March 29, 2024
  • March 29, 2024
Breaking News
April 15, 2020

டைட்டானிக் நினைவின் சடங்குகளையும் மூழ்கடி த்த கொரோனா..!

By 0 669 Views

பனிப் பாறையில் மோதி டைட்டானிக் கப்பல் விபத்துக்குள்ளானதன் 108வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இதையொட்டி வழக்கமாக அமெரிக்கா, இங்கிலாந்து மட்டுமின்றி நடுக்கடலிலும் அஞ்சலி நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இந்த வருடம்..?

இங்கிலாந்தின் லிவர்பூல் நகரை சேர்ந்த ‘ஒயிட் ஸ்டார் லைன்’ நிறுவனம் மாபெரும் சொகுசு கப்பலை உருவாக்கியது.

அயர்லாந்தின் பெல்ஃபாஸ்ட் நகரில் உள்ள ஹார்லேண்ட் அண்ட் உல்ப் கட்டும் தளத்தில் ‘டைட்டானிக்’ கட்டும் பணி 1909ல் துவக்கப்பட்டு 1911ல் நிறைவடைந்தது.

முதலாவது பிரமாண்ட சொகுசு கப்பல் என்ற வகையில் உலகையே வியக்க வைத்த டைட்டானிக் தனது முதல் பயணத்தை இங்கிலாந்தின் சவுத்ஆம்டன் துறைமுகத்தில் இருந்து 1912ம் ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி துவக்கியது. இங்கிலாந்திலிருந்து அமெரிக்கா செல்வது பயணத் திட்டம்.

பல நாடுகளை சேர்ந்த கோடீஸ்வரர்கள், மிடில் கிளாஸ் மக்கள், கப்பல் ஊழியர்கள், தொழிலாளர்கள் என மொத்தம் 2,223 பேர் கப்பலில் இருந்தனர்.

சவுத் ஆம்டனில் 922 பயணிகளுடன்தான் புறப்பட்டது. மற்றவர்கள் செர்பர்க் மற்றும் குயின்ஸ் டவுனில் ஏறிக்கொண்டனர். தெற்கு அயர்லாந்தின் கார்க் துறைமுகத்தில் இருந்து அட்லான்டிக் கடலில் பயணத்தை துவக்கியது டைட்டானிக்.

அட்லான்டிக் கடலில் அமெரிக்காவுக்கு கிழக்கே உள்ள தீவு நியூஃபவுண்ட்லேண்ட். இதற்கு தெற்கே சுமார் 600 கி.மீ. தொலைவில் ஏப்ரல் 14ம் தேதி இரவு வந்து கொண்டிருந்தது டைட்டானிக்.

எதிர்பாராதவிதமாக, கடலுக்கு அடியில் உள்ள நீரோட்டத்தின் காரணமாக அடித்து வரப்பட்ட பிரமாண்ட பனிப் பாறையின் மீது இரவு 11.40 மணியளவில் மோதியது கப்பல்.

மோதிய இடத்தில் உடைப்பு ஏற்பட்டதில், கடல் நீர் உள்ளே புகத் தொடங்கியது. படிப்படியாக ஒவ்வொரு இடத்திலும் நீர் புகுந்தது. என்ன நடக்கிறது என்று பலருக்கு தெரியவில்லை.

தெரிந்தவர்களுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. கப்பல் பிளந்தது. தப்பிப்பதாக நினைத்து பலர் குதித்தனர். அதிகாலை 2.20க்குள் கப்பல் முழுவதும் மூழ்கியது.

கப்பலில் இருந்த மீட்பு படகுகள் உதவியுடன் 709 பேரை மட்டுமே மீட்க முடிந்தது. மற்ற 1514 பேரும் பரிதாபமாக பலியானது வரலாற்றின் சுவட்டில்  அழிக்க முடியாத சோகத்தை பதிவு செய்தது.

உலகையே வியக்க வைத்த பிரமாண்ட சொகுசு கப்பலின் சகாப்தம் அட்லான்டிக் மகா சமுத்திரத்தில் மூழ்கிப் போன சோக நாளின் 108வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

கப்பல் புறப்பட்ட சவுத்ஆம்டன், வழியில் இருந்த செர்பர்க், குயின்ஸ்டவுன், செல்லவிருந்த நியூயார்க் நகரம் மட்டுமின்றி விபத்து சம்பவம் நடந்த நடுக்கடலிலும் இன்று அஞ்சலி நிகழ்ச்சிகள் நடக்கின்றன. (கொரோனா பீதியால் இந்தாண்டு சடங்காக நடத்தப்படுமாம்)

வழக்கமாக ஃபவுண்ட்லேண்ட் தீவில் இருந்து ஏராளமானோர் இன்று படகுகளில் விபத்து நடந்த இடத்துக்கு சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்துவர். அயர்லாந்து, கனடாவிலும் நினைவு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அமெரிக்கா, இங்கிலாந்தின் முக்கிய நகரங்களில் நடந்த அஞ்சலி ஊர்வலங்களில் மெழுகுவர்த்தி ஏந்தி ஏராளமானோர் பங்கேற்பர்.

டைட்டானிக் கப்பலில் சென்று உயிரிழந்தவர்களின் வாரிசுகள் கலந்துகொண்டு, இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவார்கள். அதைக் கூட செய்ய விடாமல் இந்த கொரோனா செய்து விட்டது.