August 4, 2025
  • August 4, 2025
Breaking News
July 28, 2025

தலைவன் தலைவி திரைப்பட விமர்சனம்

By 0 45 Views

“கதை கதையாம் காரணமாம், காரணத்தில் தோரணமாம்…” என்று ஒரு முதிர் மொழி வரும். 

ஆனால் காரணமே இல்லாமல் தோரணம் அமைக்க முடியும் என்பதை இந்தப் படம் மூலம் உலகுக்கு உணர்த்தி இருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ்.

‘ குடும்பம் என்று வந்துவிட்டாலே… அதுவும் கூட்டுக் குடும்பம் என்றாலே கணவன் மனைவி உறவுக்குள் அடிக்கடி பிணக்கு வந்துவிடும். பிரிவதும், பின் கூடுவதுமாக செல்லும் மனித வாழ்க்கையில் சுவாரசியமே அதுதான்…’ என்பதை மையப் புள்ளியாக வைத்து ஒரு முழு நீ….ள திரைக்கதை சொல்லி இருக்கிறார் அவர்.

குல தெய்வக் கோயிலில் வைத்து விஜய சேதுபதி – நித்யா மேனன் தம்பதியின் பெண் குழந்தைக்கு மொட்டை அடிக்கும் வைபவம் தொடங்குகிறது. ஒரு பக்கத்து மூடியை சரக்கென்று வழித்தவுடன் ஆரம்பிக்கிற குடும்பச் சண்டையில் விஜய் சேதுபதி குடும்பம் ஒரு பக்கமாகவும் நித்யா மேனன் குடும்பம் ஒரு பக்கமாகவும் நின்று அடித்துக் கொள்கிறார்கள்.

இதில் ‘ தேமே ‘ என்று சாமி கும்பிட வந்த காளி வெங்கட்டும் அவர் மனைவி குழந்தைகளும் இரு குடும்பத்துக்கும் மத்தியஸ்தம் பண்ணப் போய் மத்தியில் சிக்கிக் கொள்கிறார்கள். 

தலைவன் தலைவிக்குள் என்ன பிணக்கு என்பதைத்தான் ஃப்ளாஷ் பேக், ஃப்ளாஷ் பேக்,  ஃப்ளாஷ் பேக், ஃப்ளாஷ் பேக்… (இதை படிக்கிற உங்களுக்கு கொல்ல வேண்டும் போல் கோபம் வருகிறதா இல்லையா… படம் பார்ப்பவர்களுக்கு எப்படி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்…) ஃப்ளாஷ் பேக்குகளாகப் போய் கதையைச் சொல்லி முடித்து அதே கோவிலில் இருந்து சற்று தொலைவில் முடிகிறது கதை.

வித்தியாசமாக நடிக்கிறேன் பேர்வழி என்று விஜய் சேதுபதி இதில் காட்டுக் கத்தல் போடும் ஒரு பாத்திரத்தை முயற்சி செய்திருக்கிறார். அவர் கத்துக்கிற கட்டில் நம் காது சவ்வெல்லாம் கிழிந்து தொங்குகிறது. 

உண்மையில் அவர் எப்படிப்பட்ட கேரக்டர் என்பதை நம்மால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. அவர்கள் குடும்பமே நடத்தும் ஹோட்டலில் பரோட்டா மாஸ்டராக இருக்கும் அவருக்கு படிப்பறிவு இலலை என்பதுதான் குறை. ஆனால் பட்டறிவு கூடவா இருக்காது..?

அவருக்கு நித்யா மேனனை திருமணம் செய்து வைக்கிறார்கள். அவர்கள் இருவரும் பரோட்டாவும் சால்னாவும் போல் இனிய இல்லறம் நடத்தி வந்தாலும், போகப்போக நித்யாவின் கை குடும்பத்தில் ஓங்குவதை விஜய் சேதுபதியின் அம்மாவாலும், சகோதரியாலும் தாங்க முடியாமல் அவர்கள் செய்யும் திரிசமத்தால் கணவன் மனைவிக்குள் பிரச்சனை வெடிக்கிறது.

அந்த பிரச்சனையில் நித்யவின் அம்மாவும் தூபம் போட, அடிக்கடி பிரிந்து சேரும் அவர்கள் ஒரு கட்டத்தில் மாதக் கணக்கில் பிரிந்த வேளையில்தான் விஜய் சேதுபதி கூப்பிடாமல் அவர்கள் குழந்தைக்கு மொட்டை போடும் வைபவத்தை நித்யா வீட்டினர் நடத்த கோயிலில் ஆரம்பிக்கிறது குடுமிப்பிடி சண்டை.

விஜய் சேதுபதி கேரக்டரை எப்படி நம்மால் பின் தொடர முடியவில்லையோ, அதேபோல்தான் நித்தியா மேனனின் கேரக்டரும். பன் பரோட்டா காட்சியளிக்கும் அவர் எதற்கெல்லாம் கோபப்படுவார், எதற்கு விட்டுக் கொடுக்கிறார் என்று தெரியாத அளவில் சரமாரியாக கணவனை நோகடிக்கிறார். 

இதற்கெல்லாம் காரணம் தன்னுடைய அம்மா தீபா சங்கர்தான் என்று தெரிந்தும் விஜய் சேதுபதி அம்மாவை கண்டிக்காததும் அல்லது தனிக்குடித்தனம் போகாததும் ஏன் என்று தெரியவில்லை. 

அதேபோல் தன் மனைவிதான் எல்லாவற்றுக்கும் காரணம் என்று நன்றாக தெரிந்தும் விஜய் சேதுபதியின் அப்பாவாக வரும் பருத்திவீரன் சரவணன் வாயில் பரோட்டாவை அடைத்தது போல் எதுவும் பேசாமல் இருப்பதும் அநியாயம். 

அந்தப் பக்கத்தில் நித்யா மேனன் வீட்டிலும் அப்படியே. நித்யா மேனனின் அப்பா செம்பன் வினோத்துக்கு தன் மனைவி ஜானகி சுரேஷ்தான் பிரச்சனையின் மூல காரணம் என்று தெரிந்தாலும் அவரைக் கண்டிக்கவே மாட்டார். இதற்கும் அவர் பெரிய ரவுடியாம்.

ஆனால் ஒரே ஒரு பெரிய ஆறுதல் எந்த சரக்கும் இல்லாத இந்த படத்தை கலகலப்பான திரை மொழியில் சொல்லி இருப்பதுதான்.

காரணம் இல்லாமல் சிரிக்க வைத்தாலும் கலகலப்பாக நகர்ந்து விடுகிறது படம். அதிலும் கூட திரும்பவும் ரிப்பீட் ரிப்பீட் என்று வருவது மகா எரிச்சல். 

இந்தப் படத்தில் உலக மகா ஆச்சரியங்கள் ஒன்று நெடுநாள் கழித்து யோகி பாபு வரும் காட்சிகளை எல்லாம் நம்மால் சிரிக்க முடிவது.

விஜய் சேதுபதியும் நித்யாவும் வேலையினூடே தாளம் போட்டுத் தங்கள் காதலை பகிர்ந்து கொள்ள அந்த தாளக் கட்டைத் தன்னுடைய தாளத்தின் மூலம் யோகி பாபு நிறுத்தும் காட்சியில் தியேட்டர் வெடிக்கிறது.

சரவணன் – தீபா சங்கர், செம்பன் வினோத் – ஜானகி சுரேஷ், ஆர்.கே.சுரேஷ், காளி வெங்கட், மைனா நந்தினி, வினோத் சாகர், ரோஷினி, செண்ட்ராயன்  ஏகப்பட்ட நட்சத்திரங்கள் படம் நெடுக. ஆனால் எல்லோரும் தங்கள் பங்களிப்பை சரியாக செய்திருக்கிறார்கள்.

சந்தோஷ் நாராயணின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை அருமை . 

வழக்கமாக அவுட்டோரில் கலக்கும் ஒளிப்பதிவாளர் எம்.சுகுமார் அதே அளவுக்கு இண்டோரிலும்  வண்ணமயமாக படமாகி இருக்கிறார். 

அந்த தீபாவளி பட்டாசு சண்டை மாஸ். அதை வடிவமைத்த ஸ்டண்ட் மாஸ்டருக்கும் வாழ்த்துக்கள்..!

அடிப்படை இல்லாத குடும்ப பிரச்சனை என்றாலும் அதை கலகலப்பாக சொன்ன விதத்தில் ஜெயித்திருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ்.

நம்மை மறந்து பத்து இடங்களில் சிரிக்கிறோம். அதுவே இன்றைய சினிமாவில் வெற்றியின் சூத்திரம்.

கடைசி வரை விஜய் சேதுபதிக்கும் நித்யாவின் அண்ணன் ஆர்கே சுரேஷுக்கும் என்னதான் பகை என்பதை சொல்லவே இல்லை. அந்த விஷயம் எப்படி கதைக்கு தேவையில்லை என்று இயக்குனர் நினைத்தாரோ அதேபோல யோசித்தால் ஆர்கே சுரேஷின் பாத்திரமே கூட தேவையில்லை என்பது புரியும். 

தலைவன் தலைவி – பரோட்டா சால்னா..!

– வேணுஜி