April 25, 2024
  • April 25, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • தியேட்டரில் வெளியானால்தான் படங்களுக்கு மரியாதை – பேரரசு
February 16, 2021

தியேட்டரில் வெளியானால்தான் படங்களுக்கு மரியாதை – பேரரசு

By 0 487 Views

ஜீசஸ் கிரேஸ் சினி எண்டர்டெயின்மெண்ட் (Jesus Grace Cine Endartainment) சார்பில் ஞான ஆரோக்கிய தயாரித்து, எழுதி இயக்கியிருக்கும் படம் ‘உதிர்’.

விதுஷ், சந்தோஷ் சரவணன், மனிஷா ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் மனோபாலா, தேவதர்ஷினி, சிங்கம்புலி, போண்டா மணி, தீப்பெட்டி கணேஷன், தலைவெட்டி முருகன், நெல்லை சிவா, சிசர் மனோகர், முத்துக்காளை உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

“நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா…” உள்ளிட்ட பல உலக புகழ்பெற்ற ஆன்மீக பாடல்களுக்கு இசையமைத்த அரவிந்த் ஸ்ரீராம், ஈஸ்வர் ஆனந்த் ஆகியோர் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிப்ரவரி 15 ஆம் தேதி மாலை, சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.

இதில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக இசையமைப்பாளர் தினா, இயக்குநர் பேரரசு, கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் பேரரசு, “திரையரங்குகளில் திரைப்படங்கள் பார்ப்பது என்பதே நல்ல அனுபவம். டூரிங் டாக்கீஸ்களில் படம் பார்த்த அனுபவங்களை மறக்க முடியாது. அப்படிப்பட்ட திரையரங்கங்கள் இன்று காணாமல் போய்விட்ட சூழலில், தற்போது திரையரங்குகளுக்கு புதிய சாபக்கேடு வந்திருக்கிறது.

கடலில் பிடிக்கப்பட்ட மீன்களை தான் கடல் மீன் என்போம், ஏரிகளில் பிடிக்கும் மீன்களை ஏரி மீன் என்போம். அதுபோல், திரையரங்குகளில் வெளியானால் தான் அது திரைப்படம். அப்போது தான் திரைப்படங்களுக்கு மரியாதை.

ஆனால், தற்போது செல்போனில் படங்கள் வெளியாக தொடங்கியிருக்கிறது. அதனால், திரைப்படங்கள் செல் படங்களாகிவிட்டது.

சூழ்நிலை காரணமாக, ஒடிடி-யில் வெளியிடலாம், ஆனால் அதையே தொடரும் சூழலை உருவாக்க கூடாது. 

‘உதிர்’ படத்தின் பாடல்கள் அனைத்தும் நன்றாக இருந்தது. இயக்குநர் ஞான ஆரோக்கிய ராஜா, என்னையும், டி.ராஜேந்தரையும் மானசீக குருவாக ஏற்றுக்கொண்டு, படத்தின் அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார். 

ஞான ஆரோக்கிய ராஜா, தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளார். அதனால், அவரை என்னை விட ஒரு படி தாண்டிவிட்டார். ‘உதிர்’ படத்தின் மூலம் அவர் மிகப்பெரிய வெற்றியை பெற்று தொடர்ந்து வெற்றிகரமான இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும், பாடலாசிரியராகவும் பயணிக்க வேண்டும், என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.

ஜாக்குவார் தங்கம் பேசுகையில், “’உதிர்’ படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலரை பார்த்த போது, இயக்குநர் ஞான ஆரோக்கிய ராஜா படம் மூலம் பல நல்ல விஷயங்களை சொல்லியிருக்கிறார் என்பது புரிகிறது. குடி…குடி…என்று பாடல் தொடங்கியதும் நான் சற்று அதிர்ச்சியானேன். ஆனால், அதை படி…படி…என்று அவர் முடித்தது சிறப்பு. மதுவுக்கு அடிமையாகும் இளைஞர்கள் படிப்பில் கவனம் செலுத்தினால் தான் சமூகம் முன்னேறும்…” என்றார்.

இசையமைப்பாளர் தினா பேசுகையில், “இயக்குநர் ஞான ஆரோக்கிய ராஜா இந்த படத்திற்காக அவர் அனுபவித்த வலிகள் பற்றி அவரின் குடும்பத்தார் சொல்லிய போது, அவைகள் என் கண் முன் நின்றது. ஒரு குடும்பமே இந்த படம் உருவாக காரணமாக இருக்கிறார்கள். நண்பர்கள் சேர்ந்து இப்படி படம் தயாரிப்பார்கள். ஆனால், இங்கு ஒரு குடும்பமே சேர்ந்து படம் தயாரித்திருப்பது வியப்பாக இருக்கிறது. அவர்களுக்கு என் பாராட்டுக்கள்…” என்றார்.

நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அனைத்து சிறப்பு விருந்தினர்களும் உரையாற்றிய பிறகு இசை குறுந்தகடு வெளியிடப்பட்டது.