கள் நகர்கிறார்கள் என்று தான் அர்த்தம்.

500 கோடி ரூபாயில் திரையரங்க நகரம் தேவையில்லை, அதற்கு பதில் 50 நகரங்களை தேர்ந்தெடுத்து 50 திரையரங்கங்களை உருவாக்க வேண்டும். சிறிய அளவிலான திரையரங்கங்களை திறக்க வேண்டும். திரையரங்கு மூலமாக அரசுக்கு ரூ.10 முதல் ரூ.12 கோடி வரை வருவாய் கிடைக்கும். பேருந்து நிலையங்களில் வைக்கலாம், பேருந்துக்காக காத்திருப்பவர்கள் படம் பார்ப்பார்கள். பார்க்கிங், கேண்டீன் என மிகப்பெரிய வியாபாரம் இருக்கிறது. இப்படி அரசு திரையரங்கம் திறக்க வேண்டும் என்று சொன்னதும், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் பயப்பட வேண்டாம்.

பிறகு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணம் கொடுத்து இதுபோன்ற திட்டங்களை கிடப்பில் போட்டுவிடுவார்கள். அரசு பள்ளியால் தனியார் பள்ளிக்கு பாதிப்பில்லை, சமூக நலக்கூடங்களால் திருமண மண்டபங்களுக்கு பாதிப்பில்லை, ரேஷன் கடைகளினால் சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு பாதிப்பில்லை, அப்படி தான் அரசு திரையரங்கத்தால் மற்ற திரையரங்கிற்கு எந்த பாதிப்பும் வராது.

சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட நடிகரும் இயக்குநருமான ராஜ்கபூர் பேசுகையில்,

பொதுவாக சினிமா விழா என்றாலே சினிமா பிரபலங்களை வரவைத்து பிரமாண்டமாக நடத்துவாங்க. ஆனால், இங்கு உழைப்பாளர்களுகாக உழைக்கின்ற ஒரு தலைவரை சிறப்பு விருந்தினராக அழைத்து வந்தது புதிதாக தான் இருக்கிறது. இந்த குழுவினரை பற்றி எனக்கு தெரியாது, எனது நண்பர் சிங்கப்பூர் துரைராஜ் தான் என்னை அழைத்தார். இன்று கதைக்கும் தலைப்புக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லாமல் இருக்கிறது. காதல், ஆக்‌ஷன் என ஜானருக்கு பொருத்தம் இல்லாத தலைப்பை வைப்பது தான் டிரெண்ட், ஆனால் நீங்க உழைப்பாளர் தினம் என்று ஏன் தலைப்பு வச்சிங்க என்று கேட்டேன். படத்தின் லைன் சொன்ன போது என் மனதை பாதித்துவிட்டது,உழைப்பாளர்கள் தினம் படத்திற்காக உழைத்த அனைவருக்கும் எனது வாழ்த்துகளை கூறிக்கொண்டு படம் மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துகிறேன் என்றார்.
தயாரிப்பாளர் நந்தகுமார் பேசுகையில்,

”கம்யூனிசத்தலைவர் கலந்துக்கொண்ட இந்த நிகழ்ச்சியை பெருமையாக பார்க்கிறேன். நண்பர் சிங்கப்பூர் துரைராஜ் மூலமாகத் தான் இங்கே வந்தேன். இந்த மேடையை ஒரு புத்துணர்ச்சி மிக்கதாகவும், அறிவுச்சார்ந்தததாகவும் பார்க்குகிறேன். இயக்குநர் சந்தோஷ் பேசிய எதிலும் நான் இல்லை. நான் தயாரிப்பாளராக ஐந்து படம் பண்ணியிருக்கேன், எக்ஸ்கியூட்டி கம் தயாரிப்பாளராக ஐந்து படம் பண்ணியிருக்கேன். நான் சென்னைக்கு வந்து 20 வயதிலேயே ரெப்பாக சாதாரணமாக இருந்து, சிறு சிறு படங்களை வாங்கி விநியோகஸ்தராக வளர்ந்தேன். பிறகு தயாரிப்பாளராகலாம் என்று தான் கலாபக்காதலன் என்ற படம் பண்ணேன்.

அதை தொடர்ந்து அடுத்தடுத்து 10 படங்கள் தயாரித்தேன், அதில் 8 படங்கள் எனக்கு பெரும் நஷ்ட்டத்தை கொடுத்தது. விமல், ஓவியாவை வைத்து ‘சில்லுனு ஒரு சந்திப்பு’ படம் தயாரித்தேன், அதன் பிறகு எனது சினிமா வாழ்க்கையே முடிந்துவிட்டது. அதேபோல், அறிமுக இயக்குநரை வைத்து நான் தயாரித்த 96 படமும் எனக்கு வெற்றியை கொடுத்தது. எனக்கு வெற்றி கொடுத்தவர்கள் என்றால் அது புதியவர்கள் தான்,

நம்ம இங்கு உணர்வுகளையும், உண்மையான உணர்ச்சிகளையும் அடக்கி வைத்துக்கொண்டு வெற்றி பெறுவதை தான் இலக்காக கொண்டு பயணிக்க வேண்டும். சந்தோஷுக்கு இருக்கும் அனைத்து உணர்வுகளும் எனக்கும் இருந்தது. இங்கு மிகப்பெரிய தலைவர் இருக்கிறார். ஆனால், இவரை நாம் மேடையில் உட்கார வைத்து என்றைக்காவது ரசித்தோமோ இல்லை. இங்கு அரசியல் நம்மை அடிமையாக்கி வைத்திருக்கிறது.

அதை எல்லாம் இங்கு நான் பேச வரவில்லை. இங்கு ஒரு நல்ல படம், நல்ல திரைக்கதை மட்டுமே அதை நல்ல படமாக கொடுத்திட முடியாது, அதற்கு நிறைய விசயம் இருக்கிறது. திரைக்கும், ரசிகர்களுக்கும் இடையே இருக்கும் தூரத்தை குறைக்க வேண்டும், அதற்கான விசயங்கள் படத்தில் இருக்க வேண்டும். இயக்குநர் சந்தோஷ் நீங்கள் முதலில் வெற்றி பெற்றுவிடுங்கள், சந்தோஷ் யார்? என்பதை தெரியப்படுத்துங்கள், பிறகு நீங்கள் என்ன பேச வேண்டுமோ அதை பேசினால், அது மக்களிடம் எளிதில் சென்றடையும்.

படத்தின் கதாநாயகி குஷி பேசுகையில்,

“நான் கர்நாடாக மாநிலத்தைச் சேர்ந்தவள், இந்த படத்தில் மாலதி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்த சந்தோஷ் சாருக்கு நன்றி. இயக்குநர் இது கிராமத்து கதை, தமிழ் வசனங்களை சரியாக பேசுவீங்களா? என்று கேட்டார். நான் உடனே முயற்சிக்கிறேன் சார், என்றேன். என்னை நம்பி அவர் இந்த வாய்ப்பை கொடுத்தார். படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாகவே அந்த கிராமத்திற்கு என்னை அழைத்துச் என்று அம்மக்களுடன் பழக வைத்தார்கள்.

அதன் மூலம் கிராம வாழ்க்கையை பற்றி தெரிந்துக்கொண்டேன். அதேபோல், எடுக்க கூடிய காட்சி பற்றியும், அதற்காக வசனங்கள் பற்றியும் எனக்கு முன்பே சொல்லிவிடுவார்கள், அதனால் நான் பயிற்சி எடுத்து சிறப்பாக நடித்தேன். நம்புகிறேன், அப்படி ஒரு வேடத்தில் என்னால் முடிந்தவரை நடித்திருக்கிறேன், பார்த்துவிட்டு ஆதரவு தாருங்கள்.” என்றார்.

இசையமைப்பாளர் மசூத் பேசுகையில்,

“நான் கேரளாவைச் சார்ந்தவன் என்பதால் எனக்கு தமிழ் சரியாக பேச வராது, அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்த சந்தோஷ் சாருக்கு நன்றி. 15 வருடங்களாக கனவோடு சுற்றிக்கொண்டிருந்தேன். அவர் சொன்னது போல் நாம் அனைவரும் உழைப்பாளர் தான்.

நானும் 6 வருடங்கள் வெளிநாட்டில் பணியாற்றியிருக்கிறேன். அதனால், இந்த படம் சொல்லும் வலி எனக்கு புரிந்தது, அதனால் எனக்கு பணியாற்ற சுலபமாக இருந்தது. இங்கு பல ஜாம்பவான்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு மத்தியில் நானும் ஒரு இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கிறேன், எனக்கும் ஆதரவு கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.” என்றார்.