April 18, 2024
  • April 18, 2024
Breaking News
January 22, 2021

யானையை எரித்துக் கொன்றதாக இருவர் கைது – யானை எரியும் அதிர்ச்சி வீடியோ

By 0 672 Views

நீலகிரி முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பொக்காபுரம் பகுதியில் 40 வயது ஆண் யானை முதுகில் காயத்துடன் சுற்றி வந்திருக்கிறது.

இந்த யானைக்கு வனத்துறையினர் இரண்டு மாதங்களுக்கு முன் மயக்க மருந்து கொடுத்து சிகிச்சை அளித்த்னர். ஓரளவு குணமடைந்த யானை மசினகுடி மக்கள் வசிக்கும் பகுதியில் நடமாடியது.

இதனால் பொது மக்களுக்கு, ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருந்ததால் யானையைப் பிடித்து முதுமலை புலிகள் காப்பகத்தில் வைத்து சிகிச்சை அளிக்க முடிவு செய்து துப்பாக்கி மூலம் யானைக்கு மயக்க மருந்து செலுத்தி இருக்கிறார்கள். யானை லேசாக மயக்கம் அடைந்தவுடன் கும்கி யானைகள் அருகே வந்த போது, காட்டு யானை தனது தும்பிக்கையை நீட்டியதாம். பின்னர் சிறிது நேரத்தில் யானை திடீரென கிழே விழுந்திருக்கிறது.

இதனால் பதறிப்போன வனத்துறையினர் நீரை யானையின் மீது ஊற்றி, உஷ்ணத்தை குறைத்தனர். பின்னர் மயக்கம் தெளிய மருந்து கொடுத்ததும், யானை லேசாக எழ முற்பட்டது.

வனத்துறையினர் கும்கி யானைகள் உதவியுடன் யானையை நிமிர்த்தி, பின்னர் லாரியில் ஏற்றி முதுமலை புலிகள் காப்பகத்துக் கொண்டு சென்றனர்.

ஆனால் யானை தெப்பக்காடு கொண்டு செல்லும் வழியில் லாரியிலேயே உயிரிழந்தது.
இறந்த யானை மன்றடியார் வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.

அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த யானையின் மீது சமூக விரோதிகள் சிலர் தீப்பந்தத்தை வீசியதாகவும், இதனால், காதின் ஒரு பகுதி சிதைந்து சுமாராக 40 லிட்டர் ரத்தம் யானையின் உடலில் இருந்து வெளியேறியது தெரிய வந்தது.

இந் நிலையில், மசினக்குடி அருகே குடியிருப்பு பகுதி அருகே வந்த யானையின் மீது சில மர்மநபர்கள் எரியும் டயரை தூக்கி எறிந்து இருக்கின்றனர்.

தீயில் எரிந்து கொண்டே இருந்த டயர், கீழே விழாமல் யானையின் காதில் சிக்கியதால்., வலியை தாங்க முடியாமல் அலறிக் கொண்டே யானை வனப்பகுதிக்குள் ஓடியுள்ளது.

இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த ஒருவரால் படம் பிடிக்கப்பட்டு அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இதை அடுத்து இன்று இரண்டு பேர் கைதாகி இருக்கிறார்கள். வைரல் வீடியோ கீழே👇